2/13/11

"லைலா": துனிசியாவின் தனியார்மயக் கொள்ளைக்காரி

துனிசியாவின் முதல் பெண்மணியும், முன்னாள் அதிபர் பென் அலியின் இரண்டாவது தாரமுமான லைலா, அந் நாட்டு மக்களால் அதிகம் வெறுக்கப்பட்ட நபராவார். லைலா பற்றிய மரியாதையான வார்த்தை எதுவும் சாதாரண மக்கள் வாயில் இருந்து வராது.
முதல் பெண்மணி பெயரை சொன்னால், பொது மக்கள் அவரை ஒரு "விலைமாது" என்று தூற்றுகின்றனர். டியூனிஸ் நகரில் சிகையலங்கார நிபுணராக பணியாற்றியவர், எப்படியோ பென் அலியின் மனத்தைக் கவர்ந்து விட்டார். பிடித்தாலும் புளியங் கொம்பாக பிடித்தார். வேறு யாரையாவது மணந்திருந்தால், தேசத்தின் பொருளாதாரத்தையே குடும்பச் சொத்தாக மாற்றியிருக்க முடியுமா?

லைலாவின் குடும்பப் பெயர் டிரபெல்சி (Trabelsi). (லிபிய தலைநகரமான திரிபோலியை சேர்ந்தவர்கள் என்று அர்த்தம்.) பென் அலி, 1992 ல் லைலாவை திருமணம் செய்து பட்டத்து ராணியாக்கியதுடன் நின்றிருந்தால் பரவாயில்லை. அவரது பத்துக்கும் குறையாத சகோதரர்கள், உறவினர்கள் எல்லோருக்கும் குறைந்தது ஒரு வர்த்தக நிறுவனமாவது பரிசாகக் கிடைத்தது. துனிசியா புரட்சிக்கு வித்திட்ட காரணிகளில் ஒன்றாக கருதப்படும் விக்கிலீக்ஸ் கேபிளிலும் அந்த தகவல் குறிப்பிடப்பட்டது. துனிசியா ஊழலினால் உள்ளுக்குள் அழுகிக் கொண்டிருப்பதை அமெரிக்க தூதுவரே எழுதியுள்ளார். பென் அலியின் மனைவி லைலாவும், அவரது டிரபல்சி இனக்குழுவும் மாபியா கிரிமினல்கள் போன்று செயற்படுவதாக குற்றஞ்சாட்டியிருந்தார். மக்கள் எழுச்சியின் பொழுது, லைலாவினதும், அவரது உறவினர்களுக்கும் சொந்தமான நிறுவனங்கள் யாவும் தாக்கப்பட்டன. அவை சூப்பர் மார்க்கெட்கள் என்றால், அங்கிருந்த பொருட்களை மக்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

ஐ.எம்.எப். முன்னெடுக்கும் பொருளாதாரத்தை தனியார்மயமாக்கும் திட்டம் பல நாடுகளில் ஊழலுக்கு காரணம். முன்பெல்லாம் இதைச் சொன்னால், "இடதுசாரிகளின் வெற்றுப் பேச்சு" என்று முதலாளித்துவ ஆதரவாளர்கள் நிராகரித்து வந்தார்கள். ஆனால் துனிசியா தொடர்பான விக்கிலீக்ஸ் கேபிள், தனியார்மயத்தினால் விளைந்த தீமைகளை விலாவாரியாக எடுத்துச் சொல்கின்றது. ஐ.எம்.எப். தனியார்மயத் திட்டத்தை செயற்படுத்த ஆலோசனை கூறிய உடனேயே, பென் அலியின் குடும்ப உறுப்பினர்கள் அரச நிறுவனங்களை வாங்கி விட்டார்கள். ஆளும் வர்க்கம் என்பதால், தனியார்மயமாக்கல் என்ற பெயரில், அவர்களே அரச நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கினார்கள். பின்னர் அதே நிறுவனங்களை பிற தொழிலதிபர்களுக்கு இலாபத்துடன் விற்றுள்ளனர். விக்கிலீக்ஸ் கேபிளில் அமெரிக்க இராஜதந்திரியே அப்படியான சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுகின்றார்.

ஐ.எம்.எப். தனியார்மயத்தை அறிவிப்பதற்கு முன்னமே, பென் அலியின் புதல்வன் மார்வன் மப்ரூக் "Attijari வங்கி" யின் 17 % பங்குகளை வாங்கினார். தனியார்மய அமுலாக்கத்தின் போது, 35 % பங்குகளாக அதிக லாபத்திற்கு விற்கப்பட்டன. துனிசியாவில் தனியார்மயமாக்கல், அந்த "தேசத்தின் மாபெரும் பகற்கொள்ளை" என்று அழைக்கப்படுகின்றது. துனிசியாவின் பொருளாதாரத்தில் எந்தத் துறையையும் டிரபல்சி குழுவினர் விட்டு வைக்கவில்லை. வங்கி,ஹோட்டல், வீட்டு மனை, போக்குவரத்து, தொலைத்தொடர்பு எல்லாவற்றிலும் அவர்களின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறந்தது. தனியார்மயமாக்கல் என்ற பெயரில் நாட்டை கொள்ளையடித்த டிரபல்சி ஆளும் வர்க்கம், மக்கள் எழுச்சியைக் கண்டு ஓடி ஒளிந்தது. விமான நிலையத்தில் தப்பியோட முயன்ற டிரபல்சி உறுப்பினர் ஒருவர், இனந்தெரியாத நபர்களால் குத்திக் கொல்லப்பட்டார்.

ஜனாதிபதி பென் அலி குடும்பம் நாட்டை விட்டு தப்பியோடும் பொழுதும் வெறுங்கையோடு ஓடவில்லை. மத்திய வங்கியின் சேமிப்பில் இருந்த தங்கத்தை கொள்ளையடித்துக் கொண்டு சென்றார்கள். 45 மில்லியன் யூரோ பெறுமதியான, ஒன்றரை தொன் தங்கப்பாளங்கள் பென் அலியின் மனைவி லைலா தன்னோடு எடுத்துச் சென்றுள்ளார். முதலில் லைலாவின் கையில் தங்கத்தை கொடுக்க மத்திய வங்கி நிர்வாகி மறுத்து விட்டாலும், பென் அலி வற்புறுத்தியதால் கொடுத்திருக்கிறார். பென் அலி குடும்பம் தற்போது சவூதி அரேபியாவின் ஜெத்தா நகரில், கொள்ளையடித்த தங்கத்துடன் ஓய்வெடுக்கின்றனர். லைலா சவூதி அரேபியாவில் தஞ்சம் புகுந்த செய்தியை கேள்விப்பட்ட துனிசியா மக்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். ஏனென்றால், துனிசியாவில் பெண்கள் பர்தா அல்லது முக்காடு அணிவதை தடை செய்யும் சட்டத்தை கொண்டு வந்தவர் அவர் தான். இன்று பழமைவாத சவூதி அரேபியாவில், லைலா கருப்பு ஆடையால் போர்த்து மூடிக் கொண்டு செல்லும் காட்சியை மனக்கண்ணால் கண்டு இரசிக்கின்றார்கள்.

துனிசிய புரட்சியில் இஸ்லாமிய- அரசியல்வாதிகள் பங்கெடுத்ததாக இது வரை எந்த தகவலும் இல்லை. வேலையில்லாப் பிரச்சினை, உணவுப் பொருட்களின் விலை உயர்வு, போன்ற பொருளாதாரக் காரணிகள் தான் துனிசியாவில் மக்கள் எழுச்சியை தூண்டியது. இஸ்லாமியவாதிகளைப் பொறுத்த வரை, இவையெல்லாம் "காலாவதியான இடதுசாரிகளின் கொள்கைகள்." "மக்களுக்கு வாயும், வயிறும் முக்கியமல்ல. உயிரை விட மத உணர்வு மேலானது." என்று நம்மூர் தமிழ் உணர்வாளர்கள் போல வாதாடுகிறவர்கள். அவர்கள் இந்த புரட்சியில் கலந்து கொள்வார்களா? அரபுலகின் முதலாவது புரட்சியில் துனிசிய கம்யூனிஸ்ட்கள், சோஷலிஸ்டுகள் பெருமளவில் கலந்து கொண்டனர். கணிசமான அளவு பெண்களும் ஆர்ப்பாடங்களில் பங்கெடுத்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

0 comments: