9/7/10

காசுமீரிகள் ஏன் கல்லெறிகின்றார்கள் ? - 1

வெனிசுவேலாவின் அதிபர். ஹியூகோ சாவேசை நோக்கி நடைபெற்ற சதிபுரட்சியில் எப்படி ஊடகங்கள் எல்லாம் மக்களை நோக்கி கலவரக்காரர்கள் சுடுவதைப் போல திரும்ப திரும்பக் கூறி மனித உரிமை படுகொலைகள் நிகழ்ந்து விட்டதாக உண்மைக்கு புறம்பாக சித்தரித்தன‌வோ. அதே போல காசுமீரிகள் கல்லெறிவதை மட்டும் திரும்ப, திரும்ப காட்டி கல்லெறிவதை ஏதோ பயங்கரவாதத்தின் இன்னொரு வடிவம் போல சித்தரிக்க முயல்கின்றன‌‌ செய்தி ஊடகங்கள். இதன் ஒரு பகுதியாக தான் “நல்ல வேளை என் மீது செருப்பைத் தான் எறிந்தார், கல்லை அல்ல என்ற காசுமீரின் முதல்வர் பரூக் அப்துல்லாவின்” பேச்சைக் பார்க்க வேண்டியுள்ளது. ஆனால் உண்மை அவ்வாறு இல்லை. இந்த பொய்யை மட்டுமே கூறும் ஊடகங்களுக்கு நடுவே க‌ட‌ந்த‌ வார‌ம் தெக‌ல்கா வார‌இத‌ழில் வெளிவ‌ந்ததுள்ளது இந்த‌ க‌ட்டுரை. காசுமீரிகள் ஏன் கல்லெறிகின்றார்கள் ? என்ற கேள்விக்கு விடை தான் இந்த கட்டுரை. கட்டுரையாளர் சாகித் இரஃபிக் ஒரு காசுமீரி, இவர் தில்லியில் வாழ்ந்துவரும் ஒரு ஊடகவியலாளர்.
…………………………………………………………….

நான் எப்பொழுதும் ச‌ண்டையை விரும்பிய‌து கிடையாது. க‌ல்லூரி கால‌ங்க‌ளில் என் ந‌ண்ப‌ர்க‌ள் குழு என்னை எப்போதும் கோழை என்றே விம‌ர்ச‌ன‌ம் செய்வார்க‌ள். என்னால் ஒரு உட‌ல் வ‌லு இல்லாத‌வ‌னை கூட‌ அடிக்க‌ இயலாது என்றும் கூட சொல்வார்க‌ள். ஆனால் நான் கோழை அல்ல‌. என்னை பொருத்த‌வ‌ரை பெரும்பான்மையான‌ ச‌ண்டைக‌ள் ப‌ய‌னில்லாத‌வை. அகிம்சாவாதி என்ற வார்த்தை என‌க்கு பிடிக்காது என்றாலும் நான் ஒரு அகிம்சாவாதி தான். வ‌ன்முறையை விட பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தை, க‌ருத்து விவாத‌ங்கள் போன்ற ப‌‌ல‌ ந‌ல்ல‌ வ‌ழிக‌ள் உள்ள‌ன‌ என்ப‌தே என் க‌ருத்து.

ஆனால் இன்று நான் ஒரு ஊட‌க‌விய‌லாள‌னாக‌ எழுத்தை எதிர்ப்பின் ஒரு அடையாளமாக நான்‌ கொண்டிருக்காவிட்டால், என‌து ந‌ண்ப‌ர்க‌ளை போலே நானும் காசுமீர‌த்து ந‌க‌ர‌வீதிக‌ளில் க‌ல்லெறிந்து கொண்டிருப்பேன்.

ஆரம்ப காலங்களில் காசுமீரில் நான் கண்ட அடக்குமுறைகளும், ப‌டுகொலைகளும் என்னுள் எப்பொழுதும் ஒரு தெளிவின்மையை ம‌ட்டுமே ஏற்ப‌டுத்தி வ‌ந்த‌ன‌. ஆனால் க‌ட‌ந்த‌ இரு மாத‌ங்க‌ளாக‌ காசுமீரில் ந‌ட‌ப்ப‌வை எல்லாம் தெளிவான நீரோடையை போல‌‌ உள்ளது‌. உல‌க‌ம் காசுமீரில் ந‌ட‌ப்ப‌தை க‌ண்டும் காணாம‌ல் வாய் மூடி மௌனித்துள்ள‌து. இந்த‌ மௌன‌ம் அகிம்சாவாத‌த்தை தின‌மும் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ தின்றுகொண்டே வ‌ருகின்ற‌து. இந்த கள்ள மௌனமே எல்லா வ‌ன்முறைக‌ளும் ஆர‌ம்பிக்க‌ கார‌ண‌மாகும்.

வீட்டிலிருந்து வ‌ருகின்ற‌ எல்லா அலைபேசி அழைப்புக‌ளுமே இத‌ய‌த்தை பிள‌க்க‌க் கூடிய‌ செய்திகளாக‌ உள்ள‌ன‌. என்னுள் வ‌ன்முறை கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் வ‌ள‌ர்வ‌தை உண‌ர்கின்றேன் நான். எங்க‌ள் வீட்டின் அருகிலுள்ள‌ காய்க‌றி க‌டைக்கார‌ர் அர‌ச ப‌டைக‌ளால் சுட்டுக் கொல்ல‌ப்ப‌ட்டார் என்று என் அம்மா என‌க்கு கூறிய‌ போது நான் தில்லியில் இருந்தேன். நான் காசுமீரிலிருந்து தில்லிக்கு வ‌ரும் முன்பு என் ப‌க்க‌த்து வீட்டிலிருந்து க‌டைசி ந‌ப‌ர் அவர் ஒருவர் ம‌ட்டும் தான். விடைபெறும் முன் இருவ‌ரும் புன்ன‌கையை ப‌ரிமாறிக் கொண்டோம். ஆனால் இப்பொழுது என் மனதை க‌டுங்கோப‌ம் சூழ்ந்துகொண்டுள்ள‌து. ம‌த்திய‌ ஆயுத‌ப் படையைச் சேர்ந்த‌வ‌ர்க‌ள் மிக‌க்க‌டுமையான‌ கோப‌த்துடன் வீடுகளின் சாளரக் கண்ணாடிகளை உடைத்து, வீட்டினுள்ளே உள்ள‌ அனைவ‌ரையும் க‌டுமையாக‌ தாக்குகின்ற‌ன‌ர் என‌ என்னிட‌ம் கூறினான் என் த‌ம்பி.

தில்லியில் காசுமீரை மேற்பார்வையிடும் நிறுவ‌ன‌ம் ஒன்றில் வேலை செய்யும் என் ந‌ண்ப‌ன் க‌ட‌ந்த‌ வார‌ம் ஒரு நாள் மாலையில் என்னை அழைத்தான். அவ‌ன‌து ப‌ணிக‌ளுக்கு இடையிலும் அவ‌ன் காசுமீரில் அர‌ச‌ ப‌டையினால் அடித்தே கொல்ல‌ப்ப‌ட்ட‌ ஒன்ப‌து வ‌ய‌து சிறுவ‌ன் ச‌மீர் அக‌ம‌தின் உட‌லை அவனும் பார்த்திருப்பான் என‌ நினைக்கின்றேன்.அவ‌ன‌து உட‌லெங்கும் ல‌த்தி குச்சியின் வ‌ரிக‌ள் சாரை, சாரையாக‌ உள்ள‌ன‌. அவ‌ன் தின்று கொண்டிருந்த‌ மிட்டாயின் மீத‌ம் இன்னும் அவ‌ன‌து வாயில் அப்ப‌டியே உள்ள‌து. நான் அவ‌னை ச‌மாத‌ன‌ப்ப‌டுத்த முயல‌ இறுதியில், இருவரும் ஒருவரை ஒருவர் ச‌மாத‌ன‌ப்ப‌டுத்திக் கொண்டோம். அடுத்த‌ நாள் காலை அவ‌ன் தில்லியிலிருந்து காசுமீருக்கு செல்ல‌ப் போவ‌தாக‌ கூறினான். “இங்கு எல்லோரும் பொய்யை ம‌ட்டுமே கூறுகின்ற‌ன‌ர். மேலும் அவ‌ர்களின் பொய்யை அவ‌ர்க‌ள் உண்மையென்று ந‌ம்புகின்றார்க‌ள்” என்றான் அவ‌ன்.

இந்தியாவில் ஒரு “பொய்” எல்லோராலும் ப‌ர‌வ‌லாக‌ ந‌ம்ப‌ப்ப‌டுகின்ற‌து, அதாவ‌து அர‌ச‌ ப‌டைக‌ள் காசுமீர‌த்து ம‌க்க‌ளை பாதுகாக்கின்ற‌ன‌ர் என்ப‌தே அந்த‌ “பொய்”. ஆனால் காசுமீரிக‌ள் தாங்க‌ள் அர‌ச‌ப‌டைக‌ளால் பாதுகாக்க‌ப்ப‌டுவ‌தாக‌ ந‌ம்புவ‌தே இல்லை. இந்தியாவில் உள்ள‌வ‌ர்க‌ள் அர‌ச‌ப‌டையை “பாதுகாவ‌ல‌ர்கள்” என்றும், அவ‌ர்க‌ள் தான் தீவிர‌வாதிக‌ளிட‌ம் இருந்து காசுமீரிக‌ளை பாதுகாக்கின்ற‌ன‌ர் என்றும் எண்ணுகின்ற‌ன‌ர். ஆனால் அவ‌ர்க‌ளிட‌ம் இருந்து தான் காசுமீரிக‌ளை பாதுகாக்க‌ வேண்டியுள்ள‌து என்ப‌தே உண்மை. காசுமீரிக‌ள் த‌ங்க‌ளை ஆக்கிமிர‌த்துள்ள‌ இந்த‌ ப‌டைக‌ள் த‌ங்க‌ள் நில‌த்தை விட்டு வெளியேற‌ வேண்டும் என்று கோருகின்ற‌ன‌ர். அர‌ச‌ப‌டைக‌ள் மீது அவ‌ர்க‌ள் கொண்டுள்ள‌ உண‌ர்வு ப‌யம், வெறுப்பு, பழிஉணர்ச்சி போன்ற‌வை ம‌ட்டுமே.

க‌ட‌ந்த‌ இர‌ண்டு மாத‌த்தில் ம‌ட்டும் காவ‌ல் துறை ம‌ற்றும் ம‌த்திய‌ பாதுகாப்பு ப‌டை சுட்ட‌தில் 55 ஆயுத‌ம் ஏந்தாத‌ பொதும‌க்க‌ள் காசுமீரில் கொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர். இவ‌ர்க‌ளில் பெரும்பாலானோர் சிறுவ‌ர்க‌ள். ஒன்று இவ‌ர்க‌ள் க‌ல்லெறிந்து கொண்டிருந்திருக்க‌லாம் அல்ல‌து அண்டை வீடுக‌ளில் விளையாடிக் கொண்டிருந்திருக்கும் போது சுடப்பட்டிருக்கலாம். காசுமீரில் ப‌த‌ட்ட‌நிலை ஆர‌ம்பிக்கும் கால‌க‌ட்ட‌ங்க‌ளில் நான் அங்கு இருந்தேன். ஒவ்வொரு இறுதி ஊர்வ‌ல‌த்திற்கும் சென்ற‌ நான் ம‌க்க‌ள் மிகக்கடுமையான‌ கோப‌த்துட‌ன் இருப்ப‌தை க‌ண்டேன். க‌ங்ப‌க் என்ற‌ ப‌குதியில் 17 வ‌ய‌து சிறுவ‌னின் இறுதி ஊர்வ‌ல‌த்தில் ஊர‌ட‌ங்கு உத்த‌ர‌வை மீறி ஆயிர‌க்க‌ண‌க்கானோர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர். அவ‌ன‌து இரு ந‌ண்ப‌ர்க‌ள் அவ‌னை காவ‌ல்துறை அழைத்துச் சென்ற‌தாக‌வும், பின்னால் அவ‌ன் நீரில் மூழ்கி இற‌ந்துவிட்டான் என‌ காவ‌ல் துறையை கூறிய‌தாக‌வும் ஊட‌க‌ங்க‌ளுக்கு சொன்னார்க‌ள். ஆனால் இற‌ந்த‌ சிறுவ‌ன் ந‌ன்கு நீச்ச‌ல் தெரிந்த‌வ‌ன், ர‌ண‌ அறுவை சிகிச்சையில் த‌லையில் இரண்டு ப‌ல‌த்த‌ காய‌ங்க‌ள் இருப்ப‌து தெரிந்த‌து.

இத‌ற்கு ம‌று நாள் “NDTV” என்ற‌ செய்தி ஊட‌க‌த்தில் பேசிய‌ மாநில‌ முத‌ல்வ‌ர் ப‌ரூக் அப்துல்லா “அவ‌ன‌து ந‌ண்ப‌ன‌து உயிர் முக்கிய‌ம் என‌த் தெரிந்திருந்தால், இந்த‌ இருவ‌ரும் அவ‌னை நீரிலிருந்து காப்பாற்றியிருக்க‌ வேண்டிய‌து தானே” என‌ கேட்டார். இவ்வாறு கேட்ப‌த‌ற்கு ப‌ரூக் அப்துல்லாவால் ம‌ட்டும் தான் முடியும், அதிகார‌வ‌ர்க்க‌த்தின் பார்வை இவ்வாறு தான் இருக்கும். இவ‌ர்க‌ளை பொருத்த‌ வ‌ரையில் காசுமீரிக‌ள் “PDP” யின் ப‌ண‌த்திற்காக‌வும், பாகிசுதானின் உள‌வு நிறுவ‌ன‌ங்க‌ளுக்காக‌வும் உயிரை விடும் த‌ர‌க‌ர்க‌ள் தானே. இந்தியாவில் 40 ஆண்டு கால‌ம் வாழ்ந்த‌தால் ப‌ரூக் அப்துல்லாவிற்கு இந்த உலகப்பார்வை வ‌ந்துள்ள‌து. முஃப்திக‌ளோ இவ‌ர்க‌ளை விட‌ மோச‌ம், அவ‌ர்க‌ள் எப்பொழுது பிரிவினை கோருவார்க‌ள், எப்பொழுது இந்திய‌ தேசிய‌வாதிக‌ளாக‌ மாறுவார்க‌ள் என்ப‌து யாருக்குமே தெரியாத‌ ஒன்று. அவ‌ர்க‌ளின் தேவை எல்லாம் ஆட்சி அதிகார‌ம் ம‌ட்டும் தான். ம‌த்திய‌ அர‌சு ப‌ரூக் அப்துல்லாவை தூக்கியெறிந்து விட்டு மெக‌பூபாவை முத‌ல் ம‌ந்திரி ஆக்க‌வேண்டும் என்ப‌தே அவ‌ர்க‌ள் எண்ண‌ம்.

காசுமீரிக‌ளுக்கும், அப்துல்லாக்க‌ளுக்கும் இடையில் மிக‌ப்பெரிய‌ இடைவெளி உள்ள‌து. காசுமிரீக‌ளை நோக்கி எப்பொழுதும் துப்பாக்கிக‌ள் த‌யாராக‌ இருக்கும், அப்துல்லாக்க‌ளை நோக்கி அல்ல. தங்கள் உயிரை பற்றிய கவலையில்லாமல் ஏன் தடையையும் மீறி இறுதி ஊர்வலத்திலும், அரச படைகளை எதிர்த்தும் கல்லெறிந்து கொண்டிருக்கின்றனர் என அப்துல்லாக்க‌ளும், முப்திக்க‌ளும் புரிந்து கொள்ள‌ ம‌றுக்கின்ற‌ன‌ர். இருப‌து வ‌ருட‌ கால‌ங்க‌ளில் இங்கு கொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌ 70,000 ம‌க்க‌ளின் புதைகுழிக‌ளில் த‌ங்க‌ள் பொய்யையும் சேர்த்தே அவ‌ர்க‌ள் புதைத்து வ‌ந்துள்ள‌ன‌ர். ஒரு கால‌த்தில் தேசிய‌ காங்கிர‌சின் தீவிர‌மான‌ ஊழிய‌ராக‌ இருந்த‌ எங்க‌ள் உற‌வின‌ர் ஒருவ‌ர் பிற்கால‌த்தில் அதே க‌ட்சி காசுமீரிக‌ளுக்கு துரோக‌ம் செய்து விட்ட‌து என‌க் கூறினார் என்பத‌ன் பொருள் என‌க்கு இப்பொழுது தான் புரிகின்ற‌து. சேக் அப்துல்லா டோர்கா ம‌ன்ன‌ர்க‌ளின் இரும்புப் பிடியிலிருந்து காசுமீரை மீட்டு அதை விட‌ மோச‌மான‌ அட‌க்குமுறை அர‌சிட‌ம் ஒப்படைத்து விட்டார் என‌ அவ‌ர் தின‌மும் கூறுவார்.

சிறீந‌க‌ரின் க‌சூரி பாக் ப‌குதியில் வ‌ய‌தான த‌ந்தை ஒருவ‌ர் கொல்ல‌ப்ப‌ட்ட‌ த‌ன‌து ம‌க‌னின் உடலை பிடித்து கொண்டிருந்த படத்தை பார்த்தேன். ஆனால் ஆறுக்கும் மேற்ப‌ட்ட‌ காவ‌ல்துறையின‌ர் அவ‌ரை அவ‌ர‌து ம‌க‌னின் உட‌லை விட்டு பிரித்துச் செல்ல‌ முய‌ன்று கொண்டிருந்த‌ன‌ர். ஆனால் அவ‌ர் ம‌க‌னின் உட‌லை விட்டு பிரியாம‌ல் அருகிலேயே இருந்தார். அவ‌ர‌து ச‌ட்டை ம‌க‌னின் இர‌த்த‌தில் ந‌னைந்து போன‌து, அவ‌ர‌து வெள்ளை தாடி இர‌த்தத்தால் சிக‌ப்பு நிற‌மான‌து. அந்த‌ ப‌ட‌த்தை நான் பார்க்க‌ பார்க்க‌ என்னுள் ஏற்ப‌டும் வ‌லியின் ர‌ண‌ம் அதிக‌ரித்துக் கொண்டே சென்ற‌து. இற‌ந்த‌ த‌ன‌து ம‌க‌னின் உட‌லை க‌ட்டிய‌ணைத்து த‌ன‌து சோக‌த்தை ஒரு தந்தை வெளிப‌டுத்துவ‌தை த‌விர‌ அவ‌ரால் என்ன‌ செய்ய‌ முடியும் என்று என‌க்கு தெரிய‌வில்லை. ப‌ரூக் அப்துல்லாவால் அந்த‌ த‌ந்தையை அட‌க்குமுறையை மீறி அர‌ச‌ ப‌டைக்கு எதிராக‌ க‌ல்லெறிவ‌தை த‌டுக்க‌ குடியுமா? அந்த‌ வ‌ய‌தான‌ ம‌னித‌ரின் இட‌த்தில் ப‌ரூக் அப்துல்லா இருந்திருந்தால் எப்ப‌டி ந‌ட‌ந்திருப்பார், ஒரு த‌ந்தையைப் போல‌வா? ஒரு முத‌ல்வ‌ரை போல‌வா?. இந்நேர‌ம் இந்ந‌க‌ரமே துண்டாட‌ப்ப‌ட்டிருக்காதா? சிறீந‌க‌ர‌ம் ப‌ற்றி எரிந்திருக்காதா?

த‌ங்க‌ளின் நேச‌த்திற்குரிய‌ இற‌ந்த‌ உற‌வுக‌ளை க‌ல்லெறிவதன் மூலமாகவும், அரசு வாகனங்களை எரிப்பதன் மூலமாகவும் மிகச்சிறிய அளவில் மட்டுமே நினைவு கொள்கின்றார்க‌ள் அவ‌ர்க‌ளின் த‌ந்தைக‌ள், ச‌கோத‌ர‌ர்க‌ள், உற‌வின‌ர்க‌ள், ந‌ண்ப‌ர்க‌ள். இது மட்டும் எப்ப‌டி த‌வறாகும்?