12/31/08

ஒரு தீவு, மூன்று தேசங்கள் (சைப்ரஸ் தொடர்-2)


சைப்ரஸ் என்ற சிறிய தீவில், இரண்டு சுதந்திர நாடுகள் ஒரு தலைநகரத்தை கொண்டுள்ளன. அதைவிட முன்னாள் காலனிய எஜமானான பிரித்தானியா ஒரு சிறு பகுதிக்கு உரிமையாளர். இனப்பிரச்சினையால் பிளவுபட்ட தேசம், முப்பது ஆண்டுகள் அமைதியின் பின்னரும் ஆறுதலடையவில்லை.


ஐரோப்பாவின் பிரிட்டிஷ் காலனி நாடான சைப்ரஸ், விடுதலைக்காக போராடியது EOKAS என்ற வலதுசாரி தேசியவாத இயக்கம். சுதந்திரத்திற்கு பின்னர் நீண்ட காலம் ஆட்சியமைத்த அந்த இயக்க வழிவந்த தலைவர் ஒருவரின் அண்மைய மரணம், மீண்டும் இனப்பிரச்சினை சர்ச்சைகளை உருவாக்கியது. சில தினங்களுக்கு முன்னர்(12 டிசம்பர்) சுவாசப்பை புற்றுநோயால் காலமான முன்னாள் சைப்ரஸ் ஜனாதிபதி தசொஸ் பபடோபுலோஸ்(Tassos Papadopoulos), இறந்த பின்னும் நீருபூத்த நெருப்பாக இருந்த இனப்பிரச்சினையை கிளறிவிட்டார். தெற்கு கிரேக்க சைப்ரஸ் ஊடகங்கள் யாவும் அவரை ஒரு தன்னிகரற்ற தேசியத் தலைவராக பாராட்டிக் கொண்டிருந்தன. என்னோடு பேசிய கிரேக்க சைப்ரஸ்காரர்கள், பிரிவினைவாத துருக்கி இனத்தவருக்கு ஒரு அங்குல நிலமேனும் விட்டுக்கொடுக்காத அரசியல் தலைவராக பார்த்தனர். இது சைப்ரஸ் இனப்பிரச்சினை தொடர்பாக அவர்களது புரிதல் சம்பந்தமானது. பெரும்பாலான கிரேக்க மொழிபேசுவோர் தமது நாட்டில் இனபிரச்சினை ஒருநாளும் இருந்ததில்லை என்றும், துருக்கியின் நில ஆக்கிரமிப்பு மட்டுமே ஒரு பிரச்சினை எனக் கூறினர். வயதான கிரேக்க சைப்ரஸ்காரர்கள் தமது இளமைக்காலத்தில் துருக்கி இன நண்பர்கள் இருந்ததாகவும், தமக்கிடையே எந்தவித பகை முரண்பாடுகள் இருக்கவில்லை என்றும் கூறினர்.



வடக்கு துருக்கி சைப்ரஸ் ஊடகங்கள் அதற்கு முற்றிலும் மாறான கருத்துகளை முன்வைத்தன. தசொஸ் பபடோபுலோசின் இறுதிச்சடங்குகளில் துருக்கியினத் தலைவர்கள் எவரும் கலந்து கொள்ளாதது சரியானதே என்றும், துருக்கி இனப்படுகொலைகளுக்கு காரணமான கடும்போக்கு கிரேக்க இனவாதியின் மரணம் சரித்திரமாகிப் போகட்டும் என்றும் குறிப்பிட்டன. அவை மேலும் கடந்த கால கசப்பான நினைவுகளை மீண்டும் இரைமீட்டன. EOKAS ஆயுதபாணிகள் வீதித்தடை சோதனை அரண்களை
அமைத்து, துருக்கி இளைஞர்களை வேறுபடுத்தி பிடித்துச் சென்று சித்திரவதை செய்து கொலை செய்தமை. துருக்கி கிராமங்களில் நுழைந்து வயோதிபர், பெண்கள், குழந்தைகள் என்று வேறுபாடு பார்க்காமல் கொன்று குவித்து மனிதப்புதைகுழிகளுக்குள் புதைத்தமை, அது மட்டுமல்லாது சில கிரேக்க மக்களையே உளவாளிகள் என்று சந்தேகத்தின் பேரில் கொலை செய்தமை... துருக்கி ஊடகங்கள் கொடுக்கும் தகவல்கள் இவ்வாறு நீண்டு செல்கின்றது. இது போன்ற சம்பவங்கள் சைப்ரசில் (1974 ம ஆண்டு துருக்கி படையெடுப்பிற்கு முன்னும் பின்னும்) நடந்துள்ளன என்பதையும், அதற்கு பொறுப்பான EOKAS ஆயுதபாணிகள் குற்றவாளிகள் என்பதையும் மிதவாத கிரேக்க மக்கள் மறுக்கவில்லை. ஆனால் காலஞ்சென்ற முன்னாள் ஜனாதிபதி(EOKAS தலைவர்களில் ஒருவராக இருந்தபோதும்) அந்த குற்றங்களை செய்யவில்லை என்கின்றனர். இது போன்ற இருதரப்பு சர்ச்சைகள் இன்னும் ஓயவில்லை என்ற உண்மை, இரண்டு இனங்களும் எவ்வளவு தூரம் பிரிந்து வாழ்கின்றன என்பதை எடுத்துக் காட்டுகின்றது.


வடக்கு சைப்ரஸ் பகுதிகளில் தமக்கென தனிநாடு கண்ட துருக்கி இனத்தவர்கள், தமது தேசத்தை சர்வதேசம் அங்கீகரிக்காத காரணத்தால், பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர். வீதிகளில் துருக்கி மொழியிலான பெயர்ப் பலகைகள் காணப்படுகின்றன. பாடசாலைகளில் துருக்கி மொழியில் மட்டுமே கற்பிக்கப்படுகின்றது.(ஆங்கில மொழிவழி சர்வதேச கல்லூரிகள் விதிவிலக்கு) ஆண்டு தோறும் துருக்கி வழங்கும் மில்லியன் டாலர் மானியம் மட்டும் இல்லையென்றால், இந்த தனி நாடு என்றோ திவாலாகி இருக்கும். வடக்கு சைப்ரசில் நான் சுற்றுப் பயணம் செய்த போது, துருக்கி நாட்டு வர்த்தக நிறுவனங்களின் ஆதிக்கத்தை நேரடியாக பார்க்கக் கூடியதாக இருந்தது. கடைகளில் துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் அதிகமாக காணப்பட்டன. துருக்கி நாணயமான லீரா புழக்கத்தில் உள்ளது. வடக்கு சைப்ரசின் பாதுகாப்பு முழுவதும், அங்கே நிலை கொண்டுள்ள துருக்கி இராணுவத்தின் கையில் உள்ளது. கணிசமான துருக்கியின சைப்ரஸ்காரர்கள் மத்தியில் துருக்கிக்கு எதிரான வெறுப்பு காணப்படுகின்றது. தமது சொந்த நாட்டில் தாம் சிறுபான்மையாகி வருவதாகவும், துருக்கியில் இருந்து வந்து குடியேறுபவர்கள் அதிகரித்து வருவதாக குறைப்படுகின்றனர். பல தொழில்வாய்ப்புகளை துருக்கியில் இருந்து வந்து குடியேறியவர்கள் அபகரிப்பதாகவும், சிறு வணிகம் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அவர்கள் நடத்துவதாகவும் முன்வைக்கப்படும் குற்றச் சாட்டுகளில் உண்மை இல்லாமல் இல்லை.

கிரேக்க சைப்ரஸ் பகுதிகள் எதிரான பிம்பம் ஒன்றை வழங்குகின்றது. வீதிகளில் கிரேக்க மொழியில் பெயர்ப்பலகைகள் தொடக்கம் எங்கும் எதிலும் கிரேக்க மொழி கோலோச்சுகின்றது. இரண்டு பகுதிகளிலும் ஆங்கில மொழி பயன்படுத்தப் படுகின்றது. கிரேக்க இன - துருக்கி இன இளம்தலைமுறை காலனிய மொழியான ஆங்கிலத்தில் மட்டுமே ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ள வேண்டும். கிரேக்க பகுதிகளில் முன்னாள் காலனியாதிக்க நாடான பிரித்தானியாவின் ஆதிக்கம் தொடர்கின்றது. பிரிட்டிஷ் வர்த்தக நிலையங்கள் பெரும் முதலீட்டில் கடை விரித்துள்ளன. அது தவிர அதிகளவு தேசிய வருமானத்தை ஈட்டித்தரும் உல்லாசப் பிரயாணிகள் பிரித்தானியாவில் இருந்து வருகின்றனர். ரியல் எஸ்டேட் துறையில் அதிகமான வீடுகளை வாங்குபவர்களும் பிரிட்டிஷ்காரர்கள் தான்.


தெற்கு சைப்ரசில் லிமசோல்(Limassol) நகரத்திற்கு அருகிலும், வடக்கு சைப்ரசில் பாமகுஸ்தா(Famagusta) நகரத்திற்கு அருகிலும், இரண்டு பிரிட்டிஷ் இராணுவத்தளங்கள் இப்போதும் உள்ளன. ஒவ்வொரு இராணுவ தளமும் குறைந்தது 20 அல்லது 30 கி.மி. பரப்பளவான சைப்ரஸ் நிலத்திற்கு வாடகை கொடுக்கின்றன. இந்த தளங்களுக்கென தனியான விமானநிலையங்கள் உள்ளன. இந்த இராணுவத்தளங்கள் சுயாதீனமானவை. சுருக்கமாக சொன்னால், பிரிட்டிஷ் அரசிற்கு சொந்தமானவை. அங்கே பிரிட்டிஷ் சட்டம் மட்டுமே செல்லுபடியாகும். பெருமளவு பிரிட்டிஷ் இராணுவவீரர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், பிற பணியாளர்கள் அந்த தளங்களில் சகல வசதிகளுடனும் வாழ்கின்றனர். அங்கே பவுன் நாணயம் புழக்கத்தில் உள்ளது. (சைப்ரஸ் நாணயம் யூரோ). இதைவிட மலைப்பகுதியான துரூடோசில்(Troodos) பிரிட்டிஷ் செய்மதி தொடர்பு நிலையமொன்று, மத்திய கிழக்கு நாடுகளை கண்காணித்து வருகின்றது. ஈராக்கிற்கு அனுப்பபட்ட அமெரிக்க படைகள், இந்த தளங்களை பயன்படுத்தின.

சைப்ரஸ் என்ற குட்டித் தீவில், வடக்கே துருக்கி நாடு, தெற்கே கிரேக்க நாடு, பிரிட்டனின் கடல்கடந்த பகுதி என்ற மூன்று தேசங்கள் உள்ளன. அதனை மெய்ப்பிப்பது போல, வடக்கே துருக்கி கொடியும், தெற்கே கிரேக்க கொடியும், பிரிட்டிஷ் இராணுவதளங்களில் பிரிட்டிஷ் கொடியும் பறக்கின்றன.
- தொடரும்.....
முன்னைய பதிவு:
இனப்பிரச்சினையின் பரிமாணங்கள் - ஒரு சைப்ரஸ் அனுபவம்

12/28/08

இனப்பிரச்சினையின் பரிமாணங்கள் - ஒரு சைப்ரஸ் அனுபவம்


வளர்ந்த நாடுகளிலும் இனப்பிரச்சினை வளர்ந்து வருகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த குட்டித் தீவான சைப்ரஸ் அதற்கொரு உதாரணம். விடுமுறைக்காக அந்த நாட்டில் தங்கியிருந்த நேரம், நான் அவதானித்த சுவையான சமூக-அரசியல் நிகழ்வுகளை, பின்னணி தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். ஒருவகையில் இது எனது பயணக்கட்டுரை என்றாலும், சர்வதேச சமூக கற்கைகளுக்கான உசாத்துனையாகவும் அமையும் என எதிர்பார்க்கிறேன்.

இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில், துருக்கிக்கும், கிரீசிற்கும் இடையிலான அதிகாகரப் போட்டியில் சிக்கி, இனரீதியாக இரண்டாக பிரிந்திருக்கும் தேசம் சைப்பிரஸ். பெரும்பான்மை கிரேக்க மொழி பேசும் மக்கள் வாழும், தீவின் 60% நிலப்பரப்பை கொண்ட, தெற்கு பகுதியே " சைப்ரஸ் குடியரசு" என்ற பெயரில் உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வடக்கே சிறுபான்மை துருக்கி மொழி பேசும் மக்கள் வாழும், 40 % நிலப்பரப்பை கொண்ட " வடக்கு சைப்ரஸ் துருக்கி குடியரசு" (சுருக்கமாக TRNC) தன்னை சுயநிர்ணய உரிமை கொண்ட, சுதந்திர நாடாக பிரகடனம் செய்தாலும், இதுவரை துருக்கியை தவிர வேறு எந்த நாடும் அதனை அங்கீகரிக்கவில்லை.

"பெர்லின் மதில்" வீழ்ந்ததை, குறிப்பிடத்தக்க சர்வதேச நிகழ்வாக எல்லோரும் அன்று கொண்டாடினார்கள். பெர்லின் மதில், இரண்டு அரசியல் கோட்பாடுகளை கொண்ட தேசங்களை பிரித்ததால், அதற்கு அவ்வளவு முக்கியத்துவம். சைப்பிரஸ் தீவை பிரிப்பது, இருநாடுகளுக்கிடயிலான சர்வதேச எல்லையாக, எவராலும் (வடக்கு சைப்ரஸ் தவிர) கருதப்படவில்லை. அதனால் அதனை "பச்சைக் கோடு" (Green Line) என்ற பெயரில், ஐ.நா. சமாதானப்படை பாதுகாக்கின்றது. எல்லையில் நிலக்கண்ணிகள் புதைக்கப்பட்டிருப்பதால், குறிக்கப்பட்ட எல்லைக்காவல் நிலையங்களூடாகத்தான் பொது மக்கள் போக்குவரத்து செய்ய முடியும்.

தலைநகரம் நிகோசியா, பெர்லின் நகரம் போல இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. நகரின் பிரபல கடைத்தெருவான "லேட்ரா தெரு" முடிவில் எல்லைக்காவல் நிலையம் உள்ளது. கிரேக்க சைப்ரசில் இருந்து செல்பவர்களுக்கு, துருக்கி பொலிஸ் ஒரு சிறிய துண்டில், நுழைவு விசா குத்தி தருகின்றது. முன்பு பாஸ்போர்ட்டில் இந்த விசா இருந்தால், கிரேக்க சைப்பிரசினுள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. துருக்கி சைப்பிரசின் எந்தவொரு அரசாங்க பத்திரத்தையும், கிரேக்க சைப்ரஸ் சட்டவிரோதமாக பார்க்கின்றது.


சில வருடங்களுக்கு முன்னர் தான், இரண்டு பகுதிகளுக்குமிடையில் வர்த்தக தொடர்பு ஏற்பட்டது. "வடக்கு சைப்ரஸ் அரச வர்த்தக ஆணையகம்" வழங்கும் பத்திரங்களை, தெற்கு சைப்ரஸ் ஏற்க மறுத்து வருவதால், ஐரோப்பிய ஒன்றியம் இரு தரப்புக்குமிடையில், அனுசரணையாளராக செயற்பட்டு வருகின்றது. தெற்கு சைப்ரஸ் குடியரசு ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினரான பின்னர் தான், இது சாத்தியமாகியது. வடக்கு சைப்ரஸ் பகுதிகளுக்கும் சேர்த்து, (கிரேக்க) சைப்ரஸ் குடியரசு உரிமை கொண்டாடுவதை, சர்வதேசம் அங்கீகரித்துள்ளது. இருப்பினும் வடக்கு சைப்ரஸ், தனி நாடாக செய்யற்பட்டு வருவது கண்கூடாக தெரியும் யதார்த்தம் என்பதால், அங்கே கிரேக்க சைப்ரஸ் குடியரசின் அதிகாரம் செல்லாது என்பதாலும் தான், ஐரோப்பிய ஒன்றிய அனுசரணை கோரப்பட்டது.

சைப்ரசை இரண்டு துண்டுகளாக்கிய 1974 ம் ஆண்டு யுத்தம், ஆயிரக்கணக்கான மக்களை குடிபெயர வைத்தது. போருக்கு முன்னர், வடக்கு பகுதியில் கிரேக்க மக்களும், தெற்கு பகுதியில் துருக்கி மக்களும், கணிசமான தொகையினராக ஒன்று கலந்து வாழ்ந்து வந்தனர். இனப்பிரச்சினை முற்றி இனக்கலவரமாகி, அதனால் சிறுபான்மை துருக்கி இனத்தவர்கள், தமக்கென தனி நாடு கோரி வந்தார்கள். கடல் கடந்து வாழும் தனது சகோதர இனத்தவர்கள் கொல்லப்படுவதாக காரணம் காட்டி, துருக்கி இராணுவம் படையெடுத்தது. இப்போதிருக்கும் பச்சைக் கோடு வரை முன்னேறிய துருக்கி இராணுவத்தை, எதிர்க்க முடியாத கிரேக்க சைப்ரஸ் இராணுவம் பின்வாங்கி, போர்நிறுத்தம் வந்தது.

அத்தோடு பிரச்சினை தீரவில்லை. வடக்கில் வாழ்ந்த கிரேக்க இனத்தவர்கள் பலர், (துருக்கி தேசியவாதிகளாலும், ஆக்கிரமிப்பு படைகளாலும்) படுகொலை செய்யப்பட்டதால், கிரேக்க மொழி பேசும் மக்கள் தெற்கு நோக்கி இடம்பெயர்ந்தனர். அதேபோல தெற்கில் வாழ்ந்த துருக்கி இனத்தவர்கள் பலர், (கிரேக்க பேரினவாதிகளால்) படுகொலை செய்யப்பட்டதால், துருக்கி மொழி பேசும் மக்கள் வடக்கு நோக்கி இடம்பெயர்ந்தனர். பிற்காலத்தில் பொஸ்னியாவில் நடந்த இனச்சுத்திகரிப்பு நாடகம், அப்போதே சைப்ரசில் அரங்கேறியது. இந்த கடந்தகால இனப்படுகொலைகள் ஏற்படுத்திய தாக்கம் இன்று வரை எதிரொலிக்கின்றது. தேசத்தை ஒன்றிணைப்பதற்கு, கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் தடையாக உள்ளனர். இரண்டு இனத்தவர்கள் மத்தியிலும் இருக்கும் கடும்போக்காளர்கள், கடந்த கால இழப்புகளை வருடந்தோறும் நினைவுபடுத்தி வருகின்றனர்.

இடம்பெயர்ந்த மக்களின் வீடுகள், நிலங்கள், உடமைகள் யாவும் அகதிகளாக வந்தவர்களுக்கு வழங்கப்பட்டன. இது இரண்டு பக்கமும் நிகழ்ந்தது. கிரேக்க மக்கள் பெரும்பான்மையினர் என்பதால், அவர்களே அதிகமாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக வடக்கு சைபிரசில் அவர்கள் அதிகளவு நிலங்களை இழந்தனர். மொத்த சனத்தொகையில் இருபது வீதத்திற்கும் குறைவான துருக்கி மக்கள், தற்போது 40% சைப்ரசிற்கு சொந்தக்காரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. துருக்கியில் இருந்து வந்த ஆக்கிரமிப்பு இராணுவம் இன்று வரை வடக்கு சைப்ரசில் நிலை கொண்டுள்ளது. அதனால் கிரேக்க மக்கள் இன்றும் கூட வடக்கு சைப்ரசை தனி நாடாக ஏற்றுக்கொள்ள மறுப்பதுடன், அதனை துருக்கியால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி என கூறி வருகின்றனர். அரசாங்கமும் அதே நிலைப்பாட்டில் தான் உள்ளது.

வடக்கு சைப்ரசில் துருக்கிய ஆக்கிரமிப்பு இராணுவம், தீவின் இனவிகிதாசாரத்தை மாற்றும் வகை, துருக்கி மொழி பேசும் சனத்தொகையை அதிகரிக்கும் நோக்கில், திட்டமிட்ட குடியேற்றங்களை நடத்தி வருகின்றது. துருக்கி குடியரசில் இருந்து பல்லாயிரக்கணக்கான வறிய மக்கள், வீடு, நிலம், பிற வசதிகளை செய்து தருவாதாக வாக்குறுதியளித்து, வடக்கு சைப்ரசில் குடியேற்றப்பட்டுள்ளனர். தற்போது தேசத்தை ஒன்றிணைக்கும் பேச்சுவார்த்தைகளின் போது, கிரேக்க சைப்ரஸ் இந்த குடியேற்றக்காரர்கள் வெளியேற்றப்பட வேண்டும், என்று கோரி வருகின்றது. பேச்சுவார்த்தை முறிவதற்கு இது ஒரு காரணமாக உள்ளது.

நிலப்பிரச்சினை அண்மையில் இன்னொரு பரிமாணத்தை கண்டது. வடக்கு சைப்ரஸ் மொத்த தீவிலும், பல அழகான பகுதிகளை கொண்டது. இதனால் (முன்னாள் காலனித்துவ நாடான) பிரித்தானியாவை சேர்ந்த, ஓய்வூதியம் பெறும் வயோதிப ஆங்கிலேயர்கள், அங்கே வீடுகளை வாங்கி குடியேறி வருகின்றனர். தெற்கு சைப்ரசை விட வீடுகளின் விலை வடக்கில் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த வீட்டுமனைகள் பல, குடிபெயர்ந்த கிரேக்க இனத்தவருக்கு சொந்தமான நிலங்களில் கட்டப்பட்டுள்ளதாக, சைப்ரஸ் குடியரசு ஆட்சேபித்து வருகின்றது. நீண்டகாலமாக இருந்து வரும் சர்ச்சை, அண்மையில் ஐரோப்பிய நீதிமன்றத்திற்கும் போனது. இடம்பெயர்ந்து வாழும் கிரேக்க சைப்ரஸ் மனுதாரர் ஒருவர், வடக்கு சைப்ரசில் தனக்கு சொந்தமான நிலத்தில், ஒரு பிரிட்டிஷ் குடும்பம் வீடு கட்டி இருப்பதாக, ஆவணங்களை கொண்டு நிரூபித்ததால், அந்த வீட்டை இடிக்கும் படி ஐரோப்பிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு வடக்கு சைப்ரசில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பல பிரிட்டிஷ் வீட்டு உரிமையாளர்கள் தமது வீடுகளை இழக்கப்போவது ஒரு புறமிருக்க, தெற்கு சைப்ரசில் துருக்கி மக்களுக்கு சொந்தமான நிலங்களும் அபகரிக்கப்பட்டுள்ளதாக பிரச்சினை பன்முகப்பட்டுள்ளது.

வடக்கு சைப்ரசை விட தெற்கு சைப்ரஸ் குடியரசு, பல வழிகளிலும் முன்னேறி உள்ளது. எப்படியோ சம்பள விகிதம் வடக்கை விட தெற்கில் மூன்றில் ஒரு பங்கு அதிகம். இதனால் அண்மைக்காலத்தில் இருதரப்பு உறவுகள் மேம்பட்டதை தொடர்ந்து, பல துருக்கி இனத்தவர்கள் தெற்கு சைப்ரஸ் வந்து வேலை செய்கின்றனர். பொருளாதார ஏற்றத்தாழ்வு இணைவுக்கு வழிவகுக்கும் என்று நம்பப்படுகின்றது. பெரும்பாலான வடக்கத்திய துருக்கி மக்கள் இணைவுக்கு ஆதரவாகவும், அதேநேரம் தெற்கத்திய கிரேக்க மக்கள் இணைப்புக்கு எதிராகவும் உள்ளனர்.


கிரேக்க சைப்ரஸ்காரர்களின் பணபலம் அவர்களுக்கு திமிரையும் கொடுத்துள்ளது. பலர் இனப்பெருமை கொள்பவர்களாகவும், அதுவே சிலவேளை வெளிநாட்டவருக்கு எதிரான இனவாதமாக மாறுவதையும் காணக்கூடியதாக உள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட தீவொன்றில் வாழும் காரணமாக இருக்கலாம் என்று, என்னோடு பேசிய சில உள்ளூர் மக்கள் குறிப்பிட்டனர். வெளிநாட்டவருக்கு எதிரான இனவாதம் சைப்ரசில் எந்தளவிற்கு உள்ளது என்பது பற்றியும், வளர்ந்த நாட்டில் எவ்வாறு ஊழலும் வளர்ந்துள்ளது என்பது பற்றியும் அடுத்த பதிவில் எழுதுகின்றேன்.
- தொடரும்...........
________________________________________
முன்னைய பதிவு:
சைப்பிரசில் ஓர் ஈழம்