12/31/08

ஒரு தீவு, மூன்று தேசங்கள் (சைப்ரஸ் தொடர்-2)


சைப்ரஸ் என்ற சிறிய தீவில், இரண்டு சுதந்திர நாடுகள் ஒரு தலைநகரத்தை கொண்டுள்ளன. அதைவிட முன்னாள் காலனிய எஜமானான பிரித்தானியா ஒரு சிறு பகுதிக்கு உரிமையாளர். இனப்பிரச்சினையால் பிளவுபட்ட தேசம், முப்பது ஆண்டுகள் அமைதியின் பின்னரும் ஆறுதலடையவில்லை.


ஐரோப்பாவின் பிரிட்டிஷ் காலனி நாடான சைப்ரஸ், விடுதலைக்காக போராடியது EOKAS என்ற வலதுசாரி தேசியவாத இயக்கம். சுதந்திரத்திற்கு பின்னர் நீண்ட காலம் ஆட்சியமைத்த அந்த இயக்க வழிவந்த தலைவர் ஒருவரின் அண்மைய மரணம், மீண்டும் இனப்பிரச்சினை சர்ச்சைகளை உருவாக்கியது. சில தினங்களுக்கு முன்னர்(12 டிசம்பர்) சுவாசப்பை புற்றுநோயால் காலமான முன்னாள் சைப்ரஸ் ஜனாதிபதி தசொஸ் பபடோபுலோஸ்(Tassos Papadopoulos), இறந்த பின்னும் நீருபூத்த நெருப்பாக இருந்த இனப்பிரச்சினையை கிளறிவிட்டார். தெற்கு கிரேக்க சைப்ரஸ் ஊடகங்கள் யாவும் அவரை ஒரு தன்னிகரற்ற தேசியத் தலைவராக பாராட்டிக் கொண்டிருந்தன. என்னோடு பேசிய கிரேக்க சைப்ரஸ்காரர்கள், பிரிவினைவாத துருக்கி இனத்தவருக்கு ஒரு அங்குல நிலமேனும் விட்டுக்கொடுக்காத அரசியல் தலைவராக பார்த்தனர். இது சைப்ரஸ் இனப்பிரச்சினை தொடர்பாக அவர்களது புரிதல் சம்பந்தமானது. பெரும்பாலான கிரேக்க மொழிபேசுவோர் தமது நாட்டில் இனபிரச்சினை ஒருநாளும் இருந்ததில்லை என்றும், துருக்கியின் நில ஆக்கிரமிப்பு மட்டுமே ஒரு பிரச்சினை எனக் கூறினர். வயதான கிரேக்க சைப்ரஸ்காரர்கள் தமது இளமைக்காலத்தில் துருக்கி இன நண்பர்கள் இருந்ததாகவும், தமக்கிடையே எந்தவித பகை முரண்பாடுகள் இருக்கவில்லை என்றும் கூறினர்.



வடக்கு துருக்கி சைப்ரஸ் ஊடகங்கள் அதற்கு முற்றிலும் மாறான கருத்துகளை முன்வைத்தன. தசொஸ் பபடோபுலோசின் இறுதிச்சடங்குகளில் துருக்கியினத் தலைவர்கள் எவரும் கலந்து கொள்ளாதது சரியானதே என்றும், துருக்கி இனப்படுகொலைகளுக்கு காரணமான கடும்போக்கு கிரேக்க இனவாதியின் மரணம் சரித்திரமாகிப் போகட்டும் என்றும் குறிப்பிட்டன. அவை மேலும் கடந்த கால கசப்பான நினைவுகளை மீண்டும் இரைமீட்டன. EOKAS ஆயுதபாணிகள் வீதித்தடை சோதனை அரண்களை
அமைத்து, துருக்கி இளைஞர்களை வேறுபடுத்தி பிடித்துச் சென்று சித்திரவதை செய்து கொலை செய்தமை. துருக்கி கிராமங்களில் நுழைந்து வயோதிபர், பெண்கள், குழந்தைகள் என்று வேறுபாடு பார்க்காமல் கொன்று குவித்து மனிதப்புதைகுழிகளுக்குள் புதைத்தமை, அது மட்டுமல்லாது சில கிரேக்க மக்களையே உளவாளிகள் என்று சந்தேகத்தின் பேரில் கொலை செய்தமை... துருக்கி ஊடகங்கள் கொடுக்கும் தகவல்கள் இவ்வாறு நீண்டு செல்கின்றது. இது போன்ற சம்பவங்கள் சைப்ரசில் (1974 ம ஆண்டு துருக்கி படையெடுப்பிற்கு முன்னும் பின்னும்) நடந்துள்ளன என்பதையும், அதற்கு பொறுப்பான EOKAS ஆயுதபாணிகள் குற்றவாளிகள் என்பதையும் மிதவாத கிரேக்க மக்கள் மறுக்கவில்லை. ஆனால் காலஞ்சென்ற முன்னாள் ஜனாதிபதி(EOKAS தலைவர்களில் ஒருவராக இருந்தபோதும்) அந்த குற்றங்களை செய்யவில்லை என்கின்றனர். இது போன்ற இருதரப்பு சர்ச்சைகள் இன்னும் ஓயவில்லை என்ற உண்மை, இரண்டு இனங்களும் எவ்வளவு தூரம் பிரிந்து வாழ்கின்றன என்பதை எடுத்துக் காட்டுகின்றது.


வடக்கு சைப்ரஸ் பகுதிகளில் தமக்கென தனிநாடு கண்ட துருக்கி இனத்தவர்கள், தமது தேசத்தை சர்வதேசம் அங்கீகரிக்காத காரணத்தால், பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர். வீதிகளில் துருக்கி மொழியிலான பெயர்ப் பலகைகள் காணப்படுகின்றன. பாடசாலைகளில் துருக்கி மொழியில் மட்டுமே கற்பிக்கப்படுகின்றது.(ஆங்கில மொழிவழி சர்வதேச கல்லூரிகள் விதிவிலக்கு) ஆண்டு தோறும் துருக்கி வழங்கும் மில்லியன் டாலர் மானியம் மட்டும் இல்லையென்றால், இந்த தனி நாடு என்றோ திவாலாகி இருக்கும். வடக்கு சைப்ரசில் நான் சுற்றுப் பயணம் செய்த போது, துருக்கி நாட்டு வர்த்தக நிறுவனங்களின் ஆதிக்கத்தை நேரடியாக பார்க்கக் கூடியதாக இருந்தது. கடைகளில் துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் அதிகமாக காணப்பட்டன. துருக்கி நாணயமான லீரா புழக்கத்தில் உள்ளது. வடக்கு சைப்ரசின் பாதுகாப்பு முழுவதும், அங்கே நிலை கொண்டுள்ள துருக்கி இராணுவத்தின் கையில் உள்ளது. கணிசமான துருக்கியின சைப்ரஸ்காரர்கள் மத்தியில் துருக்கிக்கு எதிரான வெறுப்பு காணப்படுகின்றது. தமது சொந்த நாட்டில் தாம் சிறுபான்மையாகி வருவதாகவும், துருக்கியில் இருந்து வந்து குடியேறுபவர்கள் அதிகரித்து வருவதாக குறைப்படுகின்றனர். பல தொழில்வாய்ப்புகளை துருக்கியில் இருந்து வந்து குடியேறியவர்கள் அபகரிப்பதாகவும், சிறு வணிகம் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அவர்கள் நடத்துவதாகவும் முன்வைக்கப்படும் குற்றச் சாட்டுகளில் உண்மை இல்லாமல் இல்லை.

கிரேக்க சைப்ரஸ் பகுதிகள் எதிரான பிம்பம் ஒன்றை வழங்குகின்றது. வீதிகளில் கிரேக்க மொழியில் பெயர்ப்பலகைகள் தொடக்கம் எங்கும் எதிலும் கிரேக்க மொழி கோலோச்சுகின்றது. இரண்டு பகுதிகளிலும் ஆங்கில மொழி பயன்படுத்தப் படுகின்றது. கிரேக்க இன - துருக்கி இன இளம்தலைமுறை காலனிய மொழியான ஆங்கிலத்தில் மட்டுமே ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ள வேண்டும். கிரேக்க பகுதிகளில் முன்னாள் காலனியாதிக்க நாடான பிரித்தானியாவின் ஆதிக்கம் தொடர்கின்றது. பிரிட்டிஷ் வர்த்தக நிலையங்கள் பெரும் முதலீட்டில் கடை விரித்துள்ளன. அது தவிர அதிகளவு தேசிய வருமானத்தை ஈட்டித்தரும் உல்லாசப் பிரயாணிகள் பிரித்தானியாவில் இருந்து வருகின்றனர். ரியல் எஸ்டேட் துறையில் அதிகமான வீடுகளை வாங்குபவர்களும் பிரிட்டிஷ்காரர்கள் தான்.


தெற்கு சைப்ரசில் லிமசோல்(Limassol) நகரத்திற்கு அருகிலும், வடக்கு சைப்ரசில் பாமகுஸ்தா(Famagusta) நகரத்திற்கு அருகிலும், இரண்டு பிரிட்டிஷ் இராணுவத்தளங்கள் இப்போதும் உள்ளன. ஒவ்வொரு இராணுவ தளமும் குறைந்தது 20 அல்லது 30 கி.மி. பரப்பளவான சைப்ரஸ் நிலத்திற்கு வாடகை கொடுக்கின்றன. இந்த தளங்களுக்கென தனியான விமானநிலையங்கள் உள்ளன. இந்த இராணுவத்தளங்கள் சுயாதீனமானவை. சுருக்கமாக சொன்னால், பிரிட்டிஷ் அரசிற்கு சொந்தமானவை. அங்கே பிரிட்டிஷ் சட்டம் மட்டுமே செல்லுபடியாகும். பெருமளவு பிரிட்டிஷ் இராணுவவீரர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், பிற பணியாளர்கள் அந்த தளங்களில் சகல வசதிகளுடனும் வாழ்கின்றனர். அங்கே பவுன் நாணயம் புழக்கத்தில் உள்ளது. (சைப்ரஸ் நாணயம் யூரோ). இதைவிட மலைப்பகுதியான துரூடோசில்(Troodos) பிரிட்டிஷ் செய்மதி தொடர்பு நிலையமொன்று, மத்திய கிழக்கு நாடுகளை கண்காணித்து வருகின்றது. ஈராக்கிற்கு அனுப்பபட்ட அமெரிக்க படைகள், இந்த தளங்களை பயன்படுத்தின.

சைப்ரஸ் என்ற குட்டித் தீவில், வடக்கே துருக்கி நாடு, தெற்கே கிரேக்க நாடு, பிரிட்டனின் கடல்கடந்த பகுதி என்ற மூன்று தேசங்கள் உள்ளன. அதனை மெய்ப்பிப்பது போல, வடக்கே துருக்கி கொடியும், தெற்கே கிரேக்க கொடியும், பிரிட்டிஷ் இராணுவதளங்களில் பிரிட்டிஷ் கொடியும் பறக்கின்றன.
- தொடரும்.....
முன்னைய பதிவு:
இனப்பிரச்சினையின் பரிமாணங்கள் - ஒரு சைப்ரஸ் அனுபவம்

12/28/08

இனப்பிரச்சினையின் பரிமாணங்கள் - ஒரு சைப்ரஸ் அனுபவம்


வளர்ந்த நாடுகளிலும் இனப்பிரச்சினை வளர்ந்து வருகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த குட்டித் தீவான சைப்ரஸ் அதற்கொரு உதாரணம். விடுமுறைக்காக அந்த நாட்டில் தங்கியிருந்த நேரம், நான் அவதானித்த சுவையான சமூக-அரசியல் நிகழ்வுகளை, பின்னணி தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். ஒருவகையில் இது எனது பயணக்கட்டுரை என்றாலும், சர்வதேச சமூக கற்கைகளுக்கான உசாத்துனையாகவும் அமையும் என எதிர்பார்க்கிறேன்.

இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில், துருக்கிக்கும், கிரீசிற்கும் இடையிலான அதிகாகரப் போட்டியில் சிக்கி, இனரீதியாக இரண்டாக பிரிந்திருக்கும் தேசம் சைப்பிரஸ். பெரும்பான்மை கிரேக்க மொழி பேசும் மக்கள் வாழும், தீவின் 60% நிலப்பரப்பை கொண்ட, தெற்கு பகுதியே " சைப்ரஸ் குடியரசு" என்ற பெயரில் உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வடக்கே சிறுபான்மை துருக்கி மொழி பேசும் மக்கள் வாழும், 40 % நிலப்பரப்பை கொண்ட " வடக்கு சைப்ரஸ் துருக்கி குடியரசு" (சுருக்கமாக TRNC) தன்னை சுயநிர்ணய உரிமை கொண்ட, சுதந்திர நாடாக பிரகடனம் செய்தாலும், இதுவரை துருக்கியை தவிர வேறு எந்த நாடும் அதனை அங்கீகரிக்கவில்லை.

"பெர்லின் மதில்" வீழ்ந்ததை, குறிப்பிடத்தக்க சர்வதேச நிகழ்வாக எல்லோரும் அன்று கொண்டாடினார்கள். பெர்லின் மதில், இரண்டு அரசியல் கோட்பாடுகளை கொண்ட தேசங்களை பிரித்ததால், அதற்கு அவ்வளவு முக்கியத்துவம். சைப்பிரஸ் தீவை பிரிப்பது, இருநாடுகளுக்கிடயிலான சர்வதேச எல்லையாக, எவராலும் (வடக்கு சைப்ரஸ் தவிர) கருதப்படவில்லை. அதனால் அதனை "பச்சைக் கோடு" (Green Line) என்ற பெயரில், ஐ.நா. சமாதானப்படை பாதுகாக்கின்றது. எல்லையில் நிலக்கண்ணிகள் புதைக்கப்பட்டிருப்பதால், குறிக்கப்பட்ட எல்லைக்காவல் நிலையங்களூடாகத்தான் பொது மக்கள் போக்குவரத்து செய்ய முடியும்.

தலைநகரம் நிகோசியா, பெர்லின் நகரம் போல இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. நகரின் பிரபல கடைத்தெருவான "லேட்ரா தெரு" முடிவில் எல்லைக்காவல் நிலையம் உள்ளது. கிரேக்க சைப்ரசில் இருந்து செல்பவர்களுக்கு, துருக்கி பொலிஸ் ஒரு சிறிய துண்டில், நுழைவு விசா குத்தி தருகின்றது. முன்பு பாஸ்போர்ட்டில் இந்த விசா இருந்தால், கிரேக்க சைப்பிரசினுள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. துருக்கி சைப்பிரசின் எந்தவொரு அரசாங்க பத்திரத்தையும், கிரேக்க சைப்ரஸ் சட்டவிரோதமாக பார்க்கின்றது.


சில வருடங்களுக்கு முன்னர் தான், இரண்டு பகுதிகளுக்குமிடையில் வர்த்தக தொடர்பு ஏற்பட்டது. "வடக்கு சைப்ரஸ் அரச வர்த்தக ஆணையகம்" வழங்கும் பத்திரங்களை, தெற்கு சைப்ரஸ் ஏற்க மறுத்து வருவதால், ஐரோப்பிய ஒன்றியம் இரு தரப்புக்குமிடையில், அனுசரணையாளராக செயற்பட்டு வருகின்றது. தெற்கு சைப்ரஸ் குடியரசு ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினரான பின்னர் தான், இது சாத்தியமாகியது. வடக்கு சைப்ரஸ் பகுதிகளுக்கும் சேர்த்து, (கிரேக்க) சைப்ரஸ் குடியரசு உரிமை கொண்டாடுவதை, சர்வதேசம் அங்கீகரித்துள்ளது. இருப்பினும் வடக்கு சைப்ரஸ், தனி நாடாக செய்யற்பட்டு வருவது கண்கூடாக தெரியும் யதார்த்தம் என்பதால், அங்கே கிரேக்க சைப்ரஸ் குடியரசின் அதிகாரம் செல்லாது என்பதாலும் தான், ஐரோப்பிய ஒன்றிய அனுசரணை கோரப்பட்டது.

சைப்ரசை இரண்டு துண்டுகளாக்கிய 1974 ம் ஆண்டு யுத்தம், ஆயிரக்கணக்கான மக்களை குடிபெயர வைத்தது. போருக்கு முன்னர், வடக்கு பகுதியில் கிரேக்க மக்களும், தெற்கு பகுதியில் துருக்கி மக்களும், கணிசமான தொகையினராக ஒன்று கலந்து வாழ்ந்து வந்தனர். இனப்பிரச்சினை முற்றி இனக்கலவரமாகி, அதனால் சிறுபான்மை துருக்கி இனத்தவர்கள், தமக்கென தனி நாடு கோரி வந்தார்கள். கடல் கடந்து வாழும் தனது சகோதர இனத்தவர்கள் கொல்லப்படுவதாக காரணம் காட்டி, துருக்கி இராணுவம் படையெடுத்தது. இப்போதிருக்கும் பச்சைக் கோடு வரை முன்னேறிய துருக்கி இராணுவத்தை, எதிர்க்க முடியாத கிரேக்க சைப்ரஸ் இராணுவம் பின்வாங்கி, போர்நிறுத்தம் வந்தது.

அத்தோடு பிரச்சினை தீரவில்லை. வடக்கில் வாழ்ந்த கிரேக்க இனத்தவர்கள் பலர், (துருக்கி தேசியவாதிகளாலும், ஆக்கிரமிப்பு படைகளாலும்) படுகொலை செய்யப்பட்டதால், கிரேக்க மொழி பேசும் மக்கள் தெற்கு நோக்கி இடம்பெயர்ந்தனர். அதேபோல தெற்கில் வாழ்ந்த துருக்கி இனத்தவர்கள் பலர், (கிரேக்க பேரினவாதிகளால்) படுகொலை செய்யப்பட்டதால், துருக்கி மொழி பேசும் மக்கள் வடக்கு நோக்கி இடம்பெயர்ந்தனர். பிற்காலத்தில் பொஸ்னியாவில் நடந்த இனச்சுத்திகரிப்பு நாடகம், அப்போதே சைப்ரசில் அரங்கேறியது. இந்த கடந்தகால இனப்படுகொலைகள் ஏற்படுத்திய தாக்கம் இன்று வரை எதிரொலிக்கின்றது. தேசத்தை ஒன்றிணைப்பதற்கு, கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் தடையாக உள்ளனர். இரண்டு இனத்தவர்கள் மத்தியிலும் இருக்கும் கடும்போக்காளர்கள், கடந்த கால இழப்புகளை வருடந்தோறும் நினைவுபடுத்தி வருகின்றனர்.

இடம்பெயர்ந்த மக்களின் வீடுகள், நிலங்கள், உடமைகள் யாவும் அகதிகளாக வந்தவர்களுக்கு வழங்கப்பட்டன. இது இரண்டு பக்கமும் நிகழ்ந்தது. கிரேக்க மக்கள் பெரும்பான்மையினர் என்பதால், அவர்களே அதிகமாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக வடக்கு சைபிரசில் அவர்கள் அதிகளவு நிலங்களை இழந்தனர். மொத்த சனத்தொகையில் இருபது வீதத்திற்கும் குறைவான துருக்கி மக்கள், தற்போது 40% சைப்ரசிற்கு சொந்தக்காரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. துருக்கியில் இருந்து வந்த ஆக்கிரமிப்பு இராணுவம் இன்று வரை வடக்கு சைப்ரசில் நிலை கொண்டுள்ளது. அதனால் கிரேக்க மக்கள் இன்றும் கூட வடக்கு சைப்ரசை தனி நாடாக ஏற்றுக்கொள்ள மறுப்பதுடன், அதனை துருக்கியால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி என கூறி வருகின்றனர். அரசாங்கமும் அதே நிலைப்பாட்டில் தான் உள்ளது.

வடக்கு சைப்ரசில் துருக்கிய ஆக்கிரமிப்பு இராணுவம், தீவின் இனவிகிதாசாரத்தை மாற்றும் வகை, துருக்கி மொழி பேசும் சனத்தொகையை அதிகரிக்கும் நோக்கில், திட்டமிட்ட குடியேற்றங்களை நடத்தி வருகின்றது. துருக்கி குடியரசில் இருந்து பல்லாயிரக்கணக்கான வறிய மக்கள், வீடு, நிலம், பிற வசதிகளை செய்து தருவாதாக வாக்குறுதியளித்து, வடக்கு சைப்ரசில் குடியேற்றப்பட்டுள்ளனர். தற்போது தேசத்தை ஒன்றிணைக்கும் பேச்சுவார்த்தைகளின் போது, கிரேக்க சைப்ரஸ் இந்த குடியேற்றக்காரர்கள் வெளியேற்றப்பட வேண்டும், என்று கோரி வருகின்றது. பேச்சுவார்த்தை முறிவதற்கு இது ஒரு காரணமாக உள்ளது.

நிலப்பிரச்சினை அண்மையில் இன்னொரு பரிமாணத்தை கண்டது. வடக்கு சைப்ரஸ் மொத்த தீவிலும், பல அழகான பகுதிகளை கொண்டது. இதனால் (முன்னாள் காலனித்துவ நாடான) பிரித்தானியாவை சேர்ந்த, ஓய்வூதியம் பெறும் வயோதிப ஆங்கிலேயர்கள், அங்கே வீடுகளை வாங்கி குடியேறி வருகின்றனர். தெற்கு சைப்ரசை விட வீடுகளின் விலை வடக்கில் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த வீட்டுமனைகள் பல, குடிபெயர்ந்த கிரேக்க இனத்தவருக்கு சொந்தமான நிலங்களில் கட்டப்பட்டுள்ளதாக, சைப்ரஸ் குடியரசு ஆட்சேபித்து வருகின்றது. நீண்டகாலமாக இருந்து வரும் சர்ச்சை, அண்மையில் ஐரோப்பிய நீதிமன்றத்திற்கும் போனது. இடம்பெயர்ந்து வாழும் கிரேக்க சைப்ரஸ் மனுதாரர் ஒருவர், வடக்கு சைப்ரசில் தனக்கு சொந்தமான நிலத்தில், ஒரு பிரிட்டிஷ் குடும்பம் வீடு கட்டி இருப்பதாக, ஆவணங்களை கொண்டு நிரூபித்ததால், அந்த வீட்டை இடிக்கும் படி ஐரோப்பிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு வடக்கு சைப்ரசில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பல பிரிட்டிஷ் வீட்டு உரிமையாளர்கள் தமது வீடுகளை இழக்கப்போவது ஒரு புறமிருக்க, தெற்கு சைப்ரசில் துருக்கி மக்களுக்கு சொந்தமான நிலங்களும் அபகரிக்கப்பட்டுள்ளதாக பிரச்சினை பன்முகப்பட்டுள்ளது.

வடக்கு சைப்ரசை விட தெற்கு சைப்ரஸ் குடியரசு, பல வழிகளிலும் முன்னேறி உள்ளது. எப்படியோ சம்பள விகிதம் வடக்கை விட தெற்கில் மூன்றில் ஒரு பங்கு அதிகம். இதனால் அண்மைக்காலத்தில் இருதரப்பு உறவுகள் மேம்பட்டதை தொடர்ந்து, பல துருக்கி இனத்தவர்கள் தெற்கு சைப்ரஸ் வந்து வேலை செய்கின்றனர். பொருளாதார ஏற்றத்தாழ்வு இணைவுக்கு வழிவகுக்கும் என்று நம்பப்படுகின்றது. பெரும்பாலான வடக்கத்திய துருக்கி மக்கள் இணைவுக்கு ஆதரவாகவும், அதேநேரம் தெற்கத்திய கிரேக்க மக்கள் இணைப்புக்கு எதிராகவும் உள்ளனர்.


கிரேக்க சைப்ரஸ்காரர்களின் பணபலம் அவர்களுக்கு திமிரையும் கொடுத்துள்ளது. பலர் இனப்பெருமை கொள்பவர்களாகவும், அதுவே சிலவேளை வெளிநாட்டவருக்கு எதிரான இனவாதமாக மாறுவதையும் காணக்கூடியதாக உள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட தீவொன்றில் வாழும் காரணமாக இருக்கலாம் என்று, என்னோடு பேசிய சில உள்ளூர் மக்கள் குறிப்பிட்டனர். வெளிநாட்டவருக்கு எதிரான இனவாதம் சைப்ரசில் எந்தளவிற்கு உள்ளது என்பது பற்றியும், வளர்ந்த நாட்டில் எவ்வாறு ஊழலும் வளர்ந்துள்ளது என்பது பற்றியும் அடுத்த பதிவில் எழுதுகின்றேன்.
- தொடரும்...........
________________________________________
முன்னைய பதிவு:
சைப்பிரசில் ஓர் ஈழம்

12/19/08

தொட்டில் ஜனநாயகம் தொடர் புரட்சி வரை

12 ஜனவரி, 2007 ம் ஆண்டு, ஏதென்சில், கிறீஸ் நாட்டுக்கான அமெரிக்க தூதுவரின் வாசஸ்தலத்தின் மீது, ராக்கெட் லோன்ஜெர் தாக்குதல் நடத்தப்பட்டதில், அவரது குளியலறை சேதமடைந்தது. “புரட்சிகர யுத்தம்” என்ற இயக்கம் அனுப்பிய ஊடகங்களுக்கான அறிக்கையில்: “ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு பரிசு.” என்று உரிமை கோரியது. 2003 ம் ஆண்டில் இருந்து, ஏதென்ஸ் நகரம் பல குண்டுவெடிப்புகளால் அதிர்ந்தது. ஒரு பொலிஸ் நிலையம், பொலிஸ் வாகனம், ஒரு நீதிமன்றம், தொழில் அமைச்சு, இவ்வாறான இலக்குகளில், வெடிகுண்டு தாக்குதலை நடத்தியதும் மேற்படி இயக்கம் என அறியப்படுகின்றது. இதை தவிர தொழிலாளர் வேலைநிறுத்தம், மாணவர் போராட்டம் என்பன அடிக்கடி நகரங்களை ஸ்தம்பிக்க வைக்கும். பண்டிகை காலங்களுக்காக வியாபாரம் களைகட்டியிருக்கும் இந்த டிசம்பர் மாதத்தில், வங்கிகள், கடைகள், வாகனங்கள் என்பன ஆர்ப்பாட்டக்காரரால் எரிக்கப்பட்டன.

மன்னிக்கவும், இந்த சம்பவங்கள் நடந்தது பாக்தாத்தில் அல்ல. அமைதிப்பூங்கா என்று கருதப்படும் ஐரோப்பாவின் ஒரு பகுதியில், கிறீசின் தலைநகரம் ஏதென்ஸ் கொந்தளிக்கிறது. ஒரு காலத்தில் ஐரோப்பாவுக்கு நாகரீகம், ஜனநாயகம் பற்றி சொல்லிக் கொடுத்த கிரேக்க நாடு அது. இப்போதும் ஐரோப்பிய பாடநூல்கள், கிரேக்கத்தை “ஜனநாயகத்தின் தொட்டில்” என்று பழம்பெருமை பேசுகின்றன. இருபதாம் நூற்றாண்டில் துருக்கியில் இருந்து விடுதலை பெற்ற பிறகே, நவீன கிரேக்க குடியரசின் வரலாறு ஆரம்பமாகின்றது. இரண்டாவது உலகப்போர் காலங்களில், நாசி ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த போதும், கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சியின்(KKE) கெரில்லா இராணுவம், தனந்தனியாக போராடி தேசத்தை விடுவித்தது. இருப்பினும் நாசிசம் தோற்றுக்கொண்டிருந்த வேளை, பிரித்தானியா கேந்திர முக்கியத்துவம் கருதி கிறீசிற்கு உரிமை கோரியது. பிரிட்டிஷ் “கனவான்களின்” மீது நம்பிக்கை வைத்து ஸ்டாலினும், கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆயுத உதவி செய்யவில்லை. விளைவு? கிறீஸ் குடியரசு உருவாகிய பின்னர், பிரிட்டிஷ் இராணுவத்திற்கும், கம்யூனிஸ்ட்களுக்கும் இடையில் போர் மூண்டது. இறுதியில் பிரிட்டிஷ் வல்லரசின் கை ஓங்கவே, ஆயிரக்கணக்கான போராளிகளும், அவர்களது குடும்பங்களும், சோஷலிச நாடுகளில் அடைக்கலம் பெற்றனர். தொடர்ந்து கிறீசை “பாதுகாக்கும்” பொறுப்பை, பிரித்தானியா அமெரிக்காவிடம் ஒப்படைத்து விட்டது.

கிரேக்க நாட்டிலிருந்து கம்யூனிஸ்ட்களை அடித்து விரட்டி விட்டாலும், அவர்களுக்கு இருந்த பெரும்பான்மை மக்களின் ஆதரவாலும், சுற்றவர சோஷலிச நாடுகள் இருந்ததாலும், மீண்டும் கம்யூனிச புரட்சி தலையெடுக்கலாம் என்று அமெரிக்கா அஞ்சியது. அதனால் “எப்பாடு பட்டாவது ஜனநாயகத்தை நிலைநிறுத்துவது தனது கடமை” என்று கருதிய அமெரிக்கா, 1967 ம் ஆண்டு சில வலதுசாரி இராணுவ ஜெனரல்கள் சதிப்புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்ற உதவியது. “ஜனநாயகத்திற்கும் இராணுவ ஆட்சிக்கும் இடையில் என்ன சம்பந்தம்?” என்று யாரும் அப்பாவித்தனமாக கேட்கக்கூடாது. அது தான் அமெரிக்கா! சி.ஐ.ஏ. ஆசியுடன் இந்த இராணுவ ஜெனரல்களின் கொடுங்கோலாட்சி ஏழு வருடங்கள் (அதாவது 1974 வரை) நீடித்தது. எதிர்த்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர், அல்லது தொலைதூர தீவுகளில் சிறைவைக்கப்பட்டனர். அந்தக் காலங்களிலும் கிரேக்க தீவுகளில், பெருவாரியாக தமது விடுமுறைகளை கழிக்க வந்த மேலைத்தேய சுற்றுலா பயணிகளுக்கு வெயில் சுடுவது மட்டும் பெரிய கொடுமையாக தெரிந்திருக்கும்.

கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி (KKE) சதிப்புரட்சிக்கு முன்னரே தடைசெய்யப்பட்டு விட்டாலும், இராணுவ சர்வாதிகாரத்திற்கு மிகப்பெரிய சவால் மாணவர்கள் மத்தியில் இருந்தே வந்தது. ஏதென்ஸ் நகர மத்தியில் அமைந்திருக்கும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (Polytechnic), அதன் மாணவர்களால் எதிர்ப்பு அரசியல் தளமாக பயன்படுத்தப்பட்டது. மாணவர்கள் வீடுகளுக்கு செல்லாமல், பல்கலைக்கழகத்தில் தங்கி மறியல் செய்தனர். சிறிய வானொலி நிலையம் ஒன்றை அமைத்து, அதன் மூலம் மக்களை கிளர்ந்தெழுந்து, இராணுவ சர்வாதிகாரத்தை எதிர்த்து, புரட்சி செய்யுமாறு அறைகூவல் விடுத்தனர். அவர்களது போராட்டத்திற்கு பொது மக்கள் ஆதரவு பெருகுவதை காணச் சகியாத இராணுவ அரசு, படையினரை ஏவி விட்டு போராட்டத்தை நசுக்கியது. 1973 ம் ஆண்டு நவம்பர் 17 ம் திகதி, பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைந்த இராணுவ தாங்கிகள் நசுக்கியத்திலும், சுட்டதிலும், சில மாணவர்கள் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர். ஆனால் அன்று நிலவிய, கடுமையான தணிக்கை காரணமாக சேதவிபரங்கள் மிகக் குறைவாக காட்டப்பட்டது.

இந்த துயர சம்பவம் நடைபெற்று, ஒரு வருடத்தின் பின்னர் சைப்பிரஸ் பிரச்சினை காரணமாக, அயல்நாடான துருக்கியுடனான மோதலை தவிர்ப்பதற்கு, வேறுவழியில்லாமல் இராணுவ ஆட்சி கலைக்கப்பட்டு, ஜனநாயக பாராளுமன்றம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. கொஞ்சம் பொறுங்கள், இத்துடன் கதை முடியவில்லை. நவம்பர் 17 சம்பவத்திற்கு பழிவாங்கப் போவதாக, சிலர் சபதமெடுத்தனர். நம்பிக்கைக்குரிய, இருபதுக்கும் குறையாத உறுப்பினர்களை கொண்டு, “நவம்பர் 17 இயக்கம்” என்ற தலைமறைவு ஆயுதக்குழு தனது நடவடிக்கைகளை தொடங்கியது. மார்க்ஸிஸத்துடன், அதற்கு முந்திய இடதுசாரி தத்துவமான அனார்கிசத்தையும் கலந்து, அதேநேரம் ஏகாதிபத்திய எதிர்ப்பையும் தமது சித்தாந்தமாக பிரகடனப்படுத்தினர். சர்வாதிகார ஆட்சியை நடாத்திய, அல்லது ஆதரித்த இராணுவ அதிகாரிகள், அரசியல்வாதிகள், அரசதரப்பு வக்கீல்கள், தொழிலதிபர்கள் பலர் அடுத்தடுத்து தீர்த்துக் கட்டப்பட்டனர். ஆதரவு கொடுத்த குற்றத்திற்காக அமெரிக்க அதிகாரிகள் சிலரும் கொலைசெய்யப்பட்டனர். இந்த பழிதீர்க்கும் படலம், 2000 ம் ஆண்டு வரை தொடர்ந்தது.

நீண்ட காலமாக மக்கள் ஆதரவு காரணமாக, எந்த ஒரு கொலையாளியும் கைது செய்யப்படவில்லை. கிறீஸ் அரசாங்கம் தீவிரவாதிகள் மீது மென்மையான போக்கை கடைப்பிடிப்பதாக, அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. இறுதியில், ஓரிடத்தில் குண்டு வைக்கப்போய் காயமடைந்த நபர் ஒருவர், போலீசிடம் மாட்டிக் கொண்டதால், நவம்பர் 17 இயக்க உறுப்பினர்கள் அனைவரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இந்த “தீவிரவாதிகளை” மக்கள் அடையாளம் கண்டுகொண்ட போது, நாடே அதிர்ச்சியில் உறைந்தது. அனைவரும், ஒரு பல்கலைக்கழக பேராசிரியர், ஒரு பொருளியல் பட்டதாரி, ஒரு இயந்திர பட்டறை வல்லுநர், போன்ற பல சமூக அந்தஸ்து உள்ளவர்கள். அவர்கள் இரட்டை வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரிய வந்தது. பகலில் தொழிலில் முனைப்புடன் ஈடுபடும் சாதாரண மனிதர்கள், இரவில் வெடிகுண்டு தயாரிக்கும் தீவிரவாதிகள்!

இடதுசாரி தீவிரவாதம் அழிக்கப்பட்டுவிட்டது. மக்களும் மேற்கு ஐரோப்பிய வாழ்க்கை வசதிகளை அனுபவிக்கின்றனர். அதனால் எந்த குழப்பமும் இல்லாமல் நாடு சுபீட்சமடையும் என்று கிரேக்க அரசாங்கமும், அதற்கு முண்டு கொடுக்கும் அமெரிக்காவும் நம்பின. ஆனால் உலகம் முழுவதும் அப்படி இருந்தால் பரவாயில்லை. பாலஸ்தீன பிரச்சினை, ஈராக் போர் என்பன பெருமளவு கிரேக்க மக்களின் அதிருப்தியை சம்பாதித்திருந்தது. போர் எதிர்ப்பு ஊர்வலத்திற்கு அழைப்பு விடுத்தால், ஐரோப்பாவிலேயே அதிக சனம் சேருவது கிறீசாக இருக்கும். அதனால் அரசாங்கமும் அமெரிக்க ஆதரவை அடக்கி வாசிக்க வேண்டிய நிலை. இன்றைய நடைமுறை புரட்சியாளர்கள் பலர் அஹிம்சாவழியில் போராடி வருகின்றனர். இவர்கள் “பாலஸ்தீன ஆதரவு அமைப்பு”, “ஈராக் போருக்கெதிரான அமைப்பு”, போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணிபுரிவர். இருப்பினும் எப்போதாவது ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடந்தால், அதிலும் பங்குபற்றுவர். அப்போது பொலிஸ் கண்ணீர்புகை பிரயோகம் செய்து, தடியடி நடத்தும் போது அகப்பட்டு சிறை செல்ல வேண்டியும் நேரிடலாம். இவ்வாறான தொழில்முறை புரட்சியாளர்கள், பல நூற்றுக்கணக்கில் கிறீசில் உள்ளனர்.

வெளிநாட்டு ஊடகங்கள், கிறீஸ் நாட்டை அமைதிப் பூங்காவாக தான் காட்ட விழைகின்றன. அதனால் நான் இங்கே கூறிய பல தகவல்கள் உங்களுக்கு புதிதாக இருக்கலாம். கிறீஸ் வருடந்தோறும் பெருமளவு சுற்றுலாப்பயணிகளை கவர்ந்து வருவதால், “எந்தவித சட்ட ஒழுங்கு பிரச்சினையும் இல்லை” என்று அமெரிக்கா உட்பட, பல மேற்கத்திய அரசு அறிக்கைகள், நற்சான்றிதழ் வழங்குகின்றன. இடையில் உலகமயமாக்கலும், நிதிநெருக்கடியும் வந்து பாழ்படுத்தியிராவிட்டால்,அப்படியே இருந்திருக்கும். உலகம் முழுக்க உணவுவிலை ஏறும் போது, விவசாயத்தை கைவிட்டு விட்டு, உல்லாசப்பிரயாண தொழில்துறைக்கு மாறிவிட்ட கிரேக்க பொருளாதாரத்தால் தாக்குப்பிடிக்க முடியுமா?

அதிகரிக்கும் செலவினத்தை ஈடுகட்ட, இடதுசாரி இளைஞர்கள் மாற்றுவழி காட்டினர். பல இடங்களில் பெரிய வர்த்தக ஸ்தாபனங்கள் நடத்தும் பல்பொருள் அங்காடிகள் சூறையாடப்பட்டன. உணவுப்பொருட்களை மக்களுக்கு இலவசமாக பகிர்ந்தளித்தனர். அண்மையில் போலீசுடன் மோதல் ஏற்பட்டு, கலவரம் வெடித்த போது, பன்னாட்டு வங்கிகள், பல்பொருள் அங்காடிகள் உட்பட ஆடம்பர பொருட்களை விற்கும் வர்த்தக நிலையங்களும் தீக்கிரையாகின. இந்த கிளர்ச்சியாளர்கள், சிறுவணிகர்களின் கடைகளை ஒருபோதும் சேதமாக்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் புரட்சியானது, பெரும் மூலதனத்தை குவிக்கும் வர்த்தக கழகங்களை மட்டுமே இல்லாதொழிக்க விரும்புகின்றது.

11/6/08

ஈழம்: ஜெயாவின் “புலி” பூச்சாண்டி! கருணாநிதியின் கோழைத்தனம்!

கடந்த ஒரு மாத காலமாக ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான போர்த் தாக்குதலைச் சிங்கள இனவெறி அரசு தீவிரப்படுத்தியிருக்கிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்பதைவிட, ஒட்டுமொத்த தமிழினத்தையும் வேரோடு அழிக்கும் கொடூரப் போரை நடத்தி வருகிறது, பாசிச சிங்கள அரசு. பல்குழல் பீரங்கிகளையும் அதி நவீனத் துப்பாக்கிகளையும் கொண்டும் விமானத் தாக்குதல் மூலமாகவும் கிளிநொச்சி பகுதியில் குண்டுமழை பொழிந்தும், கிளிநொச்சி நகரைத் தரைமட்டமாக்கியும் இறுதித் தாக்குதலுக்கான மூர்க்கத்துடன் சிங்கள இனவெறி பிடித்த இராணுவம் களமிறங்கியிருக்கிறது.
குண்டு வீச்சுத் தாக்குதலால் பிணமாகிக் கிடக்கும் பள்ளி செல்லும் குழந்தைகள், இரத்தக் கறையுடன் வீதியில் இறைந்து கிடக்கும் புத்தகங்கள், குவியல் குவியலாகப் பிணங்கள், படுகாயமடைந்து சிகிச்சை பெற வசதியின்றித் தவிக்கும் பச்சிளம் குழந்தைகள், வீடிழந்துபடுகாயமடைந்து சொந்த மண்ணிலே அகதிகளாகிக் காடுகளில் ஒளிந்து வாழும் அவலத்தில் தமிழ் மக்கள், உணவோ மருத்துவமோ கிடைக்காமல் பட்டினியாலும் நோயினாலும் பரிதவிக்கும் தாய்மார்கள், குழந்தைகள் என ஈழத்தமிழர்கள் மாளாத் துயரில் சிக்கித் தவிக்கின்றனர்.
இந்த அநீதியான போருக்கு எவ்வித சர்வதேசத் தடையுமில்லை என்று கொக்கரிக்கிறார், இலங்கை அதிபர் ராஜபக்ஷே. இலங்கை, சிங்கள நாடு என்பதை ஏற்றுக் கொண்டுதான் சிறுபான்மையினரான தமிழர்கள் வாழ வேண்டும் என்று வெளிப்படையாக பாசிச இனவெறியைக் கக்குகிறார், இராணுவத் தளபதி பொன்சேகா. தமிழ்த் தலைவர்களில் துரோகிகளையும் பிழைப்புவாதிகளையும் அடையாளம் கண்டு அவர்களுக்குப் பதவிகள் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளதோடு, புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறி சிங்கள அரசின் கைக்கூலியாகச் செயல்படும் கர்னல் கருணாவை எம்.பி.யாக நியமனம் செய்திருக்கிறது, ராஜபக்ஷே அரசு.
சிங்கள அரசின் இந்தத் திமிருக்கும் இனவெறிக்கும் மிக முக்கியமான காரணம், இந்திய அரசு அதற்கு உறுதுணையாக நிற்கிறது என்பதுதான். புலிகள் தொடுத்த எதிர்த்தாக்குதலில் இந்திய இராணுவ அதிகாரிகள் காயப்பட்டிருப்பது அம்பலமாகி, இந்தியா நேரடியாக சிங்கள இராணுவத்துடன் இணைந்து போரில் ஈடுபட்டுள்ள உண்மை உலகுக்குத் தெரிந்தது. மொத்தம் 265 இந்திய இராணுவ அதிகாரிகள் போர்க்களத்தில் இருப்பதாக இலங்கைப் பத்திரிகைகளே செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை இராணுவத்திற்கு நவீன ராடார்களையும் போர்த்தளவாடங்களையும் கொடுத்து உதவியது மட்டுமின்றி, அவற்றை இயக்குவதற்கான தொழில்நுட்ப வல்லுநர்களையும் இந்திய அரசு அனுப்பி வைத்திருக்கிறது. இதுதவிர, இலங்கை அரசுக்குக் கடனுதவியாக ரூ. 400 கோடியைக் கொடுத்துள்ளது.
இவை குறித்த குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்ட பின்னரும், வாயே திறக்காமல் மவுனம் சாதித்தது மன்மோகன் சிங் அரசு. தமிழகத்தில் பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் இப்பிரச்சினையை எழுப்பிய பிறகும் கருணாநிதி, இது குறித்து வாய் திறக்கவில்லை. பஜாரி அரசியல் நடத்தும் பாசிச ஜெயலலிதா, மன்மோகன் சிங்கையும் கருணாநிதியையும் அம்பலப்படுத்தி அறிக்கை வெளியிட்ட பிறகுதான் வேறுவழியின்றி கருணாநிதி வாய் திறந்தார்.
மன்மோகன் சிங்குடன் தொலைபேசியில் உரையாடியதாகவும், ஈழத் தமிழர் துயரம் பற்றி அவர் பரிவுடன் கேட்டதாகவும் கூறிய கருணாநிதி, ஈழத் தமிழர் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்துமாறு இலட்சக்கணக்கில் தந்தி அனுப்பக் கோரினார். இலங்கைத் தூதரை அழைத்துப் பேசவேண்டும், அரசியல் தீர்வு காண வலியுறுத்த வேண்டும் எனப் பொதுக் கூட்டம் நடத்திக் கோரிக்கை வைத்தார். மைய அரசு இலங்கைக்கு இராணுவ உதவி செய்வதை கருணாநிதி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாகச் சாடி, அவர் ஏன் பதவி விலகவில்லை என்று பாசிச ஜெயா அம்பலப்படுத்தியதும், அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி இன்னும் இரண்டு வாரங்களுக்குள் ஈழத் தமிழர் மீதான போர்த் தாக்குதலை மைய அரசு தடுத்து நிறுத்த முயற்சிக்காவிடில் தமிழக எம்.பி.க்கள் பதவி விலகுவார்கள் என்று மிரட்டல் நாடகமாடினார். அதேநேரத்தில் போர் தொடரும் என்று வெளிப்படையாக இலங்கை அரசு அறிவித்தபிறகும், மைய அரசை நிர்பந்திக்க அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மைய அரசுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லாத வகையில் மனித சங்கிலி போராட்டம் நடத்திய கருணாநிதி, மைய அரசைக் கவிழ்க்கும் நோக்கமில்லை; மைய அரசை அவசரப்பட்டு யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். பதவிக்காகவும் சொத்துசுகங்களுக்காகவும் இதைவிடக் கேவலமான முதுகெலும்பற்ற புழுவாய் யாரும் நடந்து கொள்ள முடியாது என்பதை கருணாநிதியின் பேச்சும் செயலும் நிரூபித்தன.
இதற்கிடையே ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து இராமேசுவரத்தில் பேரணிபொதுக்கூட்டம் நடத்திய திரைப்படத் துறையினர், புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாக காங்கிரசு கழிசடை எம்.எல்.ஏ. ஞானசேகரன் உசுப்பி விட்டார். உடனே பாசிச ஜெயா, “பொடா சட்டம் இல்லாததால்தான் இப்படி புலி ஆதரவு பிரிவினைவாதம் பேசுகிறார்கள். நான் ஆட்சியிலிருந்தால் இத்தேசத் துரோகிகளைக் கைது செய்திருப்பேன்” என்று பெருங்கூச்சல் போட, அதற்கு பக்கமேளம் வாசித்துக் கொண்டு துக்ளக் “சோ”, சுப்ரமணிய சாமி, பா.ஜ.க., காங்கிரசு, இந்து நாளேடு எனப் பார்ப்பனபாசிச கும்பல் பிரிவினைவாதப் பீதியூட்டி பேயாட்டம் போடத் தொடங்கின. புலிகளை ஆதரித்து தனித் தமிழ்நாடு கோரிப் பேசிய ம.தி.மு.க. தலைவர் வைகோவைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யுமாறு காங்கிரசு கழிசடைகள் ஊளையிட்டன. ஈழ விடுதலையை ஆதரிப்பதையும், சிங்கள இனவெறி அரசை எதிர்ப்பதையும்கூடத் தேசவிரோதச் செயலாகச் சித்தரித்து, பிரிவினைவாத பயங்கரவாத பீதியூட்டி, 90களில் நடந்தது போல, மீண்டும் ஜெயா தலைமையிலான பாசிச ஆட்சியை நிறுவும் நோக்கத்துடன் பார்ப்பனபாசிசக் கும்பல்கள் ஓரணியில் திரண்டு புலி பூச்சாண்டி காட்டி பீதியூட்டி வருகின்றன.
அவ்வளவுதான்! தொடை நடுங்கிய கருணாநிதி உடனடியாக வைகோவையும் கண்ணப்பனையும் கைது செய்து சிறையிலடைத்தார். திரைப்பட இயக்குனர்களான அமீர், சீமான் ஆகியோரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்று பாசிச ஜெயா கூச்சலிட்டதும், அவர்களையும் கைது செய்து சிறையிலடைத்துள்ளார். இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் ஆலோசகரும் சகோதரருமான பாசில் ராஜபக்ஷே, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசிய பிறகு, இலங்கைக்கு இந்தியா 800 டன் நிவாரணப் பொருட்களை அனுப்புவது; ஈழத்தமிழர் பாதுகாப்புக்கு உத்தரவாதம்; அமைதியான முறையில் பேச்சு வார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது; மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரமளிக்கும் அரசியல் சட்டத்தை இலங்கை அரசு செயல்படுத்த வலியுறுத்தல் ஆகியவற்றைக் கொண்ட கூட்டறிக்கை இலங்கைஇந்திய அரசுகளின் சார்பில் வெளியிடப்பட்டு, பிரணாப் முகர்ஜியும் கருணாநிதியைச் சந்தித்தார். “மத்திய அரசை வேதனைக்குள்ளாக்கும் சிக்கலை உருவாக்க மாட்டோம்; அனைத்துக் கட்சித் தலைவர்கள் பேசி முடிவு செய்வோம்” என்று கூறி தமிழக எம்.பி.க்கள் பதவி விலக மாட்டார்கள் என்பதைச் சூசகமாக அறிவித்து விட்டார், கருணாநிதி. ராமன் பாலம் விவகாரத்தில் சந்தர்ப்பவாதமாக நடந்து கொண்டு பின்வாங்கியதைப் போல, இப்போதும் பார்ப்பனபாசிசக் கும்பலுக்கு அஞ்சிப் பம்மிப் பதுங்கிவிட்டார்.
இந்தக் கூட்டறிக்கை எவ்வளவு மோசடியானது என்பதற்கு கிளிநொச்சியில இன்னமும் இலங்கை அரசு நடத்திவரும் போர்த்தாக்குதலே சாட்சியம் கூறப் போதுமானது. “பயங்கரவாதப் புலிகளுக்கு எதிராக இராணுவத் தீர்வு; ஈழத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு” என்பதே தமது அரசின் கொள்கை என்கிறார் அதிபர் ராஜபக்ஷே. இலங்கையில் போர்நிறுத்தம் செய்வது பற்றி இந்த அறிக்கையில் எதுவுமே இல்லை.
இவ்வளவுக்குப் பின்னரும் ஈழ ஆதரவாளர்களில் ஒரு பிரிவினர் இந்திய அரசின் தயவில் ஈழ விடுதலையைச் சாதிக்க முடியும் என்று நம்புகின்றனர். “சீனாவும் பாகிஸ்தானும் இலங்கைக்கு இராணுவ உதவிகள் செய்து இந்தியாவுக்கு எதிரான தளமாகப் பயன்படுத்த முயற்சிக்கின்றன. இதனால் இந்தியாவுக்குப் பேராபத்து ஏற்பட்டுள்ளது. சிங்களனை நம்புவதைவிட ஈழத் தமிழனை நம்புவதுதான் இந்திய நலனுக்கு ஏற்றது. எனவே ஈழ விடுதலையை இந்தியா ஆதரிக்க வேண்டும்” என்கிறார் பழ.நெடுமாறன். இந்த வாதம் சரியானதென்றால், நேபாளத்தில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக இந்தியா செய்த சதிகளும் நியாயமாகி விடும். ஏனென்றால், நேபாள பிற்போக்கு மன்னராட்சியை ஆதரிக்காவிட்டால், அவர் சீனா பக்கம் சாய்ந்து இந்தியாவுக்கு ஆபத்தாகி விடும் என்று கூறித்தான் நேபாள மன்னராட்சியை இந்திய அரசு முட்டுக் கொடுத்து ஆதரித்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தியாவில் காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநில மக்களின் சுயநிர்ணய உரிமைப் போரை துப்பாக்கி முனையில் ஒடுக்கிவரும் இந்திய அரசு, ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் என்று நம்பி ஏமாற முடியுமா?
நெடுமாறன் கதைப்பதைப் போலின்றி, இந்திய ஆளும் வர்க்கங்களின் நோக்கமும் நலனும் வேறானதாக இருக்கிறது. தென்கிழக்காசிய நாடுகளின் “ஏசியான்” (ASEAN) ஐரோப்பிய நாடுகளின் “ஐரோப்பிய ஒன்றியம்” (EU) போலவே, தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பை (SAARC) பொருளாதார ஒன்றியமாக உருவாக்கவே இந்திய ஆளும் வர்க்கங்கள் விரும்புகின்றன. இந்தியத் தரகு அதிகார வர்க்க முதலாளிகள் வெளிநாடுகளில் மூலதனமிட்டுள்ள வகையில், அவர்களுக்கு இலங்கை முக்கிய பொருளாதாரமாக உள்ளது. ஆயுத விற்பனை உள்ளிட்டு பொருளாதார வர்த்தக உறவிலும் முக்கிய இடத்தை வகிக்கிறது. தேயிலை எஸ்டேட்டுகள், கட்டுமானத் துறை, இலகுரக மோட்டார் வாகனங்கள் முதலானவற்றில் ஏற்கெனவே காலூன்றியுள்ள இந்தியத் தரகுப் பெருமுதலாளிகள், தற்போது தொலைதொடர்புத் துறையிலும் இலங்கையில் மூலதனமிட்டுள்ளனர். இந்தியப் பெருங்கடலில் இராணுவப் போர்த் தந்திர முக்கியத்துவம் வாய்ந்த திரிகோணமலை, கொழும்பு ஆகிய துறைமுகங்களும் கடல்வழித் தடங்களும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. தெற்காசியக் கூட்டமைப்பில் பாகிஸ்தானை எதிர்கொள்ள, அதற்கடுத்த பெரிய நாடான இலங்கையுடனான நட்புறவு இந்தியாவுக்கு அவசியமாக உள்ளது. இந்திய ‘அமைதிப்படை’ இலங்கையை ஆக்கிரமித்த போது பிரேமதாசா ஆட்சிக் காலத்தில் இந்தியஇலங்கை உறவுகள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டதே தவிர, மற்றபடி நீண்ட காலமாக இலங்கை ஆளும் வர்க்கங்கள் இந்தியாவுடன் நட்புறவையும் அதன் வட்டார மேலாதிக்கத்தையும் ஆதரித்தே வந்துள்ளன.
இன்றைய உலகமயச் சூழலில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ளதைப் போல, இந்தியாஇலங்கை இடையே உள்ள வரி, கடவுச் சீட்டு கட்டுப்பாடுகளை அகற்றி நெருங்கி வர இந்தியஇலங்கை அரசுகள் திட்டமிட்டுள்ளன. இதற்காக ஒப்பந்தம்கூடக் கொள்கையளவில் ஏற்கப்பட்டுள்ளது. அண்மையில் இலங்கையில் நடைபெற்ற “சார்க்’ மாநாட்டில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், தெற்காசிய நாடுகளிடையே ஒரே நாணயமுறையை உருவாக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்படி இலங்கை அரசின் பக்கம் இந்தியா நிற்பதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. ஆனால், ஈழ விடுதலையை ஆதரிப்பதற்கு ஒரு காரணமும் இல்லை. இலங்கை மீது மேலாதிக்கம் செலுத்தவும் மிரட்டிப் பணிய வைப்பதற்கும் பகடைக் காயாகப் பயன்படுத்துவதற்கு வேண்டுமானால், ஈழப் பிரச்சினையை இந்திய அரசு ஆதரிக்கலாம். இதை நம்பி இந்திய அரசிடம் ஆதரவு கோருவதும் பெறுவதும் அப்பட்டமான துரோகமாகும்.
தற்போது தொடுக்கப்பட்டு வரும் தாக்குதலில் சிங்கள இராணுவம் வெற்றி பெற்றால், தமிழர்கள் இலங்கையின் இரண்டாந்தரக் குடிமக்கள் என்பது சிங்கள இனவெறியர்களால் உறுதி செய்யப்படும. தெற்காசியப் பிராந்தியத்தில் எல்லா விடுதலைப் போராட்டங்களையும் நசுக்கி அழிப்பது என்ற இந்திய அரசின் நோக்கமும் நிறைவேறும். தமிழினத்தின் நியாய உரிமைக்கு வாய்திறக்கக் கூட முடியாதபடி பிரிவினைவாத பயங்கரவாதப் பீதியூட்டிக் கருப்புச் சட்டங்களும், ஒடுக்குமுறையும் ஏவப்படும். எனவே, சிங்கள இனவெறித் தாக்குதலுக்கு எதிராகவும் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாகவும் போராடுவது மட்டுமின்றி, இந்தியாவின் மேலாதிக்கத்துக்கு எதிராகவும் போராட்டங்கள் கட்டியமைக்கப்பட வேண்டும். ஈழத் தமிழருக்கு சிங்கள அரசு மட்டுமல்ல, இந்திய அரசும்தான் எதிரி என்பதைப் புரிந்து கொண்டு போராடாதவரை ஈழத்தின் கண்ணீருக்கு விடிவே இல்லை.

11/3/08

ஈழம்: தமிழ் சினிமாவின் 6 மணிநேரத் தியாகம் !

தீபாவளி, பொங்கல், குடியரசு தினம், சுதந்திர தினம் ….பண்டிகை நாட்களையெல்லாம் திரைப்பட நடிகர்களின் வாழ்த்துச் செய்தி, நேர்காணல்கள், படங்களால் நிரப்பியது போய் இப்போது ஈழப் போராட்டம் கூட சினிமாக்காரர்களை வைத்துத்தான் நடத்தவேண்டுமென்றால் என்னவென்று சொல்ல?
80களில் பல்லாயிரக்கணக்கில் மேற்கத்திய நாடுகளுக்கு புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் தங்களது விடுதலைப் போராட்ட உணர்வை எடுத்துச் சென்றார்களோ இல்லையோ தமிழ் சினிமாவையும் கூட மறக்காமல் கொண்டு சென்றனர். அதன் விளைவாக 90கள் மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் தமிழ் திரைப்படங்களுக்கு உலகச் சந்தை தோன்றியது. தமிழ் சினிமா வசூல், தமிழகத்தில் ஏ,பி.சி என்று பிரிக்கப்படுவது போல சர்வதேச அளவிலும் வினியோகம் செய்து விற்கப்பட்டது. வரவு அதிகமாகியதால் செலவும் பல கோடிகளில் செய்யலாம் என்ற நிலைமையும் உருவானது. சிவாஜி போன்ற குப்பைத் திரைப்படங்கள் இந்த சூழ்நிலையை நன்கு அறுவடை செய்து கொண்டன. இப்படி தமிழ் சினிமாவின் கலெக்ஷன் கல்லா பிரம்மாண்டமாகக் கட்டுவதற்கு ஈழத் தமிழர்களும் ஒரு முக்கிய காரணமாக அமைந்து விட்டனர்.
தமிழ்நாட்டின் மக்களெல்லாம் ஈழத்தமிழர்களை அவர்களது போராட்டங்களை வைத்து தெரிந்து வைத்திருக்கும் போது சினிமா நடிகர்கள் மட்டும் தங்கள் படங்கள் வெளிநாடுகளில் ஓடுவதற்கு இலங்கை எனப்படும் நாட்டில் வாழக்கூடிய தமிழர்கள் எனப்படும் சில ஜீவன்கள் காரணமாக இருக்கிறார்கள், அவர்களுக்கு ஏதோ ஒரு பிரச்சினை என்பதை வைத்து கொஞ்சம் தோராயமாகவும் அறிந்திருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவின் வர்த்தகம்தான் தமிழ் சினிமாவின் சமூக உணர்வைத் தீர்மானிக்கிறது என்பதை குசேலன் பிரச்சினையில், பெங்களூருவில் படம் ஓடவேண்டும் என்பதற்காக ஒகேனக்கல் பிரச்சினையில் தான் பேசியவற்றுக்கு ரஜினி மன்னிப்பு கேட்டதை வைத்து அறிந்து கொள்ளலாம். அதே மாதிரிதான் தங்கள் படங்களுக்கு கொட்டிக்கொடுக்கும் ஈழத் தமிழ் மக்களுக்காக ஒரு ஆறு மணிநேரம், காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை குளிரூட்டப்பட்ட, கழிப்பிட வசதியெல்லாம் கொண்ட கேரோவான் வண்டிகளெல்லாம் இல்லாமல் நடிகர் சங்கக் கட்டிடத்தின் முகப்பில் பந்தல் போட்டு உண்ணாமல் நாற்காலிகளில் அமர்ந்திருந்தார்கள். இந்த ஆறுமணிநேர உண்ணாநோன்புத் தியாகம்தான் இனிவரும் ஒருவாரம் ஊடகங்களில் அடிபடப்போகிறது என்பதால் அதற்கு முன் அந்தத் தியாகத்தைப் பற்றி நாமும் நினைவு கூரவேண்டுமென்பதால் இந்தப்பதிவு.
இந்த ஆறு மணிநேர உண்ணா நோன்புத் தியாகமும் கூட இயல்பாக முடிவெடுக்கப்பட்டு வரவில்லை. ராமேஸ்வரத்தில் பாரதிராஜாவின் தலைமையில் இயக்குநர்கள் நடத்திய பேரணியில் தாங்கள் கலந்துகொள்ளவில்லை என்பதை சரி செய்வதற்காக, வேறு வழியில்லாமல் ஒரு நிர்ப்பந்தத்திற்காக நடத்தப்பட்டதுதான் இந்தப் போராட்டம். ஒரு பத்திரிகையில் பாரதிராஜா சொன்னது போல இழவு வீட்டிற்கு செல்வதென்றால் பிணம் இருக்கும் இடத்திற்குத்தான் செல்லவேண்டுமே ஒழிய பிணம் என்னுடைய இடத்திற்கு வரவேண்டும் என ஒருவர் கோரமுடியாது. ராமேஸ்வரம் சென்றால் தங்களுக்குரிய ஆடம்பர வசதிகள் கிடைக்காது என்பதால் நடிகர்கள் அதை புறக்கணித்தார்கள். அதனால் ராமேஸ்வரத்துக்கு தார்மீக ஆதரவு அளித்து விட்டு தங்கள் கணக்கிற்காக நடிகர் சங்கத்தில் கூடி போராட்டம் என்று அறிவித்தார்கள்.
நாயகன் நாயகியை தூக்கி ஒரு ரவுண்டு அடிப்பதற்காக ராஜஸ்தானுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும், ஆல்ப்ஸ் மலைக்கும் செல்லும் ஜன்மங்கள் ஈழப் பிரச்சினைக்காக ராமேஸ்வரம் செல்லமாட்டோம் என்று புறக்கணித்ததை என்னவென்று சொல்ல? இவர்களெல்லாம் போராடவில்லை என்று யார் அழுதார்கள்?
நடிகர் சங்க கட்டிடம் இருக்கும் ஹபிபுல்லா சாலை ஆறுமணிநேர உண்ணாவிரதத்துக்காக அமர்க்களப்பட்டது. நட்சத்திரத் தெய்வங்களை ரசிகர்கள் தரிசிப்பதற்காக தெரு முழுக்க சவுக்கு கம்பால் கட்டி க்யூ அமைக்கப்பட்டது. ஆறு மணிநேரமும் திருப்பதி கோவிலுக்கு நிற்பதைப் போல ரசிக பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தல, தளபதி, சூப்பர் ஸ்டார், என்று கன்னத்தில் போட்டுக்கொண்டார்கள். யாரும் ஈழம் என்று மறந்தும்கூட உச்சரிக்கவில்லை. நேரில் வரமுடியாத பக்தர்களுக்காக சன் தொலைக்காட்சி தனது செய்தி அலைவரிசையில் நேரடியாக ஒளிபரப்பி சேவையாற்றியது. உலகத்திலேயே ஒரு நாள் முழுக்க சினிமாவை வைத்து நீயூஸ் சேனல் நடத்திய பெருமை சன்னுக்கு மட்டும்தான் சேரும்.
இந்த ஆறு மணிநேர உண்ணாவிரத அறப்போராட்டம் எவ்வளவு பிரச்சினைகள், இழப்புகள், தியாகங்களோடு நடக்கிறது என்பதை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராதாரவி தனது உரையில் தெரிவித்தார். இதற்காக பல படபிடிப்புக்கள் ரத்து செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டதாம். நடிகை திரிஷாவிற்கு பெங்களூருவில் ஒரு முக்கியமான ஷூட்டிங்க இருந்ததால் வர இயலாது என்றாராம். பிறகு ராதாரவி வற்புறுத்தியதன் பேரில் அதை ரத்து செய்து விட்டு வந்திருக்கிறார். நயன்தாராவும் கூட அப்படித்தான் வந்திருக்கிறாராம். இந்த தாரகைகளும் ஃபுல் மேக்கப்போடு கண்ணாடிகளைத் தூக்கிவிட்டவாறு இடையில் கரைந்து விட்ட அரிதாரத்தை ஈடுகட்ட முடியவில்லையே, உண்மை முகம் அம்பலமாகிவிடுமோ என்ற சோகத்தோடு குந்தியிருந்தார்கள்.
சேர்ந்தாற் போல நாலு வார்த்தை தமிழலில் பேசத் தெரியாமல் அதற்கும் டப்பிங் வைத்திருக்கும் த்ரிஷா போன்ற அக்மார்க் தமிழ் நடிகைகளெல்லாம் ஈழத்திற்காக ஒரு கிழமையை தியாகம் செய்திருக்கிறார்கள் என்பது ஈழத்தின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் பதிவாகப் போகிறது என்றால் ஈழமே நீ செய்த பாவம்தான் என்ன?
பேசிய பல நடிகர்களுக்கு பிரச்சினை என்னவென்றே தெரியவல்லை. ஒன்பது சென்டிமெண்ட் கதைகளை மட்டும் மாற்றி மாற்றி பன்றிக்குட்டிகளைப் போன்ற படங்களாய் எடுத்தும், அதற்கு ஒன்பது பெருக்கல் இரண்டு உணர்ச்சிகளை மட்டும் காட்டத் தெரிந்த நடிகர்களின் உலகம் எவ்வளவு சிறியது என்பது அவர்கள் பேச்சில் தெறித்தது. சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் ஈழத்துப் பிரச்சினைக்காக ஏதோ ஒரு வெட்டி வாரியத்தின் பதவியை ராஜினாமா செய்தாராம். அதை வெளிநாட்டுப் படப்பிடிப்புகளுக்குச் சென்ற போது பல ஈழத் தமிழர்கள் பாராட்டினார்களாம். அதன் பிறகுதான் சிம்பு தன் தந்தையிடம் இலங்கையில் என்ன பிரச்சினை என்று கேட்டாராம். அப்பாவும் முப்பது ஆண்டு வரலாற்றை மூன்று நிமிடத்தில் விளக்க ஈழப் பிரச்சினை என்றால் என்ன என்று சிம்புவுக்கு தெரிந்ததாம்.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உண்மையை சிம்பு பேசிய போது அனைவரும் என்ன நினைத்துக் கொண்டிருப்பார்கள் என்பதை சன் டி.வியின் ஆன்லைன் எடிட்டர், நயன்தாரா அந்தப் பேச்சை எப்படிக் கவனித்துக்கொண்டிருந்தார் என்பதைக் காட்டியதன் மூலம் புரியவைத்தார். ஈழம் மறைந்து அந்த ஜோடியின் காதல், ஊடல், நெட்டில் வளைய வந்த காட்சிகள் எல்லாமும் பார்ப்பவர்களின் மனதில் ஓடிக்கொண்டிருந்திருக்கும் என்பதை சன் டி.வியின் புண்ணியத்தில் புரிந்து கொள்ள முடிந்தது. கிசுகிசுவில் மட்டுமே செய்தியாக அடிபடுவதற்குத் தகுதி கொண்ட இந்த புண்ணியவான்கள் ஈழத்திற்காக குரல் கொடுக்கிறார்கள் என்றால் எந்த மடையானவது நம்புவானா என்பதுதான் அந்த எடிட்டர் அப்படிக் காட்டியதற்குக் காரணம். இதை அவர் அறிந்தே செய்யாவிட்டாலும் உண்மை அதுதானே? ஒகேனக்கல் பிரச்சினையில் சிம்புவின் அருகில் நயன்தாரா அமர்ந்திருந்தார் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சேதியை எல்லா நிருபர்களும் தங்கள் பத்திரிகைகளில் பதிவு செய்ததை ஈண்டு நினைவு படுத்திக்கொள்வது ஈழத்திற்கு நல்லது.
ஆவேசமாகப் பேசிய ராதாரவி இலங்கைப் பிரச்சினைக்காக கிரியேட்டிவாக ஒரு யோசனையை முன்வைத்து அது அமல்படுத்தப்பட்டால் ஈழப் பிரச்சினை தீர்ந்து விடும் என்றார். அது ஈழத் தமிழர்களை இந்தியத் தமிழர்கள் என்று அழைத்தால் இந்திய அரசு கூடுதல் முக்கியத்துவத்துடன் அதைக் கவனிக்குமாம். இலங்கையில் இருக்கும் எல்லாத் தமிழர்களும் இந்தியாவிலிருந்து பஞ்சம் பிழைக்கச் சென்றவர்கள் என்பது ராதாரவியின் அன்டர்ஸ்டேன்டிங். இந்த முட்டாள் தனத்தை அடுத்துப் பேசிய விடுதலை சிறுத்தைகளின் திருமாவளவன் மலையகத்தில் இருப்பவர்கள்தான் இந்தியத் தமிழர்கள் மற்றவர்கள் அங்கேயே தோன்றிய மண்ணின் மைந்தர்கள் என்று நாசூக்காகப் புரிய வைத்தார்.
நடிகர் சங்கத்தின் செயலாளரின் அறிவே இந்த இலட்சணத்தில் இருக்கும் போது நாம் மும்தாஜ்ஜின் புரிதல் எப்படியிருக்கும் என்பதை எடிட்டிங் இல்லாமலே புரிந்து கொள்ள முடியுமே? போகட்டும், சினிமாக்காரர்களின் போராட்டத்தில் சிறுத்தைகளுக்கு என்ன வேலை என்ற கேள்வி நமக்கு எழுந்தது. எல்லாம் ஈழத்துக்காக வரும் எந்த ஆதரவையும் விட்டுவிடக் கூடாது என்ற நல்லெண்ணம்தான். இப்படி எல்லோரையும் முடிந்த அளவு பயன்படுத்துவது நல்லது என்று விடுதலைச் சிறுத்தைகள் மட்டுமல்ல விடுதலைப் புலிகளின் பிரபாகரனே நினைக்கக் கூடும். எதிரி, நண்பன் குறித்த பாகுபாட்டிற்கு இடமில்லாமல் போராட்டம் தேங்கியிருக்கும் போது இத்தகைய பயன்படுத்தும் சிந்தனை யாருக்கும் இயல்கபாகத் தோன்றத்தானே செய்யும்? இந்திய அரசு தங்களைப் புரிந்து கொள்ளவில்லை என்பதோ, சினிமாக்காரர்களின் ஆதரவு தங்களுக்கு தேவை என்று நினைப்பதோ வேறுவேறல்ல.
நடிகர் ஷாம் பேசும்போது வெளிநாடுகளுக்கு செல்லும் போது தங்களை ஈழத்தமிழர்கள்தான் பார்த்துக் கொள்வார்கள் என்று குறிப்பிட்டார். இது உண்øமையெனும் பட்சத்தில் இதற்காக நாம் ஈழத்தமிழர்களை மன்னிக்கத் தயாராக இல்லை. ஏற்கனவே தமிழகத்தில் சினிமாவின் ஆட்சியில் எக்கச்சக்கமான பிரச்சினைகளை சந்தித்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு, பாசிசமும், கோமாளித்தனமும் கலந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற அரசியல்வாதிகளை சகித்துக் கொண்டிருக்கும் அவர்களுக்கு இதை விட ஈழத்தமிழ் மக்கள் இடையூறு செய்ய முடியாது. ஈழத்தமிழர்கள் சினிமாவுக்காக இறைக்கும் ஒவ்வொரு காசும், ஒவ்வொரு விநாடியும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஆப்பு வைக்கப் பயன்படுகிறது என்பதை தயவு செய்து புரிந்து கொண்டு அவர்கள் சினிமா மோகத்தைக் கைவிடும் வேலையைப் பார்ப்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல ஈழத்துக்கும் நல்லது.
மலையாளத்திலும், தமிழிலும் ஒரு சேர வண்டியோட்டும் ஜெயராம் என்ற நடிகர் பேசும் போது தான் ஒரு இந்தியன் என்ற தகுதியில் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டு ஜெய் ஹிந்த் என்று முடித்தார். ஏற்கனவே இந்தியத் தகுதி ஈழத்தின் இரத்தத்தை உறிஞ்சுவதற்காக ஆயுதங்களையும், பயிற்சியையும் இலங்கை ராணுவத்திற்கு கொடுத்திருக்கும் போது இந்தியன் என்ற உணர்வுள்ள இந்தியர்கள் ஈழத்திற்கு ஆதரவு தெரிவித்தால் அதை விட ஆபத்து என்ன இருக்கிறது?
கமலஹாசன் பேசும்போது தமிழன் என்ற குறுகிய உலகிலிருந்து இந்தப் பிரச்சினையைப் பார்க்கவில்லை என்றார். பிரச்சினை என்னவென்றால் கமல் அவர்கள் என்ன அடிப்படையில் இருந்து இதைப் பார்க்கிறார் என்பதல்ல, ஈழத் தமிழ் மக்கள் என்ன பிரச்சினையில் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதுதான். என்னவிருந்தாலும் அவர் உலக நாயகனாயிற்றே. யுனிவர்சல் ஹீரோ உள்ளூர் உணர்வில் இருக்கமாட்டார் என்பதற்காக ஈழத்தமிழர்களை ஒடுக்கும் சிங்களப் பேரினவாத அரசு இனவெறியை விட்டுவிடப்போகிறதா என்ன? தன்மீது தமிழ்க் கறை படிந்து விடக்கூடாது என்பதற்காக கமல் அவ்வளவு ஜாக்கிரதையாகப் பேசுகிறாராம். இவர் அளவுக்கு ஞானமில்லாவிட்டாலும் சராசரித் தமிழன் இலங்கைப் பிரச்சினையை எந்த சிக்கலுமில்லாமல்தான் புரிந்து வைத்திருக்கிறான்.
சூப்பர் ஸ்டார் பேசும்போது கொஞ்சம் ஆன்மீகம் கலந்து அடித்தார். அதாவது ஒரு நாட்டில் பாமர மக்கள் குருதி சிந்தும்போது அந்த நாடு விளங்கவே விளங்காது என்று சாபம் கொடுத்தார் ரஜினி. இப்படி சாபம் கொடுத்தே ஒரு ஆக்கிரமிப்பு இராணுவத்தை தீர்த்து விடலாம் என்றால் ஈராக் மக்களுக்கு இந்த எளிய ஞானம் ஏன் தெரியாமல் போனதென்று தெரியவில்லை. அடுத்து சிங்கள அரசை சினிமா பாணியில் -சாடிய ரஜினி, முப்பது ஆண்டுகளாக போரில் வெல்லமுடியவில்லை என்றால், சரியான ஒரு ஆம்பிளையாக இருந்தால் தோல்வியை ஒத்துக்கொள்ள வேண்டியதுதானே என்று ஏதோ ஒரு குழாயடிச் சண்டைக்கு பஞ்சாயத்து செய்வது போல பேசினார். இந்தக் குழாயடித் தத்துவத்தையே இலங்கைப் பிரச்சினைக்கான மாபெரும் தீர்வாக அடுத்தநாள் தினசரிகள் தலைப்புச் செய்திகளாக வெளியிட்டது நல்ல வேடிக்கை. ஒகேனக்கல் கூட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு ஏதோ பேசி பின்னர் பிரச்சினை ஆனதால் இங்கு ஜாக்கிரதையாக பேசினார் என்றாலும் எதிர்காலத்தில் ஷங்கர் படம் கொழும்புவில் ஷூட்டிங் செய்ய நேரிட்டு அதற்கு இலங்கை அரசின் அனுமதி வேண்டும் பட்சத்தில் இந்தப் பேச்சுக்கும் மன்னிப்பு கேட்பாரா என்பது தெரியவில்லை.
இலங்கையில் நடக்கும் பிரச்சினைக்கெல்லாம் நாம் ஏன் உண்ணாவிரதம் இருக்கவேண்டும் என்று தானும், அஜித்தும் பேசியதாக சில பத்திரிகைகளில் வந்த வதந்தி தன்னைச் சங்கடப்படுத்தியதாக பேசிய அர்ஜூன் 23 ஆண்டுகளாக தமிழ் உப்பைச் சாப்பிட்டுக் கொண்டிப்பவன் எப்படி அப்படி பேசுவேன் என்று புலம்பினார். அஜித் பேசும் போது இவையெதுவும் வதந்தி இல்லை என்பதுபோல சினிமா இன்டஸ்ட்ரியை, சினிமா இன்டஸ்ட்ரியாக இருக்க விடுங்கள் என்று ஒரு வாக்கியத்தில் முடித்துக் கொண்டார். இதன் பொருள் சினிமா உலகிற்கு எதற்கு அரசியல் எல்லாம் என்பதுதான். இந்த அளவுக்கு வெளிப்படையாக இருப்பதால் அஜித்தைப் பற்றி நாம் விமரிசிக்க ஏதுமில்லை.
ஜெயம் ரவி பேசும்போது ஏதோ சினிமா உலகால்தான் ஈழத்து தமிழர்கள் தங்கள் பிரச்சினைகளை மறந்து சற்று நேரம் ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்கள் என்றார். இதை புலம்பெயர்ந்த ஈழத்து தமிழர்கள்கூட ஒத்துக்கொள்வார்கள் என்றுதான் நினைக்கிறோம். அதே சமயம் அமெரிக்க இராணுவத்துக்கு எதிராக போராடும் ஈராக்கின் மக்கள் பொழுது போக்கிற்காக ஹாலிவுட் படங்களைப் பார்த்து மகிழ்வதில்லை என்ற உண்øமையையும், வன்னிக் காடுகளில் அகதிகளாக ஓடிக்கொண்டிருக்கும் மக்களுக்கும் இது பொருந்தும் என்பதையும் புலம் பெயர்ந்தவர்கள் பரிசீலிக்கவேண்டும்.
ராமேஸ்வரத்தில் உணர்ச்சிவசப்பட்டு உரையாற்றியதற்காக அமீரும், சீமானும் கைது செய்யப்பட்டதை சிலர் குறிப்பிட்டாலும் பலர் குறிப்பிடவில்லை என்பதோடு என்ன பேசவேண்டும் என்பதில் உஷாராக இருந்தனர். மேலும் இந்திய- இலங்கை நாடுகளின் இறையாண்மைக்கெதிராகவோ, மத்திய மாநில அரசுகளுக்கெதிராகவோ எதுவும் பேசக்கூடாது, ஏன் அதிபர் ராஜபக்க்ஷேவைப் பற்றிக் கூட பேசக்கூடாது என்று நடிகர் சங்கம் தடையுத்தரவு போட்டிருந்ததை மன்சூர் அலிகான் போட்டுடைத்தார். இவற்றைப் பற்றியெல்லாம் பேசக்கூடாது என்றால் ஈழத்தின் போராட்டத்தில் என்ன எஞ்சியிருக்கும்? பல நடிகைகள் சன்னின் செய்தியாளர்களிடம் தனியாக பேசும் போது ஏதோ இலங்கையில் உள்ள மக்கள் உணவு, உடை இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள் என்பதற்காகவும் அதற்காக உதவி செய்யும் பொருட்டே இந்தப் போராட்டம் நடக்கிறது என்றார்கள். அதாவது ஈழத்தின் தமிழ்மக்கள் பூகம்பம், சுனாமியால் பாதிக்கப்பட்டு தங்கள் வயிற்றுப்பாட்டுக்காக ஏதோ பிச்சை போல யாசகம் கேட்கிறார்கள் என்ற புரிதலில்தான் பல நடிகர்கள் பேசினார்கள். இதை விட ஈழப் போராட்டத்தை கொச்சைப் படுத்த முடியுமா என்ன?
திரைப்படங்களில் சாகசம் செய்யும் இந்த ஹீரோக்கள் நிஜத்தில் எவ்வளவு கோழைகளாக இருந்தால் இப்படி ஒரு தடை உத்தரவு போட்டு அமல்படுத்தியிருப்பார்கள்? பிரச்சினையைப் பற்றி பேசுவதற்கே அவ்வளவு அச்சம் இருந்தால் இவர்கள் அல்லல் படும் அந்த மக்களுக்காக என்ன கிழிக்க முடியும்? இல்லை அப்படிக் கிழித்துத்தான் ஆகவேண்டும் என்று யார் அழுதார்கள்? திரைப்படத்தில் மட்டுமல்ல நாங்கள் நிஜத்திலும் ஹீரோக்கள்தான், தேவைப்பட்டால் எங்கள் உயிரையும் கொடுக்கத் தயங்கமாட்டோம் என்று பார்வர்டு பிளாக் கட்சியின் தலைவர் கோமாளி கார்த்திக் பேசும்போது அழுவதா சிரிப்பதா என்று புரியவில்லை.
தனது படங்களுக்கு பாலுணர்வைத் தூண்டும் ஆபாசத் தலைப்புக்களை வைத்து ரசிகர்களைத் தந்திரமாக இழுக்கும் எஸ. ஜே. சூர்யா பேசும்போது தான் ஒரு ஈழத்தமிழரின் குடும்பத்தை தத்து எடுத்து வளர்ப்பதாக முழங்கியவர் அதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்து கொடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அப்படி ஏற்பாடு செய்து கொடுத்தாலும் இவரது படத்தை அந்தக் குடும்பம் குடும்பத்தோடு பார்க்கமுடியாது என்பது ஒருபுறமிருக்க தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் ஈழத்து மக்கள் அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள், அங்கு சென்று ஒரு குடும்பத்தை எடுத்துக்கொள்ளவேண்டியதுதானே அதற்கு எதற்கு மத்திய அரசு? உண்மையில் இங்கு ஈழத்து மக்கள் அகதிகளாக வாழ்வது கூட இந்த படைப்பாளிக்கு தெரியவில்லை.
ஈழத்து மக்களுக்கு உதவிடும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென தந்தி கொடுத்தால் மட்டுமே தனது ரசிகர்களாக இருக்கமுடியுமென இளைய தளபதி விஜய் பேசும்போது கேட்டுக்கொண்டார். இதே தந்தியை கருணாநிதி கொடுக்கச் சொல்லியதும் அப்படி அனுப்பப்பட்ட தந்திகள் டெல்லியின் குப்பைக்கூடைக்குள் சென்றுவிட்டதும் இந்தப் பச்சைப்பிள்ளைக்கு தெரியாது போலும்! மற்றவர்களை விட வித்தியாசமாக ஏதாவது செய்யவேண்டும் என்று யோசித்திருப்பவர் தான் படிக்கும் தினத்தந்தியில் சினிமா செய்திகளை மட்டும் படிப்பார் போலும். இல்லையேல் கருணாநிதி தன்னை முந்திக்கொண்டது குறித்து தெரிந்திருக்கும். தெரிந்திருந்தால் தந்திக்குப்பதில் ஃபேக்ஸ் அல்லது மின்னஞ்சல் அனுப்புமாறு கோரியிருக்கலாம். பெரும்பான்மையினரிடம் இந்த வசதிகள் இல்லையென்பது கூட இந்த நடிகர்களுக்கு எங்கே தெரியப்போகிறது?
நடிகர் சங்க மேடையில் அரசியல் பேசமுடியாது என்று சலித்துக்கொண்ட கேப்டன் விஜயகாந்த் தனியாக செய்தியாளர்களிடம் பேசும் போது மக்கள் பிரச்சினைகளிலிருந்து திசை திருப்புவதற்காகவே தி.மு.க அரசு ராமேஸ்வரம் போராட்டம், மனிதச் சங்கிலி, ராஜினாமா மிரட்டல், நடிகர்களை வைத்து உண்ணாவிரதம் என்று நாடகம் ஆடுவதாக எகிறியவர், இலங்கைப் பிரச்சினைக்காக இவர்களிடம் தீர்வு இல்லை என்று ஏதோ அந்தத் தீர்வு இவரது சட்டைப் பையில் பத்திரமாக இருப்பதுபோல சீறினார். நடிகர்களின் உண்ணாவிரதம் ஒரு ஸ்டண்ட் என்று தெரிந்திருக்கும் போது இவர் மட்டும் என்ன வெங்காயத்துக்கு அங்கே வந்து வீரவசனம் பேசிவிட்டு செல்லவேண்டும்?
திருமண விருந்தில் ஒலிபெருக்கியின் மூலம் மொய் எழுதியவர்களின் பெயரையும், தொகையையும் அறிவிப்பது போல யார் யார் எவ்வளவு மொய் அழுதார்கள் என்பதை இந்த அரிய உண்ணாவிரதப் போராட்டத்தின் இடையில் அறிவித்தார்கள். கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் ஒரிரு இலட்சங்களில் தங்களது மனிதாபிமானத்தைக் காட்டினார்கள். மொத்த கணக்கும் 45 இலட்சத்தோடு முடிந்து போனது. ஒரு லோ பட்ஜட் படம்கூட ஐந்து கோடி ரூபாயைத் தயாரிப்புச் செலவாகக் கோரும் தமிழ் திரையுலகில், ஒரு குத்துப்பாட்டுக்கு மட்டும் ஒரு கோடியை அள்ளிவீசும் வள்ளல்கள் இருக்கும் தொழிலில் ஈழத்துக்காக ஒரு கோடியைக்கூட தேற்ற முடியவில்லை என்றால் இவர்களது யோக்கியதையைப் புரிந்து கொள்ளலாம். முக்கியமாக இந்தத் தருமப்பணத்துக்காகவா ஈழத்து மக்கள் அங்கே துயரத்தில் உழன்றுகொண்டிருக்கிறார்கள்? அவர்கள் கோருவது அரசியல் ரீதியான ஆதரவை, குறைந்த பட்சம் இலங்கை ராணுவத்திற்கு உதவும் இந்திய அரசு அதை நிறுத்த வேண்டும் என்பதைத்தான். அதைப் பற்றி பேசுவதற்கு அஞ்சும் வீரர்கள் வீசி இறைத்த பணத்தின் மூலம் தங்களது பங்களிப்பை மாபெரும் சாதனையாகக் காட்டிக்கொண்டார்கள்.
இதை நேரடியாக ஒளிபரப்பிய சன் தொலைக்காட்சி நடிகர்கள் அல்லாத சினிமா தொழிற்சங்கத்தினர் பேசும் போதும், அல்லது பிரபலமாகாத நடிகர்கள் பேசும் போதும் கொஞ்சும்கூட சுரணையின்றி விளம்பரங்களைப் போட்டு கல்லாக் கட்டியது. காலையில் காமரா முகப்பில் அமர்ந்திருந்த நடிகர்களுக்கு ஆளுக்கொரு தினகரன் பேப்பரை கொடுத்து புரட்டுவதைக் காண்பித்த சன், மாலையில் அவர்களது படத்தை வண்ணத்தில் போட்டு தமிழ் முரசில் பதிப்பித்து அதையும் கொடுத்து புரட்டுவதைக் காண்பித்தது. ஈழத்தின் தயவில் மலிவான இந்த விளம்பரத்தை மேற்கொள்வதற்கு அவர்கள் வெட்கம் ஏதும் கொள்ளவில்லை.
நடிகர் வினுச்சக்கரவர்த்தி பேசும் போது நடிகர்கள் ஐந்து ரூபாய் கொடுத்தால் அவனது ரசிகர்கள் ஐந்து கோடி கொடுப்பார்கள் என்றார். உண்மைதான். அப்படித்தான் தமிழ்நாட்டின் பண்பாட்டுத்தரம் இருக்கிறது. ஆனால் காட்சிக்கொரு வண்ண ஆடைகளை மாற்றியும், படத்துக்குப் படம் வித்தியாசமாய் குத்துப்பாட்டு ஆடியும், புழுதி பறக்கும் வகையில் சண்டைக்காட்சிகளில் தூள் பரப்பியும் சமூக சேவை செய்யும் இந்த ஜிகினாக்காரர்களை வைத்துத்தான் தமிழக மக்கள் ஈழத்திற்காக உதவவேண்டுமென்றால் அதற்குப் பதில் ஈழத்து தமிழர்கள் சிங்கள அரசிடம் அடிமையாகவே இருந்துவிட்டுப் போகலாம்!

10/24/08

இதயத்தை அறுக்கும் ஈழத்து வீடியோ

முகவரியில்லாமல் வெளியிடப்பட்டிருக்கும் இக்குறும்படம் பிறந்த மண்ணில் முகவரி துறந்து அகதிகளாய் துன்பக்காற்றையே சுவாசித்துக் கொண்டு பாதுகாப்பான இடம் தேடி அலையும் ஈழத்தமிழ் மக்களின் துயரத்தை எடுத்துக் கூறுகிறது. வண்டிகளில் அள்ளிப் போடப்படும் பிணங்கள், குண்டு வெடித்த புகையினூடே கேட்கும் அலறல்கள், அகப்பட்டதை வாரிக்கொண்டு இடம் பெயரும் குடும்பங்கள், படுகாயமுற்று சிகிச்சை வசதிகளற்று படுத்திருக்கும் பச்சிளம் குழந்தைகள், தமிழ்நாட்டிடம் உதவிகேட்கும் மக்கள்……
இந்தப்படம் தொலைக்காட்சியிலும், சினிமாவிலும் நேரத்தைக் கொடுத்திருக்கும் தமிழ் மனங்களின் மனசாட்சியை தொட்டு எழுப்ப முயல்கிறது. எங்களுக்கு உங்களை விட்டால் உதவுதற்கு வேறு யார் இருக்கிறார்கள் என்று கேட்கிறது.
ஆனால் இந்த உதவியை தமிழ் மக்கள் செய்யமுடியுமா ? இலங்கைக்கு ஆயுத உதவி தொடர்ந்து செய்வோம், இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது தொடுத்திருக்கும் போரை நிறுத்த இயலாது, இலங்கை இறையாண்மையில் இந்தியா தலையிடாது என்றெல்லாம் பாரளுமன்றத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெளிவாக அறிவித்துவிட்டார். இந்தப் போரில் சிங்களப் பேரினவாத அரசு வெற்றிபெற வேண்டும் என்பது இந்தியாவின் விருப்பம். தெற்காசியாவில் மேலாதிக்கம் செய்யவிரும்பும் இந்தியாவிற்கும் அதன் முதலாளிகளுக்கும் ஒன்றுபட்ட இலங்கையின் சந்தை தேவைப்படுவதால் ஈழத்தமிழர்கள் சாவதைப்பற்றிக் கவலையில்லை. அதற்காக தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சுட்டுக்கொல்லப்படுவது குறித்தும் அக்கறையில்லை.
இந்திய அரசின் இந்த நிலைப்பாட்டினைத்தான் தேசிய ஊடகங்களும் அநேக கட்சிகளும் கொண்டிருக்கின்றனர். ஈழம் என்று பேசினாலே கைது செய்யவேண்டுமென ஜெயலலிதாவும், காங்கரசு அனாமதேயங்களும், பா.ஜ.கவும் ஊளையிடுகின்றன. கருணாநிதியும் அதற்கு செவி மடுத்து நானும் அதற்கு இளைத்தவனல்ல என்று கைது செய்கிறார். கூடவே மனித சங்கிலிப் போராட்டமும் நடத்துகிறார். எம்.பிக்கள் ராஜினாமா செய்வார்கள் என்ற உதார் வேறு.
தமிழ்நாட்டில் ஈழத்தை வைத்து இப்படித்தான் நாடகம் நடந்துகொண்டிருக்கிறது. உண்மையில் ஈழத் தமிழ் மக்களுக்காக தார்மீக ஆதரவைக்கூட தரக்கூடாது என்ற நிலை மெல்ல மெல்ல மீண்டும் உருவாக்கப்படுகிறது. பொதுவில் தமிழகத்து மக்கள் ஈழத்தின் துயரில் பங்கெடுக்கவேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். ஆனால் அதை தலைமை ஏற்று நடத்த வேண்டிய கட்சிகள் எல்லாம் இந்திய அரசின் துரோகத்துக்கு துணை போகின்றன.
ஆகவே நமது கடமை என்ன? தெற்காசியாவில் நாட்டாமையாக உருவெடுத்து வரும் இந்திய அரசு சிங்களப் பேரினவாத அரசுக்கு செய்யும் உதவியை அம்பலப்படுத்தி முறியடிக்கவேண்டும். ஈழத்தமிழருக்கு இலங்கை அரசு மட்டுமல்ல இந்தியாவும்தான் எதிரி. இதைப் புரிந்து கொண்டு போராடாதவரை ஈழத்தின் கண்ணீருக்கு விடிவில்லை. ஆனாலும் புலிகளும், தமழின ஆர்வலர்களும் இந்தியா தங்களை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றும் அந்தப் புரிதலை தமிழ்நாட்டு மக்களின் போராட்டம் எடுத்துச் சொல்லவேண்டும் என்று விரும்புகிறார்கள். அதனால்தான் தமிழ்நாட்டில் நடிகர்களும், ஜெயலலிதாவும், கருணாநிதியும் ஈழத்தின் அவலத்தை வைத்து நாடகம் நடத்துகிறார்கள். உண்மையில் இந்த நாடக்தத்தை அம்பலப்படுத்துவதோடு, இந்தியாவின் திமிரை அடக்குவதும்தான் நம் முன் உள்ள கடமைகள். அந்தக் கடமையை வலியுறுத்தும் நோக்கில் இந்த அவலச்சுவை நிரம்பிய குறும்படத்தை பார்க்குமாறு கோருகிறோம்.
இதை டவுன்லோட் செய்ய - இங்கே சொடுக்கவும் http://rapidshare.com/files/157044732/eezham.rar

இந்தியா முதுகில் குத்துவது ஏன்?"

எட்டாவது முறையாக குற்றுயிரும் கொலையுயிருமாக வாழ்ந்த மண்ணில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள் ஈழத் தமிழ் மக்கள். வன்னிக் காடுகளில் இலங்கை விமானத்தின் குண்டு விழாத இடத்தை தேடிக்கொண்டிருக்கிறார்கள் துன்பத்தையே உயிர் மூச்சாகக் கொண்டு அலையும் அந்த மக்கள். விடுதலைப் புலிகளை அழிப்பது என்ற பெயரில் தமிழ் மக்களை சுவடு இல்லாமல் அழித்தொழிக்கும் மூர்க்கமான போரைத் தொடுத்திருக்கிறது இலங்கை சிங்கள வெறி அரசு. “தொட்டுவிடும் தூரத்தில் இருக்கும் கிளிநொச்சியை பிடித்துவிடுவோம்” என்று கொக்கரிக்கிறார் ராணுவத் தளபதி பொன்சேகா.
இராணுவ பலத்தின் மூலம் தமிழ் மக்கள் இரண்டாம் தரக் குடிகள் என்ற நிலையை யாரும் கேட்பாரின்றி உறுதி செய்கிறது சிங்கள பேரினவாத அரசு. இந்த அநீதியான போருக்கு எந்த சர்வதேசத் தடையும் இல்லையென கொக்கரிக்கிறார் அதிபர் ராஜபக்ஷே. தடை இல்லையென்பதோடு ஆயுத உதவியும் ஆதரவும் கூட இந்த சர்வதேச அங்கீகாரத்தில் அடங்கியிருக்கிறது. புலிகளின் விமானத் தாக்குதலால் காயமடைந்த இந்திய இராணுவ நிபுணர்கள் மூலமாக இந்தியாவும் இந்த இனவெறிப் போரில் கலந்து கொண்டிருப்பது அம்பலமானது. ஆனாலும் இது குறித்து மவனம் சாதிக்கிறது மன்மோகன் அரசு.
ஆனால் ராஜபக்ஷே ஆர்ப்பட்டமாய் முழங்குகிறார், புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நிறுத்துமாறு இந்தியா சொல்லவில்லை என்று ! அரசாங்ககளுக்கிடையில் இப்படி புரிந்துணர்வு வெளிப்படையாக இருக்கும் போது தமிழ்நாட்டில் மீண்டும் ஈழம் குறித்த கவலை – முன்பு போல இல்லையென்றாலும் – எழுந்திருக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உண்ணாவிரதம், வைகோவின் ஆர்ப்பாட்டம், திரையுலகின் ராமேஸ்வரத்து கூட்டம், தி.மு.கவின் மனித சங்கிலி, அப்புறம் கருணாநிதியின் ராஜினாமா மிரட்டல்….தொட்டுவிடும் தூரத்திலிருக்கும் ஈழத்தின் அலறல் தமிழகத்தை இலேசாக உலுப்பியிருப்பது உண்மைதான்.
எழும்பியிருக்கும் இந்த உணர்வு உண்மையிலேயே ஈழத்தின் அவலத்தை துடைக்கும் வல்லமை கொண்டிருக்கிறதா என்பதுதான் நம்முன் உள்ள பிரச்சினை. தமிழகத்தின் எல்லாத் தலைவர்களும், தமிழின ஆர்வலர்களும் ஒட்டுமொத்தமாக முன்வைக்கும் கோரிக்கை என்னவென்றால் ‘இந்தியா தலையிடவேண்டும், போரை நிறுத்த வேண்டும்’ என்பதே! ஈழத்துப் பிரச்சினையில் இந்தியா நடுநிலைமை வகிப்பது போலவும் இக்கோரிக்கையை வற்புறுத்தினால் போரை நிறுத்தி ஈழத்தமிழர்களுக்கு ஆறுதலளிக்கலாம் என்பதும்தான் இந்த கோரிக்கையின் உட்கிடை.
இந்தியா அல்லது இந்திய அரசு என்பது என்ன? இது நாட்டையும் மக்களையும் மட்டும் குறிக்கவில்லை. இந்திய ஆளும்வர்க்கத்தின் அல்லது முதலாளிகள்-அரசியல்வாதிகள்-அதிகாரவர்க்கத்தின் நலனைத்தான் இந்த அரசு பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்திய முதலாளிகள் மற்றும் அதிகாரவர்க்கம் கோரும் நலன்தான் இந்தியாவின் அயுலறவுக் கொள்கைகளை வழிநடத்தும். அமெரிக்காவின் ஈராக் ஆக்கிரமிப்பை எதிர்க்காமல் இருப்பதோ, ஈரானுக்கெதிராக அமெரிக்காவின் நடவடிக்கைகளை ஆதரிப்பதோ, அணு ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவின் அடிமையாகத் நெளிவதோ இப்படித்தான் நடந்தது. அமெரிக்காவின் ஆசியுடன் தெற்காசியாவின் பிராந்திய வல்லராசகத் திகழவேண்டும், அதை ஒரு பொருளாதார வர்த்தக வலையமாக மாற்றி சந்தையை இந்திய தரகு முதலாளிகளுக்கு திறந்துவிடவேண்டுமெ என்பதுதான் இந்தியாவின் இலக்கு. இந்த நோக்குதான் இந்திய இலங்கை உறவை வழிநடத்துகிறதேயன்றி அடிபட்டுச் சாகும் ஈழத் தமிழ் மக்களின் அவலமல்ல. ஒரு ஐம்பதாண்டு இந்திய இலங்கை உறவின் வரலாற்றைப் பார்க்கும்போது இந்த ராஜாங்க ரகசியம் புலப்படும்.

60களில் சிறிமாவோ – சாஸ்திரி ஒப்பந்தப்படி ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மலையக இந்திய தமிழர்கள் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர். இலங்கையின் தேயிலைத் தோட்டங்களை உழைத்தும் உயிரைக்கொடுத்தும் உருவாக்கிய தொழிலாளிகள் ஒரிரவில் அனாதைகளாக மாற்றப்பட்டு இந்தியாவிற்கு விரட்டப்பட்டனர். இந்தப் பிரச்சினையில் தமிழ்மக்களின் நலனுக்கு ஆதரவாக இந்தியா இருந்திருந்தால் இது நடந்திருக்குமா? பாகிஸ்தான், சீனப்போர்களைத் தொடர்ந்து அன்று இந்தியாவுக்கு இலங்கையின் ஆதரவு தேவைப்பட்டதால் இந்த அநீதியான கோரிக்கை ஏற்கப்பட்டது. இந்தியாவின் நலனுக்காக தமிழனின் வாழ்க்கை சூறையாடப்பட்டது. இதுதான் மலையக இந்தியத் தமிழ் மக்கள் அகதிகளாக்கப்பட்ட கதை!
70களில் இலங்கையில் இப்போது சிங்கள இனவெறிக் கட்சியாக சீரழிந்துபோன ஜனதா விமுக்தி பெரமுனா என்ற ஜே.வி.பி கட்சி ஆயுதம் தாங்கிய கிளர்ச்சி நடத்தியபோது அதை அடக்குவதற்கு இந்தியா படையும், ஆயுத உதவியும் செய்தது. ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இப்போது “இலங்கையின் இறையாண்மையில் தலையீடு செய்யமாட்டோம்” என்று காங்கிரசு கட்சி அறிவிக்கிறதே அப்போது மட்டும் இந்தத் தலையிடாமைக் கொள்கை எங்கே போயிற்று? இலங்கையை தொடர்ந்து தனது செல்வாக்கில் வைத்திருக்கவே இந்திய அரசு இந்த உதவியைச் செய்தது.
அதன் பிறகு பாகிஸ்தானைத் துண்டாடி வங்கதேசத்தை உருவாக்க இந்திய இராணுவம் தலையிட்டது. அன்றைய சூழ்நிலையில் இலங்கை அரசைச் சரிக்கட்டிக் கொள்வதற்காக கச்சத்தீவு இலஞ்சமாகக் கொடுக்கப்பட்டது. இதுவும் இந்திய ஆளும் வர்க்கங்களின் நலனுக்காக தமிழ்நாட்டு மக்களுக்கு செய்யப்பட்ட துரோகமாகும். பெரிய தீவை தனது செல்வாக்கில் வைக்க சிறிய தீவு தாரைவார்க்கப்பட்டது. இன்றைக்கு கச்சத்தீவருகே மீன் பிடிக்கும் தமிழகத்து மீனவர்கள் காக்கை குருவி போல இலங்கை கடற்படையினரால் கொல்லப்படுவதற்கு இதுதானே அச்சாரம்?
83 ஜூலைக் கலவரத்திற்குப் பிறகு ஈழத்தில் போராளிக் குழுக்கள் தலையெடுத்த போது அந்தக் குழுக்களுக்கு இராணுவப்பயிற்சி அளித்து, ஆயுத உதவியும் செய்து ஆதரித்தது இந்திரா அரசாங்கம். இதையும் ‘ஈழ விடுதலைக்கு இந்தியா செய்த உதவி’ என்று இன்றைக்கும் உளறுபவர்கள் இருக்கின்றனர். இந்திரா காந்தி உயிரோடு இருந்திருந்தால் ஈழம் விடுதலை அடைந்திருக்கும் என்று பேசித்திரியும் புத்திசாலிகளும் இருக்கிறார்கள்.
கச்சத்தீவைக் கொடுத்ததும், மலையகத் தமிழரின் குடியுரிமையைப் பறித்ததும் இலங்கைக்கு இந்தியா வழங்கிய சலுகைகள். 83 இல் போராளிகளை ஸ்பான்சர் செய்தது மிரட்டல்!
இரண்டு எதிரெதிதர் நிலைகளும் ஒரே நோக்கத்துக்காகத்தான். அன்று ரசிய ஆதரவு முகாமில் இந்தியா இருந்ததும், இலங்கை அமெரிக்க ஆதரவு முகாமிலும் இருந்தது. உலகு தழுவிய பனிப்போர் சூழலில்தான் இந்த ‘ஸ்பான்சர்ஷிப் முடிவு’ எடுக்கப்பட்டது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

இலங்கையை மிரட்டி தனது செல்வாக்கில் வைத்திருக்கும் பொருட்டே இந்திரா காந்தி போராளிக் குழுக்களுக்கு உதவி செய்தார். நிச்சயமாக இது ஈழத்தமிழரின் விடுதலைக்காக செய்யப்பட்டதில்லை. மேலும் இன்று ஈழ விடுதலைப் போராட்டத்தின் மாற்றமுடியாத வடுவாய் பதிந்திருக்கும் பல சீரழிவுகளுக்கும் இந்திராவின் இந்த ஸ்பான்சர் புரட்சி வழி ஏற்படுத்தியிருக்கிறது. குறுக்கு வழியில் விடுதலையை சாதிக்கலாம் என்ற பிரமையை ஈழத்தின் இளைஞர்களுக்குக் கற்றுத்தந்த இந்திய உளவுத் துறை, அதன் பொருட்டு பணம் சம்பாதிப்பதற்காக போதைப்பொருள் கடத்துவது, சக குழுக்களை அழிப்பது போன்ற சதிகளையும் சொல்லிக் கொடுத்தது. எம்.ஜி.ஆரின் ஆதரவு பெற்ற விடுதலைப் புலிகள் தமது இருப்பை மட்டும் உறுதி செய்வதற்கு மற்ற குழுக்களை ஈவிரக்கமின்றி துடைத்தழித்தனர். இப்படியாக தனது தெற்காசிய மேலாதிக்க நோக்கத்துக்காக இந்திய ஆளும் வர்க்கம் நடத்திய சூதாட்டத்தில், ஈழத்தின் எதிர்காலம் பகடைக்காய் ஆக்கப்பட்டது.
ஒரு நாட்டின் விடுதலையும், புரட்சியும் இன்னொரு நாட்டின் ஆளும் வர்க்கத்தின் தயவில் நடைபெற முடியாது என்பதற்கு ஈழம் எடுப்பான எடுத்துக்காட்டாகும். அன்றைக்கு ஈழத்தின் போராளிக்குழுக்களை இந்திய உளவுத் துறைகள்தான் வழிநடத்தின என்பதிலிருந்து அந்தக்குழுக்களின் அரசியல் தரத்தை புரிந்து கொள்ளமுடியும். முக்கியமாக சொந்தநாட்டின் மக்களை அரசியல் ரீதியாக அணிதிரட்டும் தேவையை, நிர்ப்பந்தத்தை இந்த குறுக்கு வழி ரத்து செய்து விட்டது.
இப்படி இந்தியாவால் மிரட்டப்பட்ட இலங்கை, அன்று ஈழப்பிரச்சினையில் இந்தியாவின் தலையீட்டை ஏற்றுக்கொண்டது. இதுவும் தொலைநோக்கில் இந்தியாவை ஈழ விடுதலைக்கு எதிராக நிறுத்துவதற்கு உதவும் என்று ஜெயவர்த்தனே-பிரேமதாசா கும்பல் புரிந்து கொண்டது. இந்திராவின் மரணத்திற்கு பிறகு இந்தி சினிமா ஹீரோவைப் போல வந்திறங்கிய ராஜீவ், ஈழத்தமிழர்கள் சார்பில் இலங்கையுடன் ஒப்பந்தம் போட்டார். அதை வைத்து இலங்கையை நிரந்தரமாக இந்தியாவின் செல்வாக்கில் வைத்துக் கொள்ளலாம் எனவும் இந்திய ஆளும் வர்க்கம் கணக்குப் போட்டது. இதே ஒப்பந்தத்தை வைத்து ஈழவிடுதலைக்கு எதிராக இந்தியாவை நிறுத்தும் வழியை யோசித்தார் ஜெயவர்த்தனே.

திம்பு பேச்சுவார்த்தையின் அடிப்படைகள் மறுக்கப்பட்டு ஒரு அடிமை ஒப்பந்தம் ராஜீவ் – ஜெயவர்த்தனே கும்பலால் ஈழமக்கள் மீது திணிக்கப்பட்டது. இந்திய முதலாளிகளின் நலனுக்காக அந்த ஒப்பந்தத்தை தீட்சித், இந்து ராம், பார்த்தசாரதி, பண்ருட்டி ராமச்சந்திரன் முதலானோர் அடங்கிய கூட்டம் வடிவமைத்தது. அதை அமல் படுத்தும் சாக்கில் தெற்காசிய நாட்டாமையின் இராணுவம் இலங்கையில் இறங்கியது. விடுதலைப் புலிகள் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தனர். இந்தியாவின் வற்புறுத்தலால் ஏற்றுக்கொண்டதாக அறிவித்தனர். ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற குழுக்கள் இந்த ஒப்பந்தத்தை முழுமனதோடு ஆதரித்து ஈழமக்களுக்கு துரோகமிழைத்தன. ஒப்பந்தத்தின் அமலாக்கத்தை இந்தியாவின் தலையில் கட்டியதன் மூலம் விடுதலைப்புலிகளுக்கு எதிராக இந்திய ராணுவத்தை திருப்புவதில் வெற்றிபெற்றது இலங்கை அரசு.
இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிரான விடுதலைப் புலிகளின் போர் துவங்கியது. சில நாட்களில் புலிகளை முடித்துவிடலாம் என்று அதிகரா வர்க்கத்தால் தவறாக வழிநடத்தப்பட்ட இந்திய ராணுவம் 1500 வீரர்களைப் பலி கொடுத்தது. போரில் வெல்ல முடியாத ஆத்திரத்தை அப்பாவி தமிழ் மக்களை கொல்வதிலும், பெண்களை பாலியல் வல்லுறவு செய்வதிலும் தீர்த்துக் கொண்டது. இறுதியில் மூக்கறுபட்ட இந்திய ராணுவம் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது இந்தியா திரும்பியது. அதன் பின் ராஜிவ் கொலை செய்யப்பட்டார். இதை வைத்து விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக அறிவித்து தடை செய்து தமிழ் நாட்டில் ஈழம் என்று சொன்னாலே கைது செய்யப்படும் நிலை உருவாக்கப்பட்டது.
ராஜிவ் கொலையின் காரணமாகத்தான் இந்திய அரசு ஈழத்திற்கு எதிரான நிலைக்குச் சென்று விட்டதாகப் பலரும் பேசுகின்றனர். இது கடைந்தெடுத்த பொய்யாகும். சோ, சுப்ரமணியசுவாமி, ஜெயலலிதா, இந்து ராம் போன்ற பார்ப்பனர்கள் கூட்டமும் ஊடகங்களும் ஈழப் போராட்டத்துக்கு எதிராக நஞ்சைக் கக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம், ராஜீவின் மரணத்தை மிகப்பெரிய தேசிய அவமானமாக சித்தரித்துக் குமுறுகிறார்கள்.

இலங்கை சென்ற ராஜீவ் காந்தியை ஒரு சிங்கள சிப்பாய் துப்பாக்கிக் கட்டையால் தாக்கினான். அதுவும் கூட கொலை முயற்சிதான். இதற்காக இந்தியா இலங்கை மீது படையெடுத்ததா என்ன? அல்லது அந்த சிப்பாயைத் தூக்கில் போட்டு விட்டார்களா? இரண்டுமில்லை. அந்த சிப்பாய் தண்டனைக்காலம் முடிந்து தற்போது வெளியே வந்துவிட்டான். ராஜீவ் கொலை செய்யப்படாவிட்டாலும் புலிகள் விசயத்தில் இந்தியா இதே நிலையைத்தான் எடுத்திருக்கும்.
“தமிழர்கள் படற துன்பத்தைப் பார்த்து, ஏதோ நல்லது பண்லாம்னு எங்க ராஜீவ் காந்தி முயற்சி பண்ணாரு. அவரையே கொன்னுட்டீங்க, இனிமே நீங்க எக்கேடு கெட்டுப் போங்கப்பா. உங்க சங்காத்தமே வேணாம்” என்று இந்தியா மனம் வெறுத்து ஒதுங்கி விட்டதைப் போல காங்கிரஸ்காரர்கள் பேசுவதைக் கேட்கையில் ரத்தம் கொதிக்கிறது. “ஏதோ நடந்தது நடந்து போச்சு, அதை மனசுல வச்சுக்காதீங்க, நீங்க தலையிட்டு பாத்து செஞ்சாதான் உண்டு” என்ற பாணியில் விடுதலைப் புலி ஆதரவாளர்கள் இந்திய அரசிடம் மன்றாடுவதைப் பார்க்கும் போதோ குமட்டுகிறது.
அப்படியெல்லாம் ‘மனம் நொந்து’ இந்தியா எந்தக் காலத்திலும் ஒதுங்கி விடவில்லை. எனவேதான் அன்று முதல் இன்று வரை இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி கொடுப்பதையும், ஆயுதங்கள் தருவதையும் இந்தியா தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறது. ஏனென்றால், இந்திய மேலாதிக்க நோக்கத்துக்கு அது அவசியம்.
காஷ்மீரிலும், வடகிழக்கிலும் தேசிய இனப் போராட்டங்களை ஒடுக்கி வரும் இந்திய அரசு, ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை ஆதரிக்குமா? தனது மேலாதிக்க நலனுக்காக தமிழக மீனவர்களை ஆண்டு தோறும் இலங்கைக் கடற்படைக்கு காவு கொடுத்து வரும் அரசு, ஈழத்தமிழனின் உயிரைக் காப்பாற்றுமா?
புலிகள் ஈழம் கேட்கிறார்கள். இந்திய ஆளும் வர்க்கமோ தெற்காசியாவைக் கேட்கிறது. இதில் எந்தக் கோரிக்கைக்கு செவி சாய்ப்பார் மன்மோகன் சிங்? சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் அவர் பேசியதைப் படித்துப் பாருங்கள். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், நேபாளம், பூடான் அனைத்தையும் சேர்த்து தெற்காசிய சுதந்திரப் பொருளாதார மண்டலமாக்கி, எல்லா நாடுகளுக்கும் சேர்த்து ஒரே நாணயத்தையும் கொண்டு வரவேண்டும் என்பதுதான் மன்மோகன் பேச்சின் மையப்பொருள்.
உலகமயமாக்கல் கொள்கையின் விளைவாகப் பணக்கொழுப்பு பெருகி ‘சந்தை … சந்தை’ என்று தினவெடுத்துத் திரியும் அம்பானிக்கும், டாடாவுக்கும், மித்தலுக்கும் தெற்காசியாவை வாங்கித் தருவதற்கு இந்திய அரசு வேலை செய்யுமா, தமிழர்களுக்கு ஈழம் வாங்கித் தருவதற்கு வேலை செய்யுமா?
“வங்காளிகளுக்கு பங்களாதேஷ் வாங்கிக் கொடுக்கவில்லையா?” என்கிறார் கருணாநிதி. “அண்ணனுக்கு ஐஸ்கிரீம் வாங்கிக்கொடுத்தியே, எனக்கு மட்டும் ஏன் சாக்லெட் வாங்கிக் கொடுக்க மாட்டேங்கிறே?” என்பது போன்ற சிறுபிள்ளைத்தனமான கேள்வி இது. அன்றும் வங்காளிகளுக்கு தனி நாடு பெற்றுத்தருவது இந்திய அரசின் நோக்கமாக இருக்கவில்லை. பாகிஸ்தானை உடைப்பதுதான் அன்று இந்தியாவின் நோக்கம். நெல்லுக்கு இரைத்த நீர் புல்லுக்கும் பொசிந்தது – வங்காள தேசம் பிறந்தது. புல்லுக்கு நீர் இரைப்பது இந்தியாவின் நோக்கமாக அன்றைக்கும் இல்லை. இன்றைக்கும் இல்லை.

“இலங்கைக்கு பாகிஸ்தானும், சீனாவும் ஆயுதம் கொடுக்கிறார்கள். அதைத் தடுத்து இலங்கையை நம் கண்ட்ரோலுக்குக் கொண்டு வரவேண்டுமானால், நாம் ஆயுதம் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை” என்பதுதான் இந்திய மேலாதிக்கத்தை நியாயப்படுத்த வெளியுறவுத் துறை அதிகாரிகள் முன்வைக்கும் வாதம். “அப்படி நீங்கள் கொடுத்தாலும் எசமானே, சிங்களவன் உங்களுக்கு விசுவாசமாக இருக்கமாட்டான். தமிழன்தான் விசுவாசமாக இருப்பான். பாகிஸ்தானும் சீனாவும் இலங்கையில் இறங்கிவிட்டால் இந்தியாவுக்குத்தான் ஆபத்து. எனவே இந்தியாவின் பாதுகாப்புக்காகவாவது தமிழ் ஈழத்தை ஆதரியுங்கள்” என்பது இங்குள்ள சில தமிழ் உணர்வாளர்களின் எதிர்வாதம். இது எதிர்வாதமல்ல, அதே வாதம்தான் என்பது கூட அவர்களுக்குப் புரியவில்லை. சிங்கள அடிமைத்தனத்துக்கு மாற்றாக இந்திய அடிமைத்தனத்தை சிபாரிசு செய்யும் இந்தக் கோரிக்கை எவ்வளவு ஆபாசமாக இருக்கிறது என்பது உரைக்கவுமில்லை.
“இதெல்லாம் ஒரு தந்திரம். நாங்கள் இந்திய அரசிடம் ஏமாந்து விடுவோமா என்ன” என்று இந்தப் புத்திசாலிகள் நம்முடைய காதில் கிசுகிசுக்கிறார்கள். இதே வசனத்தைத் தான் இந்திய உளவுத்துறையால் பயிற்றுவிக்கப்பட்ட போராளிகள் 1983 இல் பேசினார்கள். கேட்டோம். தந்திரத்தில் வென்றது யார் என்பதையும் அனுபவத்தில் கண்டு விட்டோம். மறுபடியும் கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிக்கும் அதே தந்திரம்!
நம்முடைய தமிழ் உணர்வாளர்களுக்குக் கம்யூனிசத்தைக் கட்டோடு பிடிக்காது என்பது தெரிந்த கதை. இருந்தாலும் தொடர்ந்து வங்காளதேசத்தை உதாரணம் காட்டும் அவர்கள் ஒரு மாற்றத்துக்கு நேபாளத்தைப் பார்க்கலாமே! ‘நேபாளத்தில் மன்னராட்சி தொடரவேண்டும்’ என்பதற்காக இந்தியா செய்யாத தகிடுதத்தங்கள் இல்லை. நேபாளத்துக்கு ஆயுத சப்ளை இந்தியாவும், அமெரிக்காவும்தான். மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்டத்தை நசுக்க ஆன உதவிகளையெல்லாம் இந்தியா செய்தது. பிறகு ‘மாவோயிஸ்டுகளுடன் சேராதீர்கள்’ என்று ஏழு கட்சிக் கூட்டணியை மிரட்டியது, தாஜா செய்தது. கூட்டணி அமைந்த பிறகு அதனை உடைக்க கொய்ராலாவைத் தூண்டி விட்டது. இலட்சக்கணக்கான மக்கள் அரண்மனையை முற்றுகையிட்டு முழங்கிக் கொண்டிருந்த அந்தத் தருணத்திலும், முன்னாள் காஷ்மீர் மன்னர் கரண்சிங்கை அனுப்பி, மன்னராட்சியைப் பாதுகாக்க பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தது. பிறகு தேர்தலில் மாவோயிஸ்டுகளைத் தோற்கடிக்க தெராய் பகுதியில் தனிநாடு கோரிக்கையைத் தூண்டி விட்டு அவர்ளுக்கு ஆயுதமும் கொடுத்தது.
ஜனநாயகத்துக்கு எதிராக மன்னராட்சியை ஆதரிப்பதற்கு இந்திய ஆளும் வர்க்கம் கூறிய விளக்கம் என்ன? “நாம் மன்னராட்சியை ஆதரிக்காவிட்டால், நேபாள மன்னர் சீனாவின் பக்கம் சாய்ந்துவிடுவார்”. இந்த விளக்கத்தின் சொற்களை மட்டும் மாற்றிப் பாருங்கள். “நாம் சிங்கள அரசை ஆதரிக்காவிட்டால் அவர்கள் பாகிஸ்தான் பக்கம் சாய்ந்து விடுவார்கள்”.
இலங்கைப் பிரச்சினையில் இந்திய அரசின் கொள்கையைத் தீர்மானிக்கும் மேலாதிக்கக் கண்ணோட்டம் இப்படித்தான் தனது விளக்கத்தைக் கூறி வந்திருக்கிறது. இந்த விளக்கத்தை கேள்விக்குள்ளாக்க வேண்டுமானால், உடம்பில் ஜனநாயக ரத்தம் ஓட வேண்டும். வெறும் தமிழ் ரத்தம் மட்டும் ஓடும் தமிழர்களால் மேலாதிக்கத்தை எதிர்க்க முடியாது.
“எங்களை ஆதரியுங்கள். மன்னரைக் காட்டிலும் இந்திய அரசுக்கு விசுவாசமாக நாங்கள் நடந்து கொள்கிறோம்” என்று நேபாள மாவோயிஸ்டுகள் தமது நாட்டின் விடுதலைக்காக இந்தியாவிடம் இறைஞ்சவில்லை. புலிகளைப் போல நவீன ஆயுதங்கள், விமானப்படை, புலம் பெயர்ந்த தமிழர்களின் நிதி உதவி, வானொலி, வானொளி .. எதுவும் அவர்களிடம் இல்லை.

“ஈழத் தமிழனின் விடுதலை பற்றி எங்களைத் தவிர வேறு யாரும் பேசக்கூடாது என்று மற்றவர்களின் குரல்வளையை நெறித்த ‘வீரமும்’ அவர்களிடம் இல்லை. மிகவும் முக்கியமாக, நேபாள விடுதலைக்குக் குரல் கொடுப்பதற்காக, வீடணர் படையொன்றை இந்தியாவில் அவர்கள் உருவாக்கி வைத்துக் கொள்ளவில்லை. ஒருவேளை, இத்தகைய ராஜ ‘தந்திரங்கள்’ தெரியாத காரணத்தினால்தான் அவர்கள் வெற்றி பெற்றிருப்பார்களோ!
தந்திரங்களால் எந்த நாடும் விடுதலை அடைய முடியாது. அப்படி அடைந்து விட்டதாகக் கூறிக்கொண்டாலும் அது விடுதலையாக இருக்காது. எனவே, ஈழத்தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்க எண்ணும் தமிழகத்து மக்கள் இந்திய மேலாதிக்கத்தை தயவு தாட்சண்யமின்றி அம்பலப்படுத்த வேண்டும். ஈழத் தமிழ் இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாக குரல் எழுப்ப வேண்டும். இது இரண்டையும் பேசாமல், எவ்வளவு பெரிய சங்கிலி அமைத்தாலும் அது ஈழத்தமிழ் மக்களின் அடிமைச் சங்கிலியை அறுக்க உதவாது.
குறிப்பு:
‘இலங்கையில் இந்தியாவின் நலன்கள்’ என்ற சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. இதன் பொருள் பலருக்குப் புரிவதில்லை. இலங்கையில் டாடாவுக்கு சொந்தமான தேயிலைத் தோட்டங்கள் எவ்வளவு, டி.வி.எஸ், மகிந்திரா, பஜாஜ் வாகனங்களின் சந்தை எவ்வளவு, எண்ணெய்க் குதங்கள் எத்தனை, இன்னும் தனியார் துறை-பொதுத்துறை நலன்கள் என்னென்ன என்ற விவரங்களை ஈழத்தமிழ் வாசகர்கள் அறியத் தந்தால் இந்தியத் தமிழர்களின் மயக்கத்தைத் தெளிவிக்க உதவியாக இருக்கும்.
இந்திய அமைதிப்படை ஈழத்தில் ஆற்றிய அமைதிப் பணிகள், இந்திய உளவுத் துறையால் சீர்குலைக்கப்பட்ட ஈழப் போராட்டத்தின் கதைகள் ஆகியவற்றையும் நினைவு படுத்தினால், பாரத மாதா பக்தர்கள் கொஞ்சம் புத்தி தெளியக்கூடும்.
“நேபாள மாவோயிஸ்டுகள் இப்போது இந்தியாவைத் தொழில் தொடங்க அழைக்கவில்லையா?”
என்பன போன்ற கேள்விகளுடன் எதிர்வாதத்துக்கு சில பதிவர்கள் தயாராக இருக்கக் கூடும். முதலில் கூரையேறி கோழி பிடிக்கும் கதையைப் பேசுவோம். ‘வானமேறி வைகுந்தம் போகும் வழி’ பற்றி அப்புறம் விவாதிக்கலாம்.
>

10/20/08

அமெரிக்க திவாலும் சில இந்தியத் தற்கொலைகளும் !

திவாலான நிதி நிறுவனங்கள், வங்கிகளுக்கு அமெரிக்க அரசு 35 இலட்சம் கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்து மீட்டிருப்பது நாம் அறிந்ததே. ஆனால் இந்த நிறுவனங்கள் நடத்திய சூதாட்டத்தில் வேலை, வருமானம், சேமிப்பு, வாழ்க்கை அத்தனையும் இழந்த மக்களுக்கு எந்த நிவாரணத்தையும் அமெரிக்க அரசு வழங்கவில்லை. இந்தப் பொருளாதாரச் சுனாமியில் சிக்குண்ட மக்களில் பலர் தற்கொலையின் மூலம் ‘விடுதலையை’த் தேடிக்கொள்கிறார்கள்.
அக்டோபர் நான்காம் தேதி லாஸ் ஏஞ்செல்சில் வாழ்ந்து வந்த கார்த்திக் ராஜாராம் பங்குச் சந்தையின் வீழ்ச்சியால் தனது சேமிப்பு முழுமையும் இழந்து, மனமொடிந்து மனைவி, மாமியார், மூன்று மகன்களைச் சுட்டுக்கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். அமெரிக்காவெங்கும் கடந்த சில மாதங்களில் இத்தகைய தற்கொலைகள் நிறைய நடந்திருக்கின்றன. பங்குச் சந்தையில் குறியீட்டு எண் ஏறினால் அதை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கும் ஊடகங்கள் எவையும் முதலாளிகள் நடத்தியிருக்கும் இந்தக் கொலைகள் குறித்து புலனாய்வு செய்வதில்லை.
அமெரிக்காவின் சன்னிதியில் திவாலான மக்கள், தங்களைப் பலியிட்டுக்கொள்ளும் இந்தப் பலிதான நிகழ்ச்சி அமெரிக்காவோடு மட்டும் முடிந்து விடாமல் கடல் கடந்து இந்தியாவையும் தொட்டிருக்கிறது. இந்த ஆண்டு மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் 21,000 புள்ளிகளைத் தொட்டவுடன் முதலாளித்துவ வெறிகொண்ட இந்தியா டுடே முதலான பத்திரிகைகளெல்லாம் அதை மாபெரும் திருவிழாவாகக் கொண்டாடின. குமுதம், விகடன் தொடங்கி எல்லாக் குப்பைகளும் எம்.பி.ஏ படித்த, படிக்காத மேதைகளை வைத்து பங்குச் சந்தையில் முதலீடு செய்வது குறித்து பாடம் நடத்தின.
பங்குகளின் விலை ஏறினாலும், இறங்கினாலும் இருவரில் ஒருவர் நட்டமடைய மற்றொருவர் இலாபமடைகிறார் என்ற ஆரம்ப வகுப்பு அடிப்படை அறிவு கூட இல்லாமல் நடுத்தர வர்க்கம் இந்தச் சூதாட்டத்தில் இறக்கிவிடப்பட்டது. எல்லோரும் இலாபமடைய வேண்டுமானால், அந்த இலாபத்தை அளித்து நட்டமடைவதற்கு ஆட்கள் வேண்டாமா? ஆனால் இலாபமடையமுடியும் என்று நம்பவைப்பதற்கு முதலாளிகளும், அன்னிய நிதி நிறுவனங்களும் பெரும் முதலீட்டை வைத்து சூதாடின. ஏறிய பங்குகளின் விலையைப் பார்த்து வியப்புடன் பலரும் பங்குகளை வாங்கிப் போட்டனர். எல்லாம் சில மாதங்கள்தான்.
சூதாடிகளின் தலைமையகமான அமெரிக்காவிலேயே இந்தப் பங்குச் சந்தைப் பலூன் வெடித்த பிறகு இந்தியாவில் மட்டும் வெடிக்காமல் இருக்குமா? இன்று வெடித்தது மட்டுமல்லாமல் புள்ளி தள்ளாடி ஏழாயிரத்தில் வந்து நிற்கிறது. இடைப்பட்ட பதினாலாயிரத்தில் ஏமாந்தவர்கள் எத்தனை பேர் என்று எந்தப் பத்திரிகையும் சர்வே நடத்தப் போவதில்லை. தப்பித் தவறி வந்த இரண்டு செய்திகளை இங்கே பதிவு செய்கிறோம். இந்த இரண்டினூடாக மற்றவர்களின் கதியைப் புரிந்து கொள்ளலாம்.
தூத்துக்குடியைச் சேர்ந்த முப்பது வயது அருள்ராஜ் பதினெட்டு மாதங்களுக்கு முன்புதான் ரேவதி என்ற பெண்ணைத் திருமணம் செய்திருக்கிறார். சென்னையில் தனக்கொரு வாழ்வைத் தேடிக்கொண்டவர் முதலில் கணினி மென்பொருள் துறையில் தொழில் செய்து அதில் நட்டமடைகிறார். அதிலிருந்து மீள பங்குச் சந்தையில் முதலீடு செய்யுமாறு நண்பர்கள் ஆலோசனை வழங்குகின்றனர். உடனே வங்கிகளில் கடன் பெற முயற்சி செய்கிறார். வங்கி நடைமுறைகளால் கடன் கிடைப்பது தாமதமாவதைப் பொறுக்க முடியாமல் கந்து வட்டி நபர்களிடம் பணம் பெறுகிறார். பெற்ற பணத்தை அவர் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் போது குறியீட்டு எண் 14,000த்தில் இருந்தது.
சில நாட்களுக்கு முன்பு அந்த எண் 10,000த்தைத் தொட்டபோது அருள்ராஜ் பலத்த நட்டமடைகிறார். கந்து வட்டிக்காரர்கள் அவரைப் பணம் கொடுக்குமாறு நெருக்குகின்றனர். வேறு வழியில்லாமல் 22.10.08 அன்று சென்னை எழும்பூரில் ஒரு விடுதியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து வாழ்வை முடித்துக் கொள்கிறார். மரணக்குறிப்பில் தான் பங்குச் சந்தையில் மீளவே முடியாத அளவுக்கு இழந்திருப்பதனால் இந்த விபரீதமான முடிவுக்கு வந்ததாக எழுதியிருக்கிறார்.
இதற்கு அடுத்த நாள் மும்பை இரானிவாடிப் பகுதியைச் சேர்ந்த 34 வயது பாரக் டானா, தனது எட்டு மாதக் கர்ப்பிணி மனைவி நேஹாவைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொள்கிறார். கர்ப்பிணி மனைவியையே கொல்லுமளவு விரக்தியும், வெறுப்பும் அடைந்திருப்பதாலோ என்னமோ அவர் மரணக் குறிப்பு எதையும் எழுதவில்லை. போலீசாரின் விசாரணையில் அவரது உறவினர்களும், நண்பர்களும் அவர் பங்குச் சந்தையில் பெரும் பணத்தை இழந்ததைத் தெரிவிக்கின்றனர்.
அருள்ராஜ் இறந்த அதே செவ்வாய்க் கிழமையன்று மும்பையில் 26 வயது ஜெயந்த சஹாவும் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொள்கிறார். காரணம் பங்குச் சந்தை இழப்புதான் என்றாலும் அது வெளிப்பட்ட விதம் யாரும் எதிர்பார்க்க முடியாத ஒன்று. அமெரிக்க நோயால் தாக்கப்பட்ட மும்பை பங்குச் சந்தையில் இந்த இளைஞரும் இழந்திருக்கிறார். அதை ஈடுகட்ட அன்று தனது டீமாட் கணக்கிலிருந்து 700 பங்குகளை வாங்குவதற்கு ஆன்லைனில் உத்தரவு கொடுக்கிறார். பதட்டத்தில் 700 என்பதை 7000 என்று ஒரு சைபரை அதிகம் போட்டு விடுகிறார். இதனால் பதினெட்டு இலட்ச ரூபாயை முதலீடு செய்ய வேண்டி வருகிறது. தனது தவறை அவர் பின்னர் உணர்ந்தாலும் காலம் கடந்து விட்ட படியால் வேறுவழியின்றி அறையைப் பூட்டிக் கொண்டு தூக்கு மாட்டிக் கொள்கிறார். வணிகவியலில் முதுகலை பட்டம் படித்திருக்கும் ஜெயந்த சஹாவுக்கு பங்குச் சந்தையில் முதலீடு செய்து வாழ்வதுதான் தொழில்.
வங்கக் கடற்கரையிலிருக்கும் தூத்துக்குடியிலும், அரபிக் கடலோரமிருக்கும் மும்பையிலும் பங்குச் சந்தையின் வீழ்ச்சிக்கு நான்கு உயிர்கள் பலியாயிருக்கின்றன. அட்லாண்டிக் கடல் தாண்டி வந்து தாக்கியிருக்கும் இந்த முதலாளித்துவ பயங்கரவாதத்தால் இன்னும் எத்தனை பேர் பலியாவார்கள்?

9/27/08

யார் இந்த யூதர்கள்? - ஒரு வரலாறு


“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் சுலோகமாக இருந்தது. பின்னர் ஆங்கிலேய, பிரெஞ்சு ஏகாதிபத்தியங்களால் உலகம் முழுவதும் பரப்பப்பட்டது. 19 ம் நூற்றாண்டில் ஐரோப்பிய கண்டத்தில் உருவான தேசியவாத எழுச்சியின் எதிர்வினையாகத் தான், சியோனிச அரசியல் அமைப்பு உருவானது. அவர்களது அரசியல் ஒரு மத நூலான பைபிளை அடிப்படையாக கொண்டிருந்தது. (யூத மதத்தவரின் புனித நூலான “தோரா”, கிறிஸ்தவர்களால் பைபிளில் “பழைய ஏற்பாடு” என்ற பெயரில் இணைக்கப்பட்டது.)

பைபிளில் வரும் சரித்திர சம்பவங்கள் போன்று தோற்றமளிக்கும் கதைகள், புராண-இதிகாச தரவுகளை விட சற்று தான் வேறுபடுகின்றது. சரித்திரம் என்பது, ஒரு சம்பவம் நடந்தாக விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப் பட வேண்டிய தேவை உள்ள ஒன்று. இல்லாவிட்டால் அவை வெறும் புராண-இதிகாச கதைகள் என்ற வரையறைக்குள் தான் வரும். சில உண்மைகள் இருக்கலாம், சம்பவங்கள் ஒன்றில் வேறு இடத்தில், வேறு பெயரில் நடந்திருக்கும், அல்லது மிகைப்படுதப்பட்டவையாக இருக்கலாம். இல்லாவிட்டால் அப்படியான ஒன்று நடந்திருக்கவே வாய்ப்பில்லாத, கற்பனைக்கதையாகவும் இருக்கலாம். சியோனிஸ்டுகளுக்கு அதைப்பற்றியெல்லாம் அக்கறை இல்லை. பைபிளின் படி தமது தாயகமான இஸ்ரேல், அப்போது பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த பாலஸ்தீனத்தில் இருப்பதாக நம்பினர். பைபிள் என்ற மத நூலை, தமது இயக்கத்திற்கான அரசியல் தத்துவார்த்த நூலாக மாற்றினார்.

பாலஸ்தீனத்தில் (அதாவது தமது முன்னோரின் தாயகத்தில்) சென்று குடியேறுவதற்காக உலகம் முழுவதும் யூத முதலாளிகளிடம் நிதி சேர்த்தனர். ஆரம்பத்தில் கிழக்கு ஐரோப்பிய யூதர்கள் தான், பாலஸ்தீனத்தில் சென்று குடியேற முன்வந்தனர். (ரஷ்ய பேரரசர் சார் ஆட்சிக்காலத்தில் நடந்த, யூதர்களுக்கெதிரான “பொக்ரொம்” என்ற இனப்படுகொலை ஒரு காரணம்.) சியோனிச அமைப்பு சேகரித்த நிதியைக் கொண்டு, பாலஸ்தீன நிலவுடமையாளரிடம் நிலங்களை வாங்கி குடியேறினர். புதிதாக உருவான யூத கிராமங்கள் கூட்டுறவு விவசாய அடிப்படையில் தமது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டன. இரண்டாம் உலக யுத்தம் நெருங்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில், பெருமளவு யூதர்கள், கப்பல் கப்பலாக பாலஸ்தீனா செல்வதை, பிரிட்டன் விரும்பவில்லை. அதனால் பல்வேறு தடைகள் ஏற்படுத்தப் பட்டன. அப்போது பாலஸ்தீனத்தில் இருந்த யூதர்கள் பயங்கரவாத குழுக்களை உருவாக்கி, பிரிட்டிஷ் இலக்குகளை தாக்கினர்.

ஜெர்மனியில் ஹிட்லரின் யூத இனப்படுகொலையும், இரண்டாம் உலகப்போரில் நேச நாடுகளின் வெற்றியும், உலக வரைபடத்தை மாற்றியது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் என்ற இரு தேசங்களை உருவாக்க பிரிட்டனும், ஐக்கிய நாடுகள் சபையும் ஒப்புக் கொண்டன. சியோனிஸ்டுகளின் இஸ்ரேலிய தாயகக் கனவு நிஜமானது. அவர்கள் எழுதி வைத்த அரசியல் யாப்பின் படி, உலகில் எந்த மூலையில் இருக்கும் யூதரும், இஸ்ரேலின் பிரசையாக விண்ணப்பிக்கலாம்.(பூர்வகுடிகளான பாலஸ்தீன அரேபியருக்கு அந்த உரிமை இல்லை). அதன் படி ஐரோப்பாவில் வசித்த யூதர்கள் மட்டுமல்ல, ஈராக், யேமன், மொரோக்கோ போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் வசித்த யூதர்களும் இஸ்ரேலில் வந்து குடியேறுமாறு ஊக்குவிக்கப் பட்டனர். பெரும் பணச் செலவில், அதற்கென பிரத்தியேகமாக அமர்த்தப் பட்ட வாடகை விமானங்கள், லட்சக்கணக்கான யூதர்களை இஸ்ரேல் கொண்டு வந்து சேர்த்தன. இந்தியா, கேரளாவில் இருந்தும் சில ஆயிரம் யூதர்கள் சென்று குடியேறினர்.

சியோனிஸ்டுகள் கண்ட கனவு நிதர்சனமானாலும், இஸ்ரேல் என்ற தாயகத்தை கட்டியெழுப்ப தேவையான மனிதவளம் இருந்த போதும், வேண்டிய நிதி வழங்க யூத பெரு முதலாளிகள் மற்றும் (குற்றவுணர்வு கொண்ட) ஜேர்மனி இருந்த போதும், ஒரேயொரு குறை இருந்தது. இஸ்ரேல் என்ற தாயகக் கோட்பாட்டின் நியாயவாத அடிப்படை என்ன? பைபிளை தவிர வேறு எந்த ஆதாரமும் இருக்கவில்லை. இன்றைய விஞ்ஞான உலகில் ஒரு மத நூலை ஆதாரமாக காட்டி யாரையும் நம்பவைக்க முடியாது. சரித்திரபூர்வ ஆதாரங்கள் தேவை.

பைபிளில் எழுதியிருப்பதெல்லாம் உண்மை என்று நம்பும் இஸ்ரேலிய ஆட்சியாளர்கள், அவற்றை நிரூபிக்கும் நோக்கில், சரித்திர ஆசிரியர்களையும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களையும், மொழியியல் அறிஞர்களையும் பணியில் அமர்த்தினர். இஸ்ரேல் உருவாகி அறுபது ஆண்டுகளாகியும், இந்த ஆராய்ச்சியளரால் பைபிளில் உள்ளபடி “புலம்பெயர்ந்து வாழும் யூத மக்களின் தாயகம் இஸ்ரேல்” என்னும் கருத்தை இன்று வரை நிரூபிக்க முடியவில்லை. மேலும் பைபிளில் எழுதப்பட்டுள்ள கதைகள் உண்மையில் நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. பிள்ளையார் பிடிக்கப் போய், அது குரங்காக மாறிய கதையாக, தாம் காலங்காலமாக கட்டி வளர்த்த நம்பிக்கை தகருவதை காணப் பொறுக்காத இஸ்ரேலிய ஆட்சியாளர்கள், இந்த ஆராய்ச்சி முடிவுகளை வெளிப்படுத்த தயக்கம் காட்டுகின்றனர். இன்று வரை உலகில் மிகச் சிலருக்கு மட்டுமே தெரிந்த, ஆராய்ச்சியின் பெறுபேறுகளை இங்கே தொகுத்து தருகிறேன்.

1980 ம் ஆண்டு இடம்பெற்ற நிலநடுக்கம் சியோனிச கட்டுக்கதைகளை அம்பலப்படுத்தியது. அதுவரை அறியாத பழங்கால இடிபாடுகளை வெளிப்படுத்தியது, அந்த நிலநடுக்கம். ஆனால் அந்த கண்டுபிடிப்புகள் எதுவும் யூத கதைகளை உண்மையென்று நிரூபிக்காததால், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஏமாற்றமடைந்தனர். அதிலிருந்து தான் இஸ்ரேலின், அல்லது யூத வரலாற்றை புதிய கண்ணோட்டத்துடன் பார்க்கும் போக்கு ஆரம்பமாகியது. பைபிளில் கூறப்பட்டுள்ள பெரும்பாலான கதைகள் உண்மையாக இருக்க முடியாது என்பது நிரூபிக்கப்பட்டது.

கிறிஸ்தவர்களுக்கு இயேசு எந்த அளவுக்கு முக்கியமோ, அது போல யூதர்களுக்கு மோசெஸ் ஒரு கேள்விக்கிடமற்ற தீர்க்கதரிசி. எகிப்தில் அடிமைகளாக இருந்த யூத குடிகளை மோசேஸ் விடுதலை செய்து, செங்கடலை கடந்து, கடவுளால் நிச்சயிக்கப்பட்ட நாட்டிற்கு(பாலஸ்தீனம்) கூட்டிச் சென்றதாக பைபிள் கூறுகின்றது. ஆனால் சரித்திர ஆசிரியர்கள் அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று நிரூபிக்கின்றனர். முதலாவதாக இப்போது உள்ளது போல அப்போதும், எகிப்திற்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையில் நிலத்தொடர்பு இருந்திருக்கும் போது, மொசெஸ் எதற்காக கஷ்டப்பட்டு கடல் கடக்க வேண்டும்? இரண்டாவதாக பைபிள் கூறும் காலகட்டத்தை வைத்துப் பார்த்தால் கூட, அன்று பாலஸ்தீனம் எகிப்து தேசத்தின் ஒரு பகுதியாக இருந்தது. மோசெஸ் வழிநடத்திய யூத குடிமக்கள் எகிப்தின் உள்ளே தான் இடப்பெயர்ச்சி செய்திருக்க வேண்டும். மூன்றாவதாக எகிப்தியர்கள் பல சரித்திர குறிப்புகளை ஆவணங்களாக விட்டுச் சென்றுள்ளனர். அவை எல்லாம் தற்போது மொழிபெயர்க்கப் பட்டு விட்டன. ஆனால் எந்த இடத்திலும் யூதர்களை அடிமைகளாக பிடித்து வைத்திருந்ததகவோ, அல்லது இஸ்ரேலிய அடிமைகள் கலகம் செய்ததாகவோ குறிப்பு காணப்படவில்லை.

டேவிட் மன்னன் தலைமையில் சிறு இராசதானி இருந்திருக்க வாய்ப்புண்டு என்ற போதிலும், பைபிள் கூறுவது போல இஸ்ரேலியர்களின் சாம்ராஜ்யத்தை வைத்திருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. ஆனால் அன்றைய பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல், யூதேயா என்ற இரு சிறிய அரசுகள் இருந்துள்ளன. இவை பிற்காலத்தில் (ஈராக்கில்/ஈரானில் இருந்து வந்த) பாபிலோனியர்களால் கைப்பற்றப்பட்டாலும், பைபிள் கூறுவதைப் போல அனைத்து இஸ்ரேலிய யூதர்களையும் பாபிலோனிற்கு கொண்டு சென்றதாக ஆதாரம் இல்லை. இருப்பினும் அரச அல்லது பிரபுக் குடும்பங்களை சேர்ந்தோரை கைது செய்து பாபிலோனில் சிறை வைத்திருக்கிறார்கள். யூதர்கள் அங்கே தான் ஒரு கடவுள் கொள்கையை அறிந்து கொண்டார்கள்.( யூதர்கள் மத்தியிலும் பல கடவுள் வழிபாடு முறை நிலவியதை பைபிளே கூறுகின்றது) அன்றைய காலகட்டத்தில் இன்றைய ஈரானிலும், ஈராக்கிலும் சராதூசரின் மதம் பரவியிருந்தது. அவர்கள் “மாஸ்டா” என்ற ஒரேயொரு கடவுளை வழிபட்டனர். இதிலிருந்து தான் யூத மதமும், யாஹ்வே அல்லது எல்(ஒரு காலத்தில் சிரியர்கள் வழிபட்ட கடவுளின் பெயர்) என்ற ஒரே கடவுளை வரித்துக் கொண்டது. பிற்காலத்தில் யூதர்களிடம் இருந்து கற்றுக்கொண்ட, “ஒரு கடவுள் கோட்பாட்டை” கிறிஸ்தவர்களின் மீட்பர் இயேசு, மற்றும் முஸ்லிம்களின் இறைதூதர் முஹம்மது ஆகியோர் பின்பற்றினர்.

கி.பி. 70 ம் ஆண்டுக்கு முன்னர் யூதர்களின் தாயக பூமி, ரோமர்களின் சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்தது, . ஜெருசலேமில் யூதர்களின் மிகப் பெரிய கோவில் சேதமடைந்த பின்னர், முழு யூத மக்களையும் ரோமர்கள் நாடுகடத்தியதாக இதுவரை நம்பப்பட்டு வருகின்றது. அதனால் தான் யூதர்கள் மத்திய ஆசியா, ஐரோப்பா எங்கும் புகலிடம் தேடியதாக, இன்றுவரை அவர்கள் வேற்று இனத்துடன் கலக்காமல் தனித்துவம் பேணியதாக, யூதர்கள் மட்டுமல்ல பிறரும் நம்புகின்றனர். ஆனால் ரோமர்கள் ஒரு போதும் எந்த ஒரு தேச மக்களையும் ஒட்டு மொத்தமாக நாடுகடத்தியதாக வரலாறு இல்லை. ரோமர்கள் பல இனத்தவரை அடிமைகளாக்கியிருக்கிறார்கள். அப்போது கூட குறிப்பிட்ட பிரதேசத்தை சேர்ந்த சிறுதொகையினர் அடிமைகளாக ரோமாபுரி செல்ல, பெரும்பான்மை மக்கள் அங்கேயே வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

இதிலிருந்து ஒன்று தெளிவாகின்றது. யூத மக்கள் எங்கேயும் புலம்பெயராமல் அங்கேயே வாழ்ந்து வந்திருக்கின்றனர். ஆகவே இன்றுள்ள பாலஸ்தீன அரேபியர்கள் தான் உண்மையான யூதர்கள் என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவு. அவர்கள் பிற்காலத்தில் இஸ்லாமியராகவும், கிறிஸ்தவர்களாகவும் மாறியிருக்கலாம். முதலாவது இஸ்ரேலிய பிரதமர் பென் கூரியன் உட்பட பல சியோனிச தலைவர்களுக்கு இந்த உண்மை தெரிந்தே இருந்தது. ஆனால் அதனை வெளியே சொன்னால், அவர்களது சியோனிச அரசியல் அத்திவாரமே அப்போது ஆட்டம் கண்டிருக்கும். இன்று இஸ்ரேலிய ஆராய்ச்சியாளரின் முடிவுகள் வந்த பின்னர் கூட பலர் பகிரங்கமாக இதைப்பற்றி பேச மறுக்கின்றனர். “யூத எதிர்ப்பாளர்” என்ற முத்திரை குத்தப் பட்டுவிடும் என்ற அச்சமே காரணம். மேற்குலகில் யூத எதிர்ப்பாளர் என்று சொல்வது, இனவெறியர் என்று சொல்வதற்கு சமமானது.

யூத இனத்தவர்கள் உலகம் முழுவதும் புலம் பெயர்ந்து செல்லவில்லை என்றால், “யார் இந்த யூதர்கள்” என்ற கேள்வி எழுகிறதல்லவா? “யூத இனம்” என்ற தவறான கோணத்தில் இருந்து பார்ப்பதால் இந்த குழப்பம் ஏற்படுகின்றது. யூதர்கள் என்பது ஒரு மதத்தை சேர்ந்தவர்களை குறிக்கும் சொல்லாகும். கிறிஸ்தவ மதம் தான் பிறந்த மண்ணை விட்டு, வெளி உலகத்தில் பரவியது போன்று, யூத மதமும் பரவியது. முதலில் யூதேயா அரசாட்சியின் கீழ் வாழ்ந்தவர்களை மட்டுமல்ல, அயலில் இருந்த மக்களையும் கட்டாய யூத மத மாற்றத்திற்கு உள்ளாக்கினர். தொடர்ந்து மதப் பிரசாரகர்கள் யூத மதத்தை மத்திய கிழக்கு எங்கும் பரப்பினர். அரேபியா (யேமன்), வட ஆப்பிரிக்கா( மொரோக்கோ), மத்திய ஆசியா (குர்திஸ்தான்) போன்ற இடங்களில் எல்லாம், அண்மைக்காலம் வரை யூதர்கள் லட்சக்கணக்கில் வாழ்ந்து வந்தனர். குர்திஸ்தானிலும், வட அபிரிக்காவிலும், (அல்ஜீரியா-மொரோக்கோ) குறிப்பிட்ட காலம் யூத இராசதானிகள் உருவாகின. பிற்காலத்தில் வட ஆப்பிரிக்கா மீது படையெடுத்து கைப்பற்றிய அரேபிய சரித்திரவியாளர்கள் இவற்றை எழுதி வைத்துள்ளனர். முதலில் அரேபிய-இஸ்லாமிய படையெடுப்பை எதிர்த்த யூதர்கள், பிற்காலத்தில் அரேபிய படைகளுடன் இணைந்து, ஸ்பெயினை கைப்பற்றி அங்கேயும் குடியேறி இருந்தனர்.

நீண்ட காலமாக, யூதர்கள் என்பது ஒரு இனம் என்ற கருத்தியலை, மரபணு சோதனை மூலம் நிரூபிப்பதற்கு முயற்சி நடந்தது. சில ஆராய்ச்சி முடிவுகள், யூதர்கள் தனியான மரபணு கொண்டிருப்பதாக தெரிவித்த போதும், அவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குரியது. பொதுவான பெறுபேறுகள், யூதர்களும் அந்தந்த நாடுகளில் வாழும் பிற மக்களும், ஒரே விதமான மரபணு கொண்டுள்ளதை எடுத்துக் காட்டுகின்றன. இதனை பரிசோதனைசாலையில் விஞ்ஞானிகள் சோதித்து தான் அறிய வேண்டிய அவசியமில்லை. யூதர்களிடையே வெளிப்படையாக தெரியும் வேறுபாடுகள் நிறைய உள்ளன. ஐரோப்பிய யூதர்கள் வெள்ளைநிற ஐரோப்பியர் போலவும், எத்தியோப்பிய யூதர்கள் கறுப்புநிற ஆப்பிரிக்கர் போலவும் வெளித்தோற்றத்தில் காணப்படுவதை வைத்தே கூறிவிடலாம், யூதர்கள் ஒரே இனமாக இருக்க சாத்தியமே இல்லை என்று. யூத இன மையவாதத்தை ஆதரிப்பவர்கள் இந்த எளிய உண்மையை காண மறுக்கின்றனர். இன்றைய நவீன இஸ்ரேலில் கூட ரஷ்ய யூதர்கள், கிழக்கு ஐரோப்பிய யூதர்கள், மேற்கு ஐரோப்பிய யூதர்கள், அரபு யூதர்கள், எத்தியோப்பிய யூதர்கள், என்று பலவகை சமூகங்கள் தனிதனி உலகங்களாக வாழ்வதேன்? இந்த சமூகம் ஒவ்வொன்றுக்கும் ஹீப்ரூ மொழியில் விசேட பட்டப் பெயர்கள் உள்ளன.

இன்றைய இஸ்ரேலிய தேசத்தின் அரசியல், இராணுவ, பொருளாதார ஆதிக்கம் ஐரோப்பாவில் இருந்து வந்து குடியேறிய யூதர்களின் கைகளில் உள்ளது. இவர்களது நதிமூலம் பற்றிய சுவாரஸ்யமான ஆய்வுகள் நடந்துள்ளன. அந்த தேடலில் “கஸார்” இராசதானி பற்றி தெரியவந்தது. அதுவே ஐரோப்பிய யூதர்களின் மூலமாக நம்பப்படுகின்றது. முன்னொரு காலத்தில் கஸ்பியன் கடலுக்கும், கருங்கடலுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தையும், தெற்கு ரஷ்யாவையும், கிழக்கு உக்ரைனையும் சேர்த்து ஒரு மாபெரும் யூத இராஜ்யம் பத்தாம் நூற்றாண்டு வரை நிலைத்து நின்றது. கஸார் மக்கள் மத்திய ஆசியாவை சேர்ந்த துருக்கி மொழி பேசும் இனத்தை சேர்ந்தவர்கள். இருப்பினும் அவர்கள் ஆட்சியின் கீழ் பிற இனத்தவர்களும் வாழ்ந்தனர். மேற்கே கிறிஸ்தவ மதமும், கிழக்கே இஸ்லாமிய மதமும் பரவிக் கொண்டிருந்த காலம் அது. இரண்டுக்குமிடையே தமது தனித்தன்மையை காப்பாற்றுவதற்காக, கஸார் ஆளும் வர்க்கம் யூத மதத்திற்கு மாறியது. இந்த மத மாற்றம் அரசியல் காரணத்திற்காக ஏற்பட்ட ஒன்று. இன்று நடுநிலை பேண விரும்பும் சுவிட்சர்லந்துடன் ஒப்பிடத்தக்கது.


கஸார் இராசதானி அரபு-இஸ்லாமிய படையெடுப்புகளை வெற்றிகரமாக தடுத்து நின்ற போதும், அதனது வீழ்ச்சி வடக்கே இருந்து வந்த ரஷ்யர்களால் ஏற்பட்டது. அதற்குப் பிறகு கஸார் மக்கள் அந்தப் பிரதேசத்தில் இருக்கும் பிற இனத்தவர்களுடன் கலந்து விட்டனர். பெரும்பாலானோர் யூத மதத்தை கைவிட்டு, இஸ்லாமியராகி விட்டனர். இருப்பினும் குறிப்பிடத்தக்க கஸார் யூதர்கள் போலந்திற்கும், பிற ஐரோப்பிய நாடுகளுக்கும் புலம்பெயர்ந்ததாக நம்பப்படுகின்றது. புலம்பெயர்ந்த யூதர்கள் “யிட்டிஷ்” கலாச்சாரத்தை உருவாக்கினர். யிட்டிஷ் என்பது, ஹீப்ரூ, ஜெர்மன், ஸ்லோவாக்கிய சொற்கள் கலந்த மொழியைக் குறிக்கும். கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்கள் இந்த மொழியை பேசினர். நவீன இஸ்ரேல் உருவாகி, ஹீப்ரூ உத்தியோகபூர்வ மொழியாகிய பின்னர், இப்போது அந்த மொழி மறைந்து வருகின்றது.

இஸ்ரேல் என்ற தேசம் உருவான போது, அங்கே யூதர்களின் புராதன மொழியான ஹீபுரூ பேசுவோர் யாரும் இருக்கவில்லை. எல்லோரும் அதற்கு முன்னர் வாழ்ந்த நாட்டு மொழிகளையே பேசினர், இன்றும் கூட வயோதிபர்கள் ஜெர்மன்,பிரெஞ்சு, ஆங்கிலம், அரபு என்று பல்வேறு மொழிகளை வீடுகளில் பேசி வருகின்றனர். இளம் சந்ததி மட்டுமே ஹீப்ரூ மொழியை தமது தாய் மொழியாக்கியது. உண்மையில் பல்வேறு கலாச்சாரப் பின்னணியை கொண்ட யூதர்களை, ஒரே இனமாக இஸ்ரேல் என்ற தேசத்தினுள் ஒற்றுமையாக வைத்திருப்பது கடினமான விடயம். (”எங்கள் யூத சமூகத்திற்குள் ஒற்றுமையில்லை.” என்ற சுயபச்சாதாபம் இஸ்ரேலியர் மத்தியில் நிலவுகின்றது.) அதற்காக தான் இஸ்ரேலிய அரசு, பைபிள் கதைகளை நிதர்சனமாக்க இராணுவ பலம் கொண்டு முயற்சித்து வருகின்றது. தமது ஆக்கிரமிப்பை, “கடவுளால் முன்மொழியப்பட்டது” என்பதால் நியாயமானது, என்று வாதிடுகின்றனர். அதனால் தான், யூத குடிகளின் முதலாவது ஒப்பற்ற பெருந்தலைவனான, டேவிட் மன்னன் தலைநகராக வைத்திருந்த ஜெருசலேமை(அது இப்போது இருக்கும் நகரை விட அளவில் சிறியதாக இருந்தது) நவீன இஸ்ரேலின் தலைநகராக்குவதன் மூலம், தமது சரித்திர ஆதாரத்தை எதிர்காலத்திலேனும் நிலைநாட்ட முயல்கின்றனர்.


உசாத்துணை தொடுப்புகள் :
Jew from Wikipedia
A Resource for Turkic and Jewish History in Russia and Ukraine
Israel deliberately forgets its history
________________________________________

முன்னைய பதிவுகள் :
இஸ்ரேல் : பயங்கரவாதிகள் உருவாக்கிய தேசம்