7/28/11

வலதுசாரி- தேசியவெறிக்கு எதிரான போர்


22 ஜூலை, நோர்வேயின் வரலாற்றில் ஒரு கறுப்பு நாளாக பிரகடனப் படுத்தப் படலாம். உலகச் செய்திகளில் அரிதாக இடம்பிடிக்கும் "அமைதிப்பூங்காவில்" குண்டு வெடித்தது. அதைத் தொடர்ந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் என்பது பதின்ம வயது நோர்வீஜிய இளைஞர்கள் கொல்லப்பட்டனர். படுகொலைக்கு காரணமான அண்டெர்ஸ் பிறேவிக் (Anders Breivik) என்ற வெள்ளையின நோர்வீஜிய வாலிபன் கைது செய்யப்பட்டான். அன்று நடந்த பயங்கரவாத செயலை விட, கொலைகாரனின் கொள்கையை விளக்கும் அறிக்கை உலகம் முழுவதும் சலசலப்பை தோற்றுவித்தது. மேற்குலகில் வளர்ந்து வரும் வலதுசாரித் தீவிரவாதிகளை கவனத்தில் எடுக்காததால் வந்த வினைப்பயன் இது. நோர்வீஜிய பயங்கரவாதியின் அறிக்கையில் இருந்து பின்வரும் உண்மைகள் தெரிய வந்துள்ளன. ஐரோப்பிய நாடுகளில் தேசியவாதிகள் தமது போரை ஆரம்பித்துள்ளனர். வெள்ளையரல்லாத குடிவரவாளர்கள், முஸ்லிம்கள், கம்யூனிஸ்டுகள், இடதுசாரிக் கொள்கை கொண்டோர், இவர்கள் எல்லோரும் எதிரிகளாக பிரகடனப் படுத்தப் பட்டுள்ளனர்.வெள்ளையின இனவெறி கொண்ட அண்டெர்ஸ் பிறேவிக் நினைத்திருந்தால், நோர்வேயில் வாழும் வெளிநாட்டவர்களை குறி வைத்து தாக்கி இருக்கலாம். ஆனால், அவன் தனது சொந்த இன மக்களைத் தான் கொன்று குவித்துள்ளான். இது குடிவரவாளர்களுக்கு வழங்கப் பட்ட எச்சரிக்கை. "உங்களை இந்த நாட்டிற்குள் தங்க அனுமதித்தவர்கள் எமது இனத்தை சேர்ந்தவர் ஆயினும் கொலை செய்யத் தயங்க மாட்டோம். ஆகவே உங்களது நிலைமையை சற்று யோசித்துப் பாருங்கள்." நினைக்கவே குலைநடுங்கும் எச்சரிக்கை, எதிர்கால ஐரோப்பாவில் வெளிநாட்டு குடிவரவாளர்கள் சந்திக்கவிருக்கும் மிகப்பெரிய சவால்.

உலகம் முழுவதும் சமாதானத்திற்கு நோபல் பரிசு கொடுத்த நாடு இன்று தலை குனிந்து நிற்கின்றது. எம்மவர் மத்தியில் மட்டுமல்ல, பொதுவாக உலகம் முழுவதும் நோர்வேக்கு நல்ல பெயர் உண்டு. "அமைதியை விரும்பும் மக்களைக் கொண்ட நாட்டின்" பிரஜைகள் மாறி வருகின்றனர். அவர்கள் ஓரிரவில் மாறவில்லை. மக்கட்தொகையால் சிறிய நாடான நோர்வேயில் (மொத்த சனத்தொகை ஐந்து மில்லியனும் இல்லை), வெளிநாட்டு குடிவரவாளர்கள் மீதான வெறுப்பு அதிகரித்து வருகின்றது. வெளிநாட்டவர் மீது துவேஷத்தை கக்கும் வலதுசாரிக் கட்சியான Frp (Fremskrittspartiet) யின் ஆதரவாளர்கள் அதிகரித்து வருகின்றனர். என்பது உயிர்களைப் பலி கொண்ட கொலைகாரன் அண்டெர்ஸ் கூட அந்தக் கட்சியின் உறுப்பினராக இருந்துள்ளான். இன்று அந்தக் கட்சி படுகொலைகளை கண்டித்து, தனக்கு சம்பந்தம் இல்லாதது போலக் காட்டிக் கொள்கின்றது. இருப்பினும், உலகம் முழுவதும் பிரபலமான பயங்கரவாதியான அண்டெர்ஸ் பிறேவிக்கை ஆதர்ச நாயகனாகப் பார்க்கும் அடிமட்ட உறுப்பினர்கள் இல்லாமலில்லை. நெதர்லாந்தின் "இஸ்லாமிய விரோத" அரசியல்வாதி கெர்ட் வில்டர்ஸ் (Gert Wilders), அண்டெர்ஸ் இனால் போற்றப்பட்டுள்ளார். ஆனால் வில்டர்ஸ் "ஒரு மனநோயாளியின் செயல்" என்று இணையத்தில் மட்டும் (டிவிட்டரில்) பதில் சொல்கிறார். நோர்வீஜிய கொலைகாரன் மட்டுமா ஒரேயொரு வில்டர்ஸ் இரசிகன்? ஒஸ்லோ படுகொலைகளுக்கு சில மாதங்களுக்கு முன்னர் தான், நெதர்லாந்தில் ஒரு ஆயுததாரி பொதுமக்களை சுட்டுக் கொன்றான். அவன் கூட வில்டர்சின் இஸ்லாமிய விரோத கருத்துகளால் கவரப்பட்ட "மனநோயாளி" தான். (கொலையாளியின் அரசியல் கருத்துகளை ஊடகங்கள் இருட்டடிப்பு செய்தன. ஏனென்றால் "இடதுசாரி" முத்திரை குத்தி விடுவார்கள் என்ற அச்சம்!)

சமாதானத் தலைநகரமான ஒஸ்லோவில் என்பது பேரைக் கொன்று குவித்த அன்டெர்ஸ் பிறேவிக் ஒரு மனநோயாளியாக இருக்க சாத்தியமில்லை. இதனை பல மனநல மருத்துவர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். 1500 பக்கம் கொண்ட அறிக்கையை தயாரித்த புத்திஜீவி எவ்வாறு மனநலம் குன்றியவராக இருக்க முடியும்? அன்டெர்ஸ் பிறேவிக் கொள்கை ரீதியாகவும், தாக்குதலுக்கான இலக்கை தேர்வு செய்வதிலும் பற்றுறுதியுடன் நடந்துள்ளான். அவனை மனநோயாளியாக சித்தரிப்பதன் மூலம், எதிர்கால அபாயத்தை மூடி மறைக்கப் பார்க்கின்றனர். பத்து வருடங்களுக்கு முன்னர், பின்லாடனை மனநோயாளியாக சித்தரித்திருந்தால், பொது மக்களும் "அல்கைதா பயங்கரவாதம்" குறித்து விழிப்புடன் இருந்திருக்க மாட்டார்கள். ஆனால், "அல்கைதா வகையறாக்கள் நம்மினத்தவர்கள் அல்ல. எங்கோ மத்திய ஆசியாவில் வாழும் காட்டுமிராண்டி சமூகத்தை சேர்ந்தவர்கள். நம்மவர்கள் நாகரீகத்தில் சிறந்தவர்கள். அதனால் தான் எம்மை வெறுக்கிறார்கள்...." இவ்வாறு தான் மேற்குலக அரசுகள் தமது மக்களுக்கு பிரச்சாரம் செய்து வந்தன. நாகரீகமடைந்த வெள்ளையினத்தவர்கள் மத்தியிலும் ஒரு காட்டுமிராண்டிக் கூட்டம் இருக்கின்றது என்ற உண்மையை எப்படி ஒத்துக் கொள்ள முடியும்?

மேற்குலகம் எவ்வாறு உலகிலேயே நாகரீகமடைந்த சமூகமாக கருதப்படுகின்றது? நிச்சயமாக அவர்களது ஜனநாயகமோ, மனித உரிமைகளோ, அல்லது மனிதாபிமான கொள்கையோ காரணமல்ல. இனப்படுகொலை, பயங்கரவாதம், கொள்ளை, நில ஆக்கிரமிப்பு, இவை போன்ற மனித குலத்திற்கு விரோதமான செயல்களை செய்து தான் "நாகரீகமடைந்தார்கள்". நோர்வே உட்பட ஸ்கண்டிநேவிய நாடுகளும் 20 நூற்றாண்டில் தான் நிரந்தர அமைதியைக் கண்டன. அது வரையும் போரினால் அல்லல் பட்டுக் கொண்டிருந்த தேசங்கள் அவை. நோர்வே, சுவீடன், டென்மார்க் ஆகிய நாடுகளுக்கு பொதுவான கலாச்சாரம் உண்டு. பொதுவான மொழி உண்டு. (மூன்று மொழிகளும் சிறிதளவே வேறுபடுகின்றன.) சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் தான், மத்திய கால நிலப்பிரபுத்துவ ஆட்சிமுறை நிலைநாட்டப்பட்டது. அந்தக் காலத்தில் நிலப்பிரபுத்துவ சமுதாயம் முற்போக்கானதாக கருதப்பட்டது. கிறிஸ்தவ மதத்தின் வருகையும், மன்னர்கள் புதிய மதத்தை தழுவியதும், ஸ்கண்டிநேவிய மக்களை நாகரீகமடைய வைத்தது. அதற்கு முன்னர், "வைகிங் கொள்ளையர்களாக" பிற ஐரோப்பிய நாடுகள் மீது படையெடுத்து நாசம் விளைவிப்பது, "காட்டுமிராண்டி சமூகத்தினரின்" தொழிலாக இருந்தது. ஸ்கண்டிநேவிய மக்களின் கிறிஸ்தவ மதத்தின் மீதான பற்றுறுதிக்கு காரணம், அவர்களின் கடந்த கால வரலாற்றில் தேட வேண்டும். இன்றும் கூட இந்நாடுகளின் தேசியக் கொடிகளில் சிலுவை பொறிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. முழு ஐரோப்பியக் கண்டத்திலும் பரவிய கிறிஸ்தவ மதம், மிகத் தாமதமாகத் தான் ஸ்கண்டிநேவிய நாடுகளை வந்தடைந்தது. எப்போதும் சமீப காலத்தில் மதம் மாறியவர்கள் தான், அதிகளவு மதப்பற்று உள்ளவர்களாக காட்டிக் கொள்வார்கள்.

நோர்வேயில் பயங்கரவாத கொலைகளை செய்த அன்டெர்ஸ் பிறேவிக் கூட ஒரு கிறிஸ்தவ மத அடிப்படைவாதி தான். அதனை அவனது அறிக்கையிலேயே குறிப்பிட்டுள்ளான். மத்திய காலத்தில் வத்திகானின் கத்தோலிக்க திருச்சபை தலைமையில் நடந்த சிலுவைப்போர் மீண்டும் வர வேண்டும் என்று விரும்புகின்றான். அதற்கான திட்டத்தை செயற்படுத்துவதற்காக, ஒரு இரகசிய குழுவை அமைத்துள்ளார்கள். அந்தக் குழுவின் நோர்வேக் கிளையின் செயலாகவே நடந்து முடிந்த பயங்கரவாத வன்முறை பார்க்கப்பட வேண்டும். ஐரோப்பாவில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றுவது அவர்களின் குறிக்கோளாக உள்ளது. "முஸ்லிம்கள்" என்பது வெள்ளையரல்லாத வெளிநாட்டு குடிவரவாளர்களையும் குறிக்கும். ஆசிய,ஆபிரிக்க நாடுகளை சேர்ந்தோர் கிறிஸ்தவர்கள், இந்துக்கள், பௌத்தர்களாக இருந்தாலும் அவர்கள் பார்வையில் முஸ்லிம்கள் தான். இறுதியில் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றும் வெள்ளயினத்தவர்களை மட்டுமே கொண்ட ஐரோப்பாவை உருவாக்குவது தான் அவர்களது இலட்சியம். அவர்களது இலட்சியத்திற்கு தடையாகவிருப்பது, "கடவுள் நம்பிக்கையற்ற கம்யூனிஸ்டுகள்", மற்றும் பல இடதுசாரி சிந்தனை கொண்டோர். அதனால் தான், நோர்வேயை ஆளும் சமூக ஜனநாயக கட்சியான தொழிற்கட்சியின் இளைஞர் முகாமிற்கு சென்றோர் படுகொலை செய்யப்படனர்.

இன்று எழுந்துள்ள வலதுசாரித் தீவிரவாதம், நவ-நாஜிகளிடம் இருந்து வேறுபடுகின்றது. மிகச் சிறிய எண்ணிக்கையில் உள்ள நவ- நாஜிகள் ஹிட்லர் காலத்து இனவெறிக் கொள்கைகளை இன்றும் பின்பற்றுகின்றனர். குறிப்பாக ஹிட்லரின் "யூத வெறுப்பு", "பாசிசக் கட்டுப்பாடுகள்", "தலைமை மீதான விசுவாசம்" போன்ற கொள்கைகளை மாற்றமேதுமின்றி பின்பற்றும் "பழமைவாத பாசிஸ்டுகள்". ஆனால் நமது காலத்தில் தோன்றியுள்ள நவீன பாஸிசம் ஜனநாயக முகமூடியை பயன்படுத்திக் கொள்கின்றது. அவர்கள் தமது இனவெறிக் கருத்துகளை, கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் நியாயப் படுத்துகின்றனர். "வெளிநாட்டுக் கிரிமினல்கள்", "மசூதி காட்டும் முஸ்லிம்கள்", இவ்வாறு ஜனரஞ்சகமான விடயங்களை வைத்து அரசியலை கொண்டு செல்கின்றனர். அதிர்ஷ்டவசமாக அமெரிக்காவின் அல்கைதா பயங்கரவாதத்திற்கு எதிரான போர், அவர்களுக்கு பெருமளவு உதவியுள்ளது. அமெரிக்காவை போன்றே, நவீன பாசிஸ்டுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றனர். அவர்களைப் பொறுத்தவரையில், "இஸ்ரேல் ஐரோப்பா சார்பில் யுத்தத்தில் ஈடுபட்டுள்ளது." அதாவது "முஸ்லிம் படையெடுப்பை தடுக்கும் எல்லைப்புறக் காவல் அரண் போன்று" இஸ்ரேல் செயற்படுகின்றது. தமிழர்கள் மத்தியில் உள்ள "இஸ்ரேலிய ஆதரவாளர்களும்" தெரிந்தோ தெரியாமலோ, வெள்ளையின பேரினவாதிகளினால் மூளைச் சலவை செய்யப் பட்டுள்ளனர்.

தேசியவாதத்தின் தோற்றத்தை எடுத்துப் பார்த்தால், அது என்றென்றும் பேரினவாதமாகவே செயற்பட்டு வந்துள்ளமை புலனாகும். ஐரோப்பாவில் தேசியவாத வெறியூட்டப்பட்ட மக்களின் ஆதரவு, ஹிட்லரின் பேரழிவு விளைவித்த இரண்டாம் உலகப்போர் வரை இட்டுச் சென்றது. அதற்குப் பிந்திய காலங்களில், லிபரல்களும், "கலாச்சார மார்க்சியர்களும்" ஐரோப்பாவை சீரழித்து விட்டதாக நவீன பாசிஸ்டுகள் கவலைப் படுகின்றார்கள். அதனால் அவர்கள், வெள்ளயினத்தை சேர்ந்த "கலாச்சார மார்க்சியர்கள்" மீதும் போர்ப் பிரகடனம் செய்துள்ளனர். "வலதுசாரி- தேசியவாத சக்திகள்" ஐரோப்பிய சமூகத்திற்கு மாபெரும் அச்சுறுத்தலாக வளர்ந்துள்ள. ஐரோப்பிய அரசுகள் இவர்களை இனங்கண்டு அடக்க வேண்டும். ஐரோப்பிய சமுதாயம் வர்க்க அடிப்படையில் இரண்டாகப் பிரிவதை எவராலும் தடுக்க முடியாது. பிற்போக்கான தேசியவாதக் கொள்கைகளால் வசீகரிக்கபப்டும் புலம்பெயர்ந்த மக்களுக்கும் இது சோதனைக் காலம். வெள்ளையின- தேசியவாதிகள் அவர்களை அழித்தொழிக்க கிளம்புவார்கள். அந்த நேரத்தில், புலம்பெயர்ந்த தமிழர்களும் இடதுசாரி சக்திகளுடன் வர்க்க அடிப்படையில் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம்.


7/25/11

2083: கம்யூனிஸ்டுகள், முஸ்லிம்களுக்கு எதிரான சிலுவைப்போர்!

"எமக்குத் தெரிந்ததெல்லாம், Anders Breivik ஒரு தீவிர வலதுசாரி, கிறிஸ்தவ மத அடிப்படைவாதி."- Roger Andresen , ஒஸ்லோ பொலிஸ் நடத்திய பத்திரிகையாளர் மகாநாட்டில்.

வலதுசாரித் தேசியவாதிகள், கம்யூனிச எதிர்ப்பாளர்கள், முஸ்லிம் விரோதிகள், கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள், இது போன்ற கொள்கைகளைக் கொண்டவர்கள் எந்தளவு ஆபத்தானவர்கள் என்பதை ஒஸ்லோ படுகொலைகள் நிரூபிக்கின்றன. நோர்வேயின் முதலாவது பயங்கரவாத குண்டுவெடிப்பை நிகழ்த்தி விட்டு, 90 பேரை படுகொலை செய்து விட்டு, போலீசிடம் சரணடைந்த Anders Breivik என்ற கொலைகாரனின் அரசியல் பின்னணி அது தான். மேற்கத்திய நாடுகளில், இன்னமும் இத்தகைய கொள்கைகளைக் கொண்ட வெள்ளையின பயங்கரவாதிகள் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். மேற்குலக அரசுகள் இதுவரை காலமும், கம்யூனிஸ்டுகளையும், முஸ்லிம்களையும் தம் மக்களுக்கு எதிரிகளாகக் காட்டி வந்தன. ஆனால், மிகவும் கொடிய பயங்கரவாதிகள் வெள்ளையின சமூகத்தினுள் மறைந்திருப்பதை புறக்கணித்து வந்துள்ளன. சாதாரணமாக, விமான நிலையைப் பரிசோதனையின் போது, ஆசிய, ஆப்பிரிக்க தோற்றம் கொண்டவர்களை மணித்தியாலக் கணக்காக சோதிப்பார்கள். அதே நேரம், வெள்ளை தோலைக் கண்டால், எந்த வித சோதனையுமின்றி போக அனுமதிப்பார்கள்.

"வெள்ளையினத்தவர்கள் பயங்கரவாதியாகவோ, அல்லது குற்றவாளியாகவோ இருக்க வாய்ப்பில்லை," என்று கருதும் அதிகார வர்க்கத்தின் அலட்சியப் போக்கை வெள்ளையின- பயங்கரவாதிகள் தமக்கு சாதகமாக்கிக் கொள்கின்றனர். 1995 ம் ஆண்டு, அமெரிக்காவில் ஒக்லஹோமா நகரில் குண்டு வைத்தது ஒரு வலதுசாரி, கிறிஸ்தவ மத அடிப்படைவாதி என்பது தெரிந்த பிறகும், மேற்குலகம் இன்னும் விழிப்படையவில்லை. நோர்வேயில் கடந்த பத்தாண்டுகளாக, முஸ்லிம் குடியேற்றவாசிகளை உளவறிந்த அளவிற்கு, வெள்ளையினத் தேசியவெறியர்களை கண்காணிக்கவில்லை. அந்த மாபெரும் தவறுக்காக நோர்வே கொடுத்த விலை மிகப் பெரியது. இனிமேல் உலகம் முழுவதும், தீவிர வலதுசாரித் தேசியவாதிகளும், கம்யூனிச எதிர்ப்பாளர்களும், மக்கள் விரோதிகளாக கருதப்பட வேண்டிய காலம் வந்து விட்டது.

Anders Breivik என்ற கொலைகாரன், ஒஸ்லோ படுகொலைக்கு முன்னர், தனது கொள்கைகளை விளக்கும் பிரகடனம் ஒன்றை தயாரித்து பின்லாந்தின் வலதுசாரிக் கட்சியின் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளான். அதனை சுருக்கமாக வீடியோ பிரதியாக பதிவு செய்து Youtube பில் வெளியிட்டுள்ளான். (
Youtube உடனுக்குடனே அழித்து விடுவதால், கீழேயுள்ள வீடியோவை சேமித்து வைக்கவும்.) மார்க்சியர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக புனிதப்போரை நடத்தக் கிளம்பியிருக்கும் இரகசிய அமைப்பொன்றின் விபரம் கொடுக்கப் பட்டுள்ளது. 2002 ல், லண்டனில் நிறுவப்பட்ட Knights Templar அமைப்பில், ஐரோப்பா முழுவதும் இருந்து 12 பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். "பேச்சுவார்த்தைக்கான காலம் முடிந்து விட்டது. இனிமேல் ஆயுதப்போராட்டமே ஒரே வழி. உலகம் என்னை இப்போது ஒரு பயங்கரவாதியாக கணிக்கலாம். ஆனால், சில காலத்தின் பின்னர், மக்கள் என்னை நியாயத்திற்காக போராடிய தியாகியாக மதிப்பார்கள்." - இவ்வாறு அந்தக் கொலைகாரனின் வாக்குமூலம் அமைந்துள்ளது. பன்முகக் கலாச்சாரம் என்ற பெயரில் நாட்டை சீரழிக்கும் ஐரோப்பிய அரசுகளை கவிழ்ப்பதும், அந்த இரகசிய அமைப்பின் நோக்கமாக இருந்துள்ளது. இஸ்ரேலுக்கு உதவுவதும், முஸ்லிம்களை ஐரோப்பாவை விட்டு விரட்டுவதும் அதன் குறிக்கோளாக உள்ளன. (நவீன கிறிஸ்தவ சிலுவைப் போராளிகள், வெள்ளயினத்தவர்களை மட்டுமே கிறிஸ்தவர்கள் என்று நம்புகிறார்கள். ஆசிய, ஆப்பிரிக்க நாட்டவர்களை, அவர்கள் கிறிஸ்தவர்களாக இருப்பினும், "முஸ்லிம்கள்" என்று தான் குறிப்பிடுவார்கள்.)

"2083 , ஐரோப்பாவின் சுதந்திரப் பிரகடனம்" (2083: A European Declaration of Independence)என்று தலைப்பிடப் பட்டுள்ள அறிக்கை, இரகசிய இயக்கத்தின் திட்டங்களை விபரிக்கின்றது. மார்க்சியர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக புனிதப்போரை அறிவித்துள்ள இந்த அமைப்பு, "கலாச்சார மார்க்சியம்" ஐரோப்பாவை இஸ்லாமிய மயப் படுத்தி வருவதாக அச்சுறுத்துகின்றது. மத்திய கால வத்திகானின் சிலுவைப்போரை மீண்டும் கொண்டு வர விரும்புகின்றது. சக ஐரோப்பிய குடிமக்களை, நவீன சிலுவைப்போரில் பங்குபற்ற வருமாறு அறைகூவல் விடுக்கின்றது. அறிக்கை மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது பகுதியில், உலகில் "கம்யூனிஸ்டுகளால் விளைந்த தீமைகளை" எடுத்துக் காட்டுகின்றது. இரண்டாவது பகுதி, "ஐரோப்பியரை அழிக்கும் நோக்கில் வந்து கொண்டிருக்கும் முஸ்லிம் குடியேறிகளைப்" பற்றி எச்சரிக்கை செய்கின்றது. மூன்றாவது பகுதி, மீண்டும் ஒரு சிலுவைப்போரின் அவசியத்தை வலியுறுத்துகின்றது. பண்டைய கால சிலுவைப்போரின் வீர புருஷர்களை, ஆதர்ச நாயகர்களாக போற்றுகின்றது. இங்கே இணைக்கப் பட்டுள்ள வீடியோவைப் பார்க்கும் பொழுது, இந்த கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள், எந்தளவு கம்யூனிஸ்டுகளையும், முஸ்லிம்களையும் வெறுக்கிறார்கள் என்று புரிந்து கொள்ளலாம்.

நோர்வேயை ஆளும் சமூக ஜனநாயக பாரம்பரியத்தைக் கொண்ட தொழிற்கட்சியை, இன்று ஒரு இடதுசாரிக் கட்சியாக கருத முடியாது. ஆயினும், ஆசிய,ஆப்பிரிக்க குடியேற்றவாசிகள் அந்தக் கட்சிக்கே அதிகளவு வாக்களித்து வருகின்றனர். துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நடந்த இளைஞர் முகாமில் கூட, பன்னாட்டு இளைஞர்கள் கட்சி உறுப்பினர்களாக கலந்து கொண்டுள்ளனர். "வெளிநாட்டவர்களுக்கு சம உரிமை வழங்குவது, நாட்டை சீரழிக்க விரும்பும் இடதுசாரிகளின் சூழ்ச்சி..." என்று தான், வலதுசாரிக் கட்சிகள் பிரச்சாரம் செய்கின்றன. 90 பேரைக் கொன்ற வெள்ளையின பயங்கரவாதி அன்டெர்ஸ் ப்ரேவிக் கூட, வெளிநாட்டவரை வெறுக்கும் Frp கட்சியின் உறுப்பினராக இருந்துள்ளான். "வலதுசாரித் தீவிரவாதிகளுக்கு எதிரான போராட்டம் தான் எமது எதிர்காலம்..." என்று தெரிவித்தார் ஒரு நோர்வீஜிய மூதாட்டி. வலதுசாரிப் பாதையில் போய்க் கொண்டிருக்கும் முன்னாள் "இடதுசாரிக் கட்சிகள்" என்ன செய்யப் போகின்றன? மீண்டும் சமூக- ஜனநாயகப் பாதைக்கு திரும்பப் போகின்றனவா? அல்லது வெள்ளையினப் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு அடிபணியப் போகின்றனவா? மேலைத்தேய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களும், பிற வெளிநாட்டவர்களும் என்ன செய்யப் போகின்றனர்? இனிமேலும் பிற்போக்கு வலதுசாரிகளுக்கு பின்னால் அணிதிரள்வார்களா? அல்லது நவ-நாஜிசப் பயங்கரவாதத்தை எதிர்த்து ஐரோப்பிய வர்க்கப் போராட்டக் களத்தில் இறங்கப் போகிறார்களா? தீவிர வலதுசாரிகள் தங்கள் எதிரிகள் யார் என்று, பிரகடனப் படுத்தி விட்டார்கள். உங்கள் நண்பர்கள் யார் என்பதை, நீங்கள் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

நோர்வே குண்டு வெடிப்பும், வெள்ளையின பயங்கரவாதமும்


22 ஜூலை 2011, நோர்வே நாட்டின் தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் உலகை உலுக்கி விட்டது. வெள்ளிக்கிழமை பிற்பகல், நகர மத்தியில் அமைந்துள்ள அரச கட்டிடங்களை இலக்கு வைத்து கார்க் குண்டு வெடித்துள்ளது. பிரதமர் அலுவலகமும், சில அமைச்சு அலுவலகங்களும், குண்டுவெடிப்பால் சேதமடைந்துள்ளன. கட்டிடங்கள் தகர்ந்துள்ள போதிலும், இரு வழிப்போக்கர்கள் மட்டுமே அகால மரணமடைந்துள்ளனர். அரச ஊழியர்களின் இழப்பு குறித்த தகவல்கள் தெரியவில்லை. பிரதமர் இரகசியமான இடத்தில் பத்திரமாக இருப்பதாக அறிக்கைகள் விடப்பட்டன. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், நோர்வேயில் இடம்பெற்ற முதலாவது குண்டுவெடிப்புச் சம்பவம் இதுவாகும். சமாதான விரும்பிகளின் நாடு என்ற விம்பத்தை தகர்த்த, குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகள் யார், என்ற ஊகங்கள் நாலாபக்கமும் இருந்து கிளம்பின. ஊடகங்கள் வழமை போல அல்கைதாவை குற்றம் சுமத்தின. "நோர்வே ஆப்கானிஸ்தான் போரில் ஈடுபட்டிருப்பதால் பழிவாங்கத் துடித்த அல்கைதா..." "ஈராக்கிய இஸ்லாமிய மதத் தீவிரவாதி முல்லா நாடுகடத்தப்படவிருந்ததால், நோர்வே அரசியல்வாதிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தார்..." "லிபியா மீதான நேட்டோ குண்டுவீச்சில் நோர்வே பங்கெடுப்பதால், எச்சரிக்கை விடுத்த கடாபியின் கைக்கூலிகள்..." இவ்வாறு அனைவரின் கவனமும் மத்திய கிழக்கு, அல்கைதா அல்லது இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பக்கமே குவிந்திருந்தது. "உள்ளூர் பயங்கரவாதிகள்" என்று பல தசாப்தங்களாக நோர்வேயில் வாழும் பாகிஸ்தானிய சமூகமும் குற்றம் சாட்டப்பட்டது.

பி.பி.சி. உலகச் சேவையில் தோன்றிய, நிபுணர் என்று அழைத்துக் கொள்ளும் ஒருவர், "சந்தேகத்திற்கிடமின்றி இது அல்கைதாவின் செயல் தான்." என்று பிதற்றினார். உலகில் இதற்கு முன்னர் இடம்பெற்ற "அல்கைதா குண்டுவெடிப்புகள்" அதிகளவு பொதுமக்களின் இழப்புகளை ஏற்படுத்திய "மென்மையான இலக்குகள்" என்ற உண்மை அந்த நிபுணருக்கு தெரியவில்லை. ஓரிரு மணிநேரத்தின் பின்னர், நோர்வேயில் இருந்து இன்னொரு தகவல் வந்தது. குண்டுவெடிப்பை தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமும் இடம்பெற்றுள்ளது. ஆளும்கட்சியின் கூட்டம் ஒன்றில், சரமாரியாக சுட்டுத்தள்ளிய நபர், போலிஸ் உடையில் வந்த நோர்வீஜிய தோற்றம் கொண்ட வெள்ளையினத்தவர். பிபி.சி. அந்த செய்தியை அறிவித்ததும், மீண்டும் "பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்" என்ற பைத்தியம் உளற ஆரம்பித்து விட்டது. "அல்கைதா இப்போதெல்லாம் வெள்ளை இனத்தவர்களை சேர்த்து வருகின்றனர். பாதுகாப்புக் கெடுபிடிகள் காரணமாக, அத்தகைய நபர்களை பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்துகின்றனர்."

ஆனால், அடுத்த நாள் பொழுது புலர்ந்த வேளை, உண்மை என்னவென்று உலகம் அறிந்து கொண்டது. கடந்த பத்து வருடங்களாக, சர்வதேச ஊடகங்கள் செய்து வரும் இனவாதப் பிரச்சாரம், இம்முறை ஆதாரங்களுடன் அம்பலமாகியது. ஆயினும் என்ன? தாக்குதல்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் வேலை இல்லை என்று நிரூபிக்கப் பட்டவுடன், அடக்கி வாசிக்க ஆரம்பித்து விட்டன. 90 பேர்களின் மரணத்திற்கு காரணமான கொலைகாரன் ஒரு வெள்ளையின நோர்வேஜியன் என்பதால், அவன் ஒரு புத்தி பிறழ்ந்தவன் என்று கதையை முடித்து விட்டார்கள். ஒரு வேளை, தாக்குதலை நடத்தியது ஒரு முஸ்லிம் என்றால், "பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் அவசியம்" குறித்து ஒபாமா விரிவுரை ஆற்றியிருப்பார். வெளிநாட்டுக் குடியேறிகளை கட்டுப்படுத்துமாறு, வலதுசாரிகள் நோர்வே அரசுக்கு அழுத்தம் கொடுத்திருப்பார்கள். தற்போது உள்நாட்டை சேர்ந்த தீவிர வலதுசாரி அரசியல் சக்திகள் தான் இந்த பயங்கரவாத செயலை புரிந்துள்ளமை நிரூபிக்கப் பட்டுள்ளது. இதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்போம்.

தாக்குதலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்கும், நேரமும் முன்கூட்டியே நன்கு திட்டமிடப் பட்டுள்ளன. அரச அலுவலகங்களில் பணிபுரிவோர், மற்றும் பிரதமரை கொலை செய்யும் நோக்கில் குண்டு வெடிக்கப் பட்டிருக்கலாம்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் என்பதால் மட்டுமல்ல, நோர்வேயில் தற்போது கோடை கால விடுமுறைக் காலம் என்பதாலும், தெருவில் சன நடமாட்டம் குறைவு.
ஆகையினால், தாக்குதலுக்கு திட்டமிட்டவர்கள் சாதாரண பொதுமக்களின் இழப்பை குறைக்க விரும்பியுள்ளனர். அல்கைதா பாணி தீவிரவாதிகள் என்றால், "மத நம்பிக்கையற்ற எல்லோரும் பரலோகம் போக வேண்டும்..." என்று விரும்பியிருப்பார்கள். பிற்காலத்தில் மக்கள் ஆதரவை இழக்க விரும்பாத உள்நாட்டு அரசியல் சக்தி ஒன்று தான் இந்த தாக்குதலை திட்டமிட்டிருக்கும். உள்நாட்டில் வளர்ந்து வரும் நவ-நாஜிச அல்லது தீவிர வலதுசாரிக் குழுக்கள் மீது தான் இயல்பான சந்தேகம் திரும்புகின்றது.

நோர்வேயில் நவ நாசிச கொள்கை கொண்ட குழுக்கள் தடை செய்யப் பட்டிருந்த போதிலும், "வெகுஜன அரசியல்" செய்யும் Fremskrittspartiet போன்ற கட்சிகள் வளர்ந்து வருகின்றன. சில நாட்களுக்கு முன்னர், "நோர்வேயின் பிற நகரங்களும் ஒஸ்லோ போன்று மாறி வருகின்றன... வெளிநாட்டவர் தொல்லை அதிகரிக்கின்றது... கிரிமினல்கள், விபச்சாரிகள், பிச்சைக்காரர்கள், அகதிகள் பெருகி வருகின்றனர்." என்று உள்ளூர் நாளிதழ் ஒன்றில் ஒப்பாரி வைத்தது. அவர்களைப் பொறுத்த வரையில், இந்த தீமைகளுக்கெல்லாம் ஆளும் தொழிலாளர் கட்சியின் (Arbeiderpartiet) தவறான கொள்கை காரணமாகும். குறிப்பாக "முஸ்லிம் குடியேற்றவாசிகள் பெருகி வருவதால், நோர்வேயில் குண்டு வெடிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை..." என்று இனவாதக் கருத்துகளை பரப்பி வருகின்றது.

தற்போது நடந்துள்ள குண்டுவெடிப்புக்கு தீவிர வலதுசாரி கொள்கை கொண்டோரே காரணம் என்பதால், நோர்வே மக்கள் மத்தியில் அவர்களுக்கான ஆதரவு குறையலாம். ஆனால், நீண்ட கால நோக்கில், தீவிரவாத எண்ணம் கொண்டோருக்கு மக்கள் ஆதரவு அதிகரிக்கலாம். எப்படியும் "வீர சாகசங்களைப் புரியும் செயல்வீரர்கள்" மீது மக்கள் மதிப்பு வைக்கலாமல்லவா? பொலிசாரினால் கைது செய்யப்பட்ட, தாக்குதலில் ஈடுபட்ட Anders Behring Brevik என்ற 32 வயது இளைஞனின் கொள்கையும் அதுவாக இருந்துள்ளது. அந்த நபரின் பேஸ்புக், டிவிட்டர் போன்ற தளங்களில் காணப்பட்ட வாசகங்கள் பகிரங்கப் படுத்தப் பட்டுள்ளன. "ஒரு மத நம்பிக்கையாளன், வெறும் நலன்களை மட்டுமே பேணும் ஒரு இலட்சம் படைவீரருக்கு சமமானவன்." என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரேயொரு வாசகம் மட்டுமே டிவிட்டரில் காணப்பட்டது. இதை விட, இணைய விவாதங்களில் கலந்து கொண்டு, கிறிஸ்தவ மத அடிப்படைவாதக் கருத்துகளை உதிர்த்துள்ளார். நெதர்லாந்தின் முஸ்லிம் எதிர்ப்பு அரசியல்வாதி கெர்ட் வில்டர்ஸ், மறைந்த பிரித்தானிய பிரதமர் சேர்ச்சில் ஆகியோரின் அபிமானியாக இருந்துள்ளார். முகநூலில் சிறந்த நூலுக்கான இவரது தெரிவாக ஆர்வேல் எழுதிய "1984" காணப்படுகின்றது. இவர் தன்னை ஒரு நோர்வீஜிய தேசியவாதியாக இனங்காட்டியுள்ளார். தற்காலத்தில் நடப்பது முதலாளித்துவத்திற்கு எதிரான போர் இல்லை. மாறாக, சர்வதேசியத்திற்கு எதிரான தேசியவாத சக்திகளின் போர்." என்று அந்த வெள்ளையின பயங்கரவாதி தத்துவ முத்துகளை உதிர்த்துள்ளார்.

ஒஸ்லோவில் நடந்த குண்டுவெடிப்பை அடுத்து, அங்கிருந்து 40 கி.மி. தூரத்தில் உள்ள "உத்தேயா" (Utøya) என்னும் தீவில் தான் அதிகளவு மரணங்கள் சம்பவித்துள்ளன. ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியின் இளைஞர் அணியின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வுகள் அந்தத் தீவில் நடந்து கொண்டிருந்தன. நாடு முழுவதிலும் இருந்து, இளம் வயது கட்சி உறுப்பினர்கள் சமூகமளித்திருந்தனர். தொழிலாளர் கட்சி இன்று ஒரு வலதுசாரி சந்தர்ப்பவாதக் கட்சியாக மாறி விட்டாலும், வெளிநாட்டவர் மத்தியில் மத்திய-இடதுசாரிக் கட்சியாக பார்க்கப்பட்டது. இதனால் பல அந்நிய குடியேறிகளின் சமூகங்களை சேர்ந்த இளைஞர்களும் கலந்து கொண்டுள்ளனர். தொழிலாளர் கட்சியின் கோடைகால முகாம் நடைபெற்ற இடத்திற்கு, கொலைகாரன் பொலிஸ் உடையில் சென்றுள்ளான். "ஒஸ்லோவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பந்தமாக, பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க அனுப்பப் பட்டதாக..." கூறியுள்ளான். தொடர்ந்து, கண்மூடித் தனமாக சுட்டதில் 90 இளைஞர்கள் கொல்லப்பட்டனர். பின்னர் அந்த இடத்திற்கு விரைந்த பொலிஸ் படையினர், Anders Brevik என்ற கொலைகாரனை மடக்கிப் பிடித்துள்ளனர். இருப்பினும், ஒரேயொரு நபர், ஒரு தானியங்கி துப்பாக்கி மூலம், 90 பேரை சுட்டுக் கொன்றமை நம்புவதற்கு கடினமானது. துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இன்னொரு நபரும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், பிறிதொரு இடத்தில் கைது செய்ததாகவும் அறிவித்தார்கள். ஆரம்பத்தில், தாக்குதல்கள் "ஒரு மனநோயாளியின்" செயல் என்று தெரிவித்தார்கள். போலிசிடம் அகப்பட்ட பயங்கரவாதி ஒரு "வெள்ளையின, கிறிஸ்தவ மத அடிப்படைவாதி" என்பதால், ஊடகங்களும் அதிகம் ஆராயவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் வெறும் கருவிகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகின்றது. இவர்களுக்குப் பின்னால், ஒரு இயக்கம், அல்லது அரசியல் சக்தி இருக்கக் கூடும்.

தாக்குதல்கள் யாவும், ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியை குறி வைத்தே இடம்பெற்றுள்ளன. இதனால், இந்த சம்பவம் காரணமாக தொழிலாளர் கட்சிக்கு வருங்கால தேர்தல்களில் அனுதாப வாக்குகளை பெற்றுத் தரலாம். இருப்பினும், இளைஞர் அணியை சேர்ந்த 90 உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் அந்தக் கட்சிக்கு பின்னடைவை தோற்றுவிக்கலாம். இன்றைய இளைஞர்கள், நாளைய தலைவர்கள். இதனால், தூர நோக்கில் தொழிலாளர் கட்சியை நோர்வேயில் இல்லாதொழிக்கும் நோக்கம் தெரிகின்றது. தொழிலாளர் கட்சியின் மீது யாருக்கு அவ்வளவு கோபம்? தொழிலாளர் கட்சி வலதுசாரி சந்தர்ப்பவாதப் பாதையில் சென்ற போதிலும், இளைஞர் அணியினர் மத்தியில் இடதுசாரிப் போக்கும் காணப்படுகின்றது. சமீப காலமாக,"பாலஸ்தீன சுதந்திரத்தை அங்கீகரிக்க வேண்டும். இஸ்ரேலிய பொருட்களை பகிஷ்கரிக்க வேண்டும்." என்பன போன்ற குரல்கள் கேட்கின்றன. மேலும், துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்த தினத்தன்று, முன்னாள் நோர்வே பிரதமர் வருகை தருவதாக ஏற்பாடாகியிருந்தது. இன்றைய பிரதமர் அப்பட்டமான வலதுசாரி என்பதும், முன்னை நாள் பிரதமர் ஓரளவு இடதுசாரி பக்கம் சாய்பவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.

இதற்கு முன்னர் குறிப்பிட்ட தீவிர வலதுசாரியினர், நவநாஜிகள் மட்டுமல்லாது, வேறு சக்திகள் சம்பந்தப் பட்டுள்ளனவா? நோர்வே வட அட்லாண்டிக் இராணுவக் கூட்டில் (நேட்டோ) அங்கம் வகிக்கின்றது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து, நோர்வே விமானங்கள் லிபியா மீது குண்டுகளை வீசி வந்துள்ளன. நேட்டோ இராணுவ நடவடிக்கையின் ஓரங்கமாக நோர்வே செயற்பட்டு வந்தாலும், இந்த வாரம் குண்டுவீச்சை நிறுத்திக் கொள்வதென்று தன்னிச்சையாக அறிவித்தது. அதாவது, வருகிற ஆகஸ்ட் முதலாம் தேதியில் இருந்து, நோர்வே விமானங்கள் போர் நடவடிக்கையில் ஈடுபட மாட்டா. இதனால், நோர்வே அரசுக்கும், பிற நேட்டோ உறுப்பினர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கும் நோக்கில் தாக்குதல் நடந்திருக்கலாம். நேட்டோ, அல்லது நோர்வே அரச மட்டத்தை சேர்ந்த ஏகாதிபத்திய ஆதரவாளர்கள், தாக்குதலில் சம்பந்தப் பட்டிருக்கலாம். நேட்டோ ஐரோப்பாவில் இரகசியமாக ஒரு பயங்கரவாத அமைப்பை (Gladio) உருவாக்கி வைத்துள்ளது. அந்த இரகசிய அமைப்பு இத்தாலி போன்ற நாடுகளில் குண்டுவெடிப்புகளை நடத்தியுள்ளது. இதுவரை குண்டுகளை வைத்தவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. அதே போல, ஒஸ்லோ குண்டுவெடிப்பை நடத்திய சூத்திரதாரிகள், அவர்களின் நோக்கங்கள் என்பன இனி ஒரு காலமும் வெளிவராமல் போகலாம்.


மேலதிக விபரங்களுக்கு:
Olso Attacks Suspect Is 'Conservative Christian'
Pågrepet 32-åring kalte seg selv nasjonalistisk
Anders Behring Breiviks kommentarer hos Document.no
Terrorsiktet kjøpte seks tonn kunstgjødsel
TERRORAKSJON I OSLO

7/22/11

யூதரை சிறை மீட்ட முஸ்லிம் மக்களின் எழுச்சி

பொஸ்னியாவில் நடந்த உண்மைச் சம்பவம் (1819). வரலாற்று உண்மைகளை மறைத்து, மக்களை மூடராக்கும் இனவெறியர்களின் முகமூடியைக் கிழிக்கும் கதை இது.


ஆயிரமாயிரம் ஆண்டுகளாக யூதர்களும், முஸ்லிம்களும் வன்மம் கொண்ட எதிரிகளாக காட்டும் பரப்புரைகள் மலிந்து விட்ட காலமிது. தமிழ் இலக்கிய அறிவுஜீவிகளும், மேலைத்தேய காலனிய ஆக்கிரமிப்பாளர்களின் விஷமப் பிரச்சாரத்தை உண்மையென்று நம்புகின்றனர். ஆனால், கிறிஸ்தவ நாடுகளில் வாழ்ந்த யூதர்கள் அடிக்கடி மதக்கலவரங்களால் பாதிக்கப்பட்டனர். அதற்கு மாறாக, முஸ்லிம் நாடுகளில் யூதர்களுக்கு பாதுகாப்புக் கிடைத்தது. ஸ்பெயின் கிறிஸ்தவ மன்னர்களால் கைப்பற்றப் பட்ட வேளை, மதச்சுத்திகரிப்புக்கு அஞ்சி ஓடிய யூதர்கள் பொஸ்னியாவில் தஞ்சம் அடைந்திருந்தனர். 20 ம் நூற்றாண்டு வரையில், அதாவது நாசிகளின் இனப்படுகொலைக் காலம் வரையில், சாராஜெவோ நகரில் ஸ்பானிய மொழி பேசும் யூத சமூகம் வாழ்ந்து வந்தது.

மாபெரும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை ஆண்ட "ஓட்டோமான் துருக்கியர்கள்", இன்றைய பொஸ்னியா வரை தமது ஆட்சிப்பரப்பை விஸ்தரித்திருந்தார்கள். செர்போ- குரோவாசிய மொழி பேசும் மக்கள் பலர் இஸ்லாமிய மதத்தை தழுவியிருந்தனர். ஓட்டோமான் சாம்ராஜ்யத்திற்குட்பட்ட, பொஸ்னிய மாநிலத்தில் அவர்களின் விகிதாசாரம் அரைவாசிக்கும் அதிகமாகவிருந்தது. ஓட்டோமான் இஸ்லாமிய சாம்ராஜ்யம், அன்றைய ஐரோப்பாக் கண்டத்தில் வளர்ச்சியடைந்த நாகரீகத்தைக் கொண்டிருந்தது. இதன் காரணமாகவும், அரச பதவிகளுக்காகவும் பலர் முஸ்லிம்களாக மாறியிருந்தனர். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், பல உள்ளூர் மக்கள் கிறிஸ்தவர்களாக மாறியதை இங்கே ஒப்பிடலாம்.

19 ம் நூற்றாண்டு பொஸ்னியாவில், யூதர்களும், முஸ்லிம்களும் சமாதானமாக வாழ்ந்து வந்தனர். ஆனால், இஸ்லாமிய மதத்திற்கு மாறிய யூத இளைஞன் ஒருவன், மதக்கலவரத்திற்கு காரணகர்த்தா ஆகினான். பெரும்பாலும், புதிதாக மதம் மாறியவர்கள், தமது விசுவாசத்தைக் காட்டுவதற்காக மதத் தீவிரவாதிகளாக நடந்து கொள்வார்கள். Travnik என்ற நகரில், Moses Chavijo என்ற யூதன் இஸ்லாமிய மதத்திற்கு மாறியிருந்தான். டெர்விஷ் அஹ்மத் என்று தனது பெயரையும் மாற்றிக் கொண்டு, முஸ்லிம்களை யூதர்களுக்கு எதிராக தூண்டி விட்டான். யூத எதிர்ப்பு மட்டுமல்ல, இஸ்லாமிய அடிப்படைவாதத்தையும் பிரச்சாரம் செய்த அஹ்மத்தின் பின்னால், சில முஸ்லிம் இளைஞர்கள் அணி திரண்டார்கள். இந்த தீவிரவாதக் கும்பல், யூதர்களை இலக்கு வைத்து தாக்கி வந்தது. யூதர்களும் அதற்குப் பதிலடி கொடுப்பதற்காக, தீவிரவாத தலைவனான அஹ்மத்தை பிடித்து கொலை செய்து விட்டார்கள். சாராஜெவோ நகர் யூதர்களின் தலைமை மதகுருவான Moshe Danon உம் அந்தப் படுகொலையில் சம்பந்தப் பட்டிருந்தார்.

தலைவனை இழந்ததால் ஆத்திரமுற்ற முஸ்லிம் தீவிரவாத கும்பலை சேர்ந்தோர், துருக்கி ஆளுநரிடம் இது குறித்து முறையிட்டனர். ஊழல்வாதியான ஆளுநரும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பக்கம் சாய்ந்து விட்டார். யூதர்கள் ஐந்து இலட்சம் தங்கக் காசுகளை, படுகொலைக்கான குற்றப்பணமாக கட்ட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார். குற்றப் பணம் செலுத்தப் படும் வரையில், யூத மதகுருவும், பத்து யூத பிரமுகர்களும் பணயக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். மூன்று நாட்களுக்குள் பணம் வராவிட்டால், யூத பணயக்கைதிகள் கொலை செய்யப் படுவார்கள் என்று எச்சரிக்கை விடப்பட்டது. மரண தண்டனை நிறைவேற்றப் படுவதற்கு முதல் நாள், யூதர்கள் முஸ்லிம் சகோதரர்களிடம் உதவி கோரினார்கள். சாராஜெவோ நகர முஸ்லிம் மக்களுக்கும், அந்தத் தீர்ப்பு அநீதியாகப் பட்டது. ஊழல்மய ஆளுனரை முஸ்லிம்களும் வெறுத்தார்கள். மேலும், தீவிரவாதக் கும்பல்களின் வன்முறைகளையும் அங்கீகரிக்கவில்லை.

அடுத்து நடந்த சம்பவங்கள், மக்கள் சக்தியின் மகத்துவத்தை பறைசாற்றியது. ஆயுதமேந்திய மூவாயிரம் முஸ்லிம்கள், ஆளுநர் மாளிகையை சுற்றி வளைத்தனர். பணயக்கைதிகளாக வைக்கப் பட்டிருக்கும் யூதர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோரினார்கள். முஸ்லிம் மக்களின் எழுச்சிக்கு ஆளுநரும், மதத் தீவிரவாதிகளும் அடிபணிந்தார்கள். பிடித்து வைத்திருந்த யூதர்களை உடனடியாக விடுவித்தார்கள். தன்னை விடுவித்த முஸ்லிம் சகோதரர்களுக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காக, யூத மதகுரு மோஷே டானன் மெக்காவுக்கு புனிதப் பயணம் செல்ல விரும்பினார். ஆனால், அவரது குறிக்கோள் நிறைவேறும் முன்னரே மண்ணை விட்டு மறைந்து விட்டார். யூத- முஸ்லிம் நல்லுறவுக்காக இதயசுத்தியுடன் வாழ்ந்து மறைந்த மகானின் கல்லறை, இரு மதத்தவரும் வழிபடும் புனிதஸ்தலமாகியது. 1940 ல் நாஜிகளின் படையெடுப்பு அந்த வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.

19 ம் நூற்றாண்டு பொஸ்னியாவில் நடந்த கதை, 21 ம் நூற்றாண்டின் இன/மதப் பூசல்களுக்கான தீர்வை சுட்டிக் காட்டுகின்றது. இன/மத/மொழித் தீவிரவாதத்தை வளர்க்கும் நபர்கள், அந்தந்த சமூகத்தினரால் ஒதுக்கப் பட வேண்டும். சிறுபான்மையினரின் உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கு, பெரும்பான்மை இனத்தை/மதத்தை சேர்ந்தவர்களின் ஆதரவு அவசியம். இனங்களுக்கு/மதங்களுக்கு இடையிலான சகோதரத்துவம் வலுவடைந்தால், எதேச்சாதிகார ஆட்சியாளரின் அதிகாரம் செல்லாக்காசாகி விடும். ஈழத்தமிழரின் விடுதலைக்கு அவசியமான பாடத்தையும், இந்தக் கதையில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். வரலாற்றில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளாதவர்கள், தவறை திருப்பிச் செய்யும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்றனர்.


உசாத்துணை:
1.Die Sephardim in Bosnien(Moritz Levy)(ஜெர்மன் மொழி)
2.Sarajevo Rose: A Balkan Jewish Notebook
3.Moshe Danon

The Wrestler (2008) : அமெரிக்க மல்லர்களின் உண்மைக் கதை !

டெர்மினேட்டர்களாகவும், ராம்போக்களாகவும் அவதரித்து தீயவர்களோடு சண்டையிட்டு உலகை மாபெரும் அபாயத்திலிருந்து அமெரிக்கர்கள் காப்பாற்றுவதாக வரும் ஹாலிவுட் திரைப்படங்களின் இடையே எதார்த்த வாழ்க்கையின் கதைகளைச் சொல்லும் படங்களும் அபூர்வமாக வருவதுண்டு. அவ்வாறான ஒரு படம் தான் 2008–இல் வெளியான ’தி ரெஸ்லர்’(THE WRESTLER).
நரம்புகள் தளர்ந்து, இரத்தத்தின் வேகம் குறைந்து, வயோதிகத்தின் வாயிலில் நிற்கும் ஒரு தொழில்முறை மல்யுத்த வீரனின் வாழ்க்கையைப் பேசும் அக்கதையின் நாயகன் ராண்டி. வில்லன் இல்லாத இத்திரைக்கதையில் சூட்சுமமான எதிர்நாயகன் ஒருவனும் உண்டு. பிரமாண்டமான அமெரிக்கப் பொழுதுபோக்குத் தொழில் எனும் அந்த வில்லன் தனது நாயகர்களைப் பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியும் வலியை இந்தத் திரைப்படம் அழுத்தமாக உணர்த்துகிறது.
நிஜ உலகில் நமக்குக் கடும் ஆச்சரியத்தை உண்டாக்கும் எத்தனையோ அம்சங்களின் மறுபக்கத்தை, நம்மிடம் இருந்து மறைக்கப்படும் பக்கத்தை வெள்ளித்திரையின் வெளிச்சத்தில் காட்டுகிறது ’தி ரெஸ்லர்’. அதற்கு முன் ரெஸ்லர் திரைப்படத்தின் கதைச் சுருக்கத்தை பார்ப்போம்.
ராண்டி என்கிற ரோபின் ராம்ஸின்ஸ்கி எண்பதுகளில் நட்சத்திரமாய் விளங்கிய தொழில்முறை மல்யுத்த வீரன். இருபது வருடங்களும் இளமைத் துடிப்பும் வழிந்து ரத்தம் சுண்டிப் போன பின் இப்போது அவன் ஒரு பல்பொருள் அங்காடியின் வேலை செய்து அன்றாட ஜீவனத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறான். ஆனாலும் பழைய வாழ்க்கையையும், இரசிகர்களின் ஆரவாரத்தையும், அது கொடுத்த புகழ் போதையையும் மறக்க முடியாத அவன் வார இறுதி நாட்களில் சிறு நகரமொன்றின் சிறிய அளவிலான மல்யுத்தப் போட்டிகளில் பங்கு கொள்கிறான்.
ஒரு கட்டத்தில் அவனது ஒப்பந்ததாரர்கள் அவன் புகழுடன் இருந்த காலத்தில் மல்யுத்த மேடைகளில் அவனது பிரதான  எதிரியாக இருந்த அயதுல்லா கொமேனி என்பவனோடு ஒரு போட்டியை ஏற்பாடு செய்கிறார்கள். இளமை தொலைந்து உடல் தளர்ந்து போன நிலையில் இருக்கும் ரேண்டி, இந்தப் போட்டிக்காக தனது உடலை ஊக்க மருந்துகளின் துணையோடு தயாரிக்கிறான். ஆனால் அந்தப் போட்டிக்கு முன் உடலில் செலுத்திய ஊக்கமருந்துகளின் விளைவாக அவனுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது.
அதன் பின் பைபாஸ் சர்ஜரி செய்து கொள்ளும் ராண்டி, இனிமேலும் மல்யுத்தப் போட்டிகளில் பங்கெடுத்துக் கொள்வது தற்கொலைக்கு ஒப்பானது என்று மருத்துவர்கள் தெரிவித்து விடுகிறார்கள். நட்சத்திரமாய் மிளிர்ந்து ஒளி வீசிய அவனது கடந்தகாலப் பெருமைகளோடு நிகழ்கால எதார்த்தம் முரண்படுகிறது – அதன் முடிவில் எதார்த்த நிலைமைகளே ஜெயிக்கிறது. ராண்டி தனது வார இறுதி நாட்களில் ஒரு அங்காடியில் விற்பனைப் பிரதிநிதியாகப் பணிக்குச் சேர்கிறான்.
மல்யுத்த மேடையின் ஒளிவெள்ளமும், இரசிகர்களின் ஆரவாரமும் புடைசூழ வாழ்ந்த ராண்டி முதன்முறையாக தனித்து விடப்படுகிறான். கதையில் அவனுக்கு ஒரு தோழியும் இருக்கிறாள். ஸ்ட்ரிப் க்ளப் எனப்படும் உடலைக் காட்டி முக்கால் நிர்வாணத்தோடு நடனமாடுபவளாய் ஒரு பாரில்  பணிபுரியும் அவளும் ரேண்டியைப் போலவே நடுத்தர வயதின் வாயிலில் நிற்பவள் தான். உடல் தளர்ந்து தனிமையில் வாடும் ராண்டிக்கு அவளின் நட்பு  ஆறுதலாய் இருக்கிறது. அவளது யோசனையின் பேரில் முன்பு அவனால் கைவிடப்பட்ட  ஒரே மகளைச் சந்தித்து மீண்டும் தனது உறவைப் புதுப்பிக்கிறான் ராண்டி.
ஒரு கட்டத்தில் தனது பழைய வாழ்க்கையை மறக்க முடியாத ராண்டி தனது மல்யுத்த நண்பர்களைத் தேடிப் போகிறான். அங்கே போதை மருந்து உட்கொள்ளும் அவன், மகளைச் சந்திக்க வருவதாகச் சொன்ன நேரத்தில்  சந்திக்கத் தவறி விடுகிறான். தனது பதின்ம வயதுகளில் தந்தைப் பாசத்திற்காக ஏங்கிய அந்தப் பெண், மீண்டும் சிறிதாய் துளிர்விடத் துவங்கிய அந்த நம்பிக்கை முளையிலேயே கருகியதால் ஏமாற்றமடைகிறாள். ராண்டியைப் புறக்கணிக்கிறாள்.
இதற்கிடையே நடனமாடும் பெண் தோழியிடம் தன் காதலை வெளியிடுகிறான், ராண்டி. ஒரு விடலைச் சிறுவனுக்குத் தாயான அவளோ முதலில் அதை மறுக்கிறாள். காதலும் மறுக்கப்பட்டு மகளும் புறக்கணித்து விடும் சூழலில் கடுமையாக ஏமாற்றமடையும் ராண்டி, சொந்த வாழ்க்கையின் உறவுகள் தனக்கு ஒட்டாது என்று முடிவு செய்கிறான். தனது வாழ்வும், சாவும் மல்யுத்த மைதானத்தில் என்று தீர்மானிக்கிறான். தற்கொலைக்கு ஒப்பான ஒரு முடிவை எடுக்கிறான். மீண்டும் ஒரு போட்டியில் கலந்து கொள்கிறான். அது அயதுல்லா கொமேனி எனும் வீரனுடன் முன்பு திட்டமிடப்பட்ட போட்டி.
அந்தப் போட்டியின் துவக்கத்தில் ஒரு உணர்ச்சிப்பூர்வமான உரையை நிகழ்த்தும் ராண்டி, தன்னை இத்தனை ஆண்டுகளாக ரசித்து ஆதரித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கிறான். தனது உலகம் இதுதானென்று அறிவிக்கிறான். போட்டி துவங்குகிறது. பைபாஸ் சர்ஜரி செய்து கொண்ட இதயம் போட்டியின் முரட்டுத்தனங்களுக்கு ஒத்துழைக்க மறுக்கிறது. ஊசியாய்க் குத்தும் வலியால் தடுமாறும் ராண்டி, ஒளிரும் விளக்குகளின் வெளிச்சத்தில், இரசிகர்களின் ஆரவாரத்தோடு (அயதுல்லா பெயர் ஈரானோடு சம்பந்தப்பட்டதால் ரசிகர்கள் யு.எஸ்.ஏ என்று கத்துகிறார்கள்) தட்டுத்தடுமாறி பக்கவாட்டுத் தடுப்பின் மீதேறி தனது எதிரியின் மேல் பாய்கிறான்.. அதோடு திரைப்படம் முடிகிறது.
The Wrestler (2008) : அமெரிக்க மல்லர்களின் உண்மைக் கதை !

மல்யுத்தம்: விளையாட்டா, வெறியா?

ற்காப்பு நடவடிக்கை அல்லது சண்டை என்பது எப்போது விளையாட்டாகிறது – எப்போது கலையாகிறது? உடலின் இயக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட லயத்தில் தொடர்ச்சியாக இயங்கும் போது உண்டாகும் நளினம் உடற்தசைகளோடு ஊறி, உடலையும் மனதையும் ஒரு பக்குவத்திற்குக் கொண்டு வந்து ஒரே நேர் கோட்டில் நிறுத்துகிறது. அப்போது அதன் உள்ளடக்கமாய் இருக்கும் வன்முறை என்பது இயல்பாகவே உதிர்ந்து, ஒரு கலையாகப் பரிணமிக்கிறது. இதுவே ஒரு குறிப்பிட்ட சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட, பாதுகாப்போடு நடக்கும் போது விளையாட்டாகிறது.
கலை எனும் அம்சத்தில் புறவயமாயுள்ள சமூக உலகின் சவால்களுக்கு ஒருவனின் அகநிலைமைகளைத் தயாரிக்கிறது – விளையாட்டு எனும் அம்சத்தில் புற உலகின் அழுத்தங்களில் இருந்து கண நேர விடுதலையையும், உடலுக்கும் மனதுக்குமான புத்துணர்வையும் அளிக்கிறது. பல ஆண்டு தொடர் பயிற்சிகளின் ஊடாக ஒருவனுக்குக் கிடைக்கும் ஆற்றல் புறநிலையில் மனிதர்களின் மீதான அன்பாக மிளிர்கிறது.
அதே கலை வணிகமாகவும், இலாபமீட்டும் தொழிலாகவும் மாறும்போது அது தன்னோடு சம்பந்தப்பட்டவர்களின் வாழ்வில் உண்டாக்கும் விளைவுகளைத் தான் ரெஸ்லர் திரைப்படம் நேர்மையாகக் காட்சிப்படுத்துகிறது. வீரன் ஒருவனுடன் ராண்டி மோதும் காட்சியைக் காணும் நமக்கு நரகலைக் கண்டது போல் அருவெறுப்புத் தோன்றக் கூடும். கையில் கிடைத்த பொருட்களையெல்லாம் வைத்துத் தாக்கிக் கொள்கிறார்கள். அந்த வீரன் ஸ்டாப்லரின் சிறிய ஊசிகளைக் கொண்டு ரேண்டியின் உடலெங்கும் குத்துகிறான். சுற்றியிருக்கும் இரசிகர்களோ கத்தி வெறியேற்றுகிறார்கள்.அந்த அரங்கத்திலிருந்த இரசிகர்களின் தேசியவெறியை மேலும் தூண்டி, தன்மேல் ஒரு பரிதாபத்தைச் சம்பாதித்துக்கொள்ள ரேண்டி தன் உடலில் காயங்களை தானே உண்டாக்கிக் கொள்கிறான்.
The Wrestler (2008) : அமெரிக்க மல்லர்களின் உண்மைக் கதை !மல்யுத்தம் என்பது விளையாட்டு என்பதைக் கடந்து தொழிலாகவும், அதிலும் குறிப்பாகக் கேளிக்கைத் தொழிலாகவும் இருப்பதன் இரகசியம் இந்த இரத்த இரசிகர்களின் வக்கிர ரசனையின் அடிப்படையில் தான் இருக்கிறது. WWE, TCW, TNA போன்ற கார்ப்பரேட் மல்யுத்தக் கேளிக்கை நிறுவனங்கள் அந்த இரசனையை மேலும் மேலும் வெறியேற்றிப் பயன்படுத்திக் கொள்கின்றன. காசுக்கு ஏற்ற தோசை என்பது போல் அதிக வலியையும், வேதனையையும் தன் உடல் மேல் ஏற்றுக் கொள்பவரே திறன்மிக்க வீரராக இரசிகர்களால் போற்றப்படுகிறார்.
மேடைகளில் காட்டும் வெறித்தனம் மட்டுமே போதாது என்பதால், இக்கேளிக்கை விளையாட்டை நடத்தும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வீரர்களிடையே நடக்கும் மோதல்களுக்கு நாடகம் போல ஒரு கதைப் பின்னணியையும் உருவாக்குகின்றன. அதற்காகவே ஒரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் போல் கதை எழுதவென்றே தனிப்பிரிவையும் கூட சம்பளம் கொடுத்துப் பராமரிக்கின்றன. உதாரணமாக, எதார்த்த உலகில் அமெரிக்கா ஆக்கிரமிப்புப் போர் தொடுக்கும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் போல் சித்தரிக்கப்படும் மல்யுத்த வீரர்கள் வில்லன்களாகவும், அமெரிக்க வீரர்கள் நல்லவர்கள் போலவும் சித்தரிக்கப்படுகிறார்கள்.
இவ்வகையில் தான் சாமானிய விளையாட்டு ரசிகர்களான அமெரிக்கர்களைக் கூட போதை தலைக்கேறிய வெறியர்களாக திட்டமிட்டு மாற்றுகிறார்கள். பே பெர் வ்யூவ் எனப்படும் காசு கொடுத்து மல்யுத்தப் போட்டிகளைக் காண்பவர்கள் மூலம் கிடைக்கும் வருமானமே இந்த பில்லியன் டாலர் தொழிலில் பிரதானமானது எனும் செய்தியிலிருந்தே இது சராசரி அமெரிக்கர்களிடையே எந்தளவுக்கு செல்வாக்குச் செலுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
சுமார் ஐந்தாயிரம் கோடிகளைக் குவிக்கும் இத்தொழிலில் விற்பனை செய்யப்படும் பண்டம் வெறித்தனமும், மிருகத்தனமும். அமெரிக்காவில் மட்டுமல்ல – அதை நுகர்வது உலகெங்கும் பரந்து விரிந்து கிடக்கும் இரசிகர் பட்டாளம் என்பது உங்களுக்கு வியப்பை ஏற்படுத்தலாம். ஆனால் அது தான் உண்மை. அமெரிக்காவின் மேலாதிக்க அரசியல் நலனுக்கேற்ற விதத்தில் இத்தகைய கேளிக்கைத் தொழில்கள் உலகெங்கும் தமது சாம்ராஜ்யத்தைக் கட்டியமைத்திருக்கின்றன.
The Wrestler (2008) : அமெரிக்க மல்லர்களின் உண்மைக் கதை !

ரத்தம்.. மேலும் ரத்தம்… மேலும் மேலும் ரத்தம்..!

அமெரிக்காவில் மட்டும் இதுவரை நூற்றுக்கணக்கான தொழில்முறை மல்யுத்த வீரர்களும், தொழில் முறை பாடிபில்டிங் வீரர்களும் அனபாலிக் ஸ்டிராய்டுகளின் பயன்பாட்டினால் மரணமடைந்துள்ளனர். இது மட்டுமல்லாமல், தங்கள் உடலின் மேல் தாங்களே வலிந்து திணித்துக் கொள்ளும் வலியைப் போக்க அதீதமான வலி நிவாரணி மருந்துகளையும் உட்கொள்கிறார்கள். 2004–ஆம் ஆண்டு யு.எஸ்.ஏ டுடே எடுத்த நேர்காணலில் தான் நாளொன்றுக்கு 200 வலி நிவாரண மாத்திரைகளை உட்கொள்வதாக ஸ்காட் லெவி என்ற வீரர் தெரிவிக்கிறார்.
போதை மருந்துகளாலும், ஊக்க மருந்துகளாலும் செத்துப் போனவர்களில் பெரும்பாலானவர்கள் நம் நாயகன் ராண்டியைப் போலவே நடுத்தர வயதினர் அல்லது நடுத்தர வயதைக் கடந்தவர்கள். உடலின் ஒத்துழைப்பு விடைபெற்றுச் செல்லும் காலகட்டத்தில் நுகர்வோர்களான ரசிகர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய மருந்துகளின் துணையின்றி வேறு வழியில்லை. வயோதிகத்தின் எதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு ஒரு சராசரி வாழ்க்கையை இவர்களால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.
பைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பின் பல்பொருள் அங்காடியில் வேலைக்குச் செல்ல முயலும் ராண்டிக்கு ஒவ்வொரு கணமும் மல்யுத்த மேடையின் ஜொலிக்கும் ஒளி வெள்ளமும், ஆரவாரிக்கும் ரசிகர்களின் கூச்சலும் காதுகளுக்குள் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. இறுதிக்காட்சியில் ராண்டி தற்கொலைக்கு ஒப்பான அந்த முடிவை எடுக்க பழைய வாழ்வின் மீதான ஏக்கம் ஒரு காரணம் என்றால், இன்னொரு புறம் ரசிகர்களும் காரணம். இது ஒருவிதமான கையறு நிலை. தானே உருவாக்கிக் கொண்ட மரணக்குழி.
விளையாட்டு என்பது தொழிலாக மாற்றப்பட்டு விட்ட நிலையில், அதன் நுகர்வோரின் சந்தையின் முன் ரகரகமான வகையினங்களைக் கடைபரப்ப வேண்டிய தேவை எழுகிறது. அமெச்சூர் மல்யுத்தத்தில் ஒரு வீரரின் தொழில் நுணுக்கமும், அறிவாற்றலும் வெற்றியைத் தீர்மானிக்கிறது என்றால், இங்கே மனித இயல்பைத் தாண்டிய அசுர பலம் மட்டுமே வெற்றியைத் தீர்மானிக்கிறது. ஒரு வீரன் எத்தனை அடி வாங்குகிறான், எத்தனை ரத்தம் சிந்துகிறான், அந்த வலியையும் தாண்டி எப்படி ஜெயிக்கிறான் என்பதில் இருந்தே அவன் தனது வாடிக்கையாளர்களான ரசிகர்களைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள முடியும்.
இதற்கு மனித உடலின் சாத்தியங்களையெல்லாம் கடந்த ஒரு வலிமையும், கொடூரத்தனமும் தேவைப்படுகிறது. இயல்பான மனித உடலால் அது சாத்தியப்படாது என்கிற நிலையில் தான் போதை மருந்துகளை வீரர்கள் நாடுகிறார்கள். பார்வையாளர்களின் மன வக்கிரங்களை ஆற்றுப்படுத்த மேடையிலேயே இரத்தம் சிந்திக் காட்ட வேண்டும். இதற்காக கையுறைகளுக்குள் சிறிய பிளேடுகளை மறைத்து வைத்துக் கொண்டு தங்கள் முகங்களைத் தாங்களே கீறி இரத்தம் சொட்டச் சொட்ட மேடையில் நிற்கும் மல்யுத்த வீரனை வெறியுடன் கூடிய ரசிகர் கூட்டம் ஆரவாரித்துப் போற்றுகிறது. படத்தில் ராண்டியும் இந்த உத்தியைக் கையாள்கிறான்.
பண்டைய ரோம நாகரீகத்தில் கிளாடியேட்டர்கள் எனப்படும் அடிமைகளை ஒருவரோடு ஒருவர் மோத விட்டு அவர்கள் மடிந்து விழுவதைக் கண்டு ரசிக்கும் காட்டுமிராண்டிக் கலாச்சாரத்தின் நவீன வடிவம் தான் தொழில்முறை மல்யுத்தம். அன்றைய ரோம கிளாடியேட்டர்களின் கதை ஓரிரு போட்டிகளில் முடிந்து விடும். வலியும், வேதனையும் கண நேர அவஸ்தை தான். ஆனால், தொழில்முறை மல்யுத்த வீரர்கள் சுலபத்தில் இறந்து விடுவதில்லை. இந்த நரக வேதனையையும் மரணவஸ்தையையும் தங்களோடு சுமந்து திரிகிறார்கள் – தமது சுற்றாத்தாருக்கும் அதையே பரிசளிக்கிறார்கள்.
The Wrestler (2008) : அமெரிக்க மல்லர்களின் உண்மைக் கதை !
க்ரிஸ் பென்னுவா
க்ரிஸ் பென்னுவா தொண்ணூறுகளிலும், இரண்டாயிரங்களின் மத்தியப் பகுதி வரையிலும் கூட மல்யுத்த மேடைகளைக் கலக்கிய கனேடிய வீரர். ஒவ்வொரு போட்டியிலும் அவரது இறுதித் தாக்குதலான கிரிப்லர் க்ராஸ் பேஸ் எனும் பாய்ச்சலுக்கு மயங்காதவர் கிடையாது. அதீதமான ஊக்க மருந்துகளை உட்கொண்டதால் மூளை பாதிக்கப்பட்ட பென்னோய்ட், 2007-ம் ஆண்டு ஜூன் மாதம் தனது இரண்டு குழந்தைகளையும், மனைவியையும் கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராண்டியின் வாழ்வுக்கும், பென்னுவாவின் வாழ்வுக்கும் சாராம்சத்தில் வேறுபாடு ஏதுமில்லை. பென்னுவா தனது மனைவியையும் குழந்தைகளையும் நேரடியாகக் கொன்றார் என்றால், ரேண்டி தனது மகளுக்கு நியாயமாகக் கிடைத்திருக்க வேண்டிய பாசத்தை அளிக்காமல் புறக்கணித்து உளவியல் ரீதியில் கொல்கிறார்.  பென்னுவாவின்  தற்கொலையும் ரேண்டி மீண்டும் போட்டியில் கலந்து கொள்ள முடிவு செய்வதும் கூட சாராம்சத்தில் ஒன்றே தான்.
ரெஸ்லர் திரைப்படத்தைப் பார்த்த பிரபல மல்யுத்த வீரரான ரவுடி ரோடி பைப்பர் கதறி அழுதிருக்கிறார். இவ்விளையாட்டுக்காகவும், ரசிகர்களின் அன்பைப் பெறுவதற்காகவும் தன்னைப் போன்ற நூற்றுக்கணக்கானவர்கள் செய்த தியாகங்களை இத்திரைப்படம் தனக்கு நினைவூட்டியதாகப் பின்னர் குறிப்பிட்டுள்ளார்.  தான் பிரபலமாயிருந்த காலத்தில் தனது உணவே பெயின் கில்லர் மாத்திரைகளாக இருந்ததையும், அதிலிருந்து விடுபட தான் போராடிய அந்த நினைவுகளும் இந்தத் திரைப்படத்தைக் காணும் போது வந்ததாகத் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் அவருக்கு நினைவில் வராத இன்னொரு அம்சமும் உள்ளது. திரைப்படத்தின் இறுதியில் ராண்டியின் உரை படத்தின் ரசிகர்களிடம் உண்டாக்க விரும்பும் அனுதாப உணர்ச்சியாகட்டும், ரவுடி ரோடி பைப்பரின் அழுகையாகட்டும் ஒரே தளத்தில் தான் நிற்கிறது. அது தன்னலமிக்க ‘தியாக’த்தைக் குறித்து அவர்களே கொண்டிருக்கும் சுய கழிவிரக்கம் தான். எதார்த்தத்தில் ஆயிரக்கணக்கான மல்யுத்த வீரர்களையும், பாடி பில்டர்களையும், அமெரிக்க கால்பந்து வீரர்களையும் ஸ்டிராய்டுகளை நோக்கியும் பிற போதை வஸ்துக்களை நோக்கியும் தள்ளியது அவர்களது தியாகம் அல்ல. அது இத்தொழிலின் நுகர்வோரான ரசிகர்களின் வெறிகொண்ட விருப்பமும், இதை நடத்திக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் கம்பெனிகளின் லாப வெறியும் தான்.
படம் நெடுக அரூபமாய் உலாவந்து ராண்டியோடு வினையும், எதிர்வினையும் புரியும் அவனது எதிர்நாயகன் இவ்விரு அம்சங்கள் தான். திரைப்படத்திலும் சரி எதார்த்தத்திலும் சரி, தொழில்முறை மல்யுத்த வீரர்கள் தோற்றுப்போய் தாங்கள் வாழ்வை இழப்பது இவைகளிடம் தான். ஆனால், அந்த அடிமைத்தனத்தைத் தியாகமாகவே அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். ரோடி பைப்பரின் கண்ணீர் சொல்லும் செய்தி அது தான். அதனால் தான் இறுதிக் காட்சிகளில்  தனது அறியாமையையும், அடிமைத்தனத்தையும் தியாகமாக நினைத்துக் கொண்டு ராண்டி நிகழ்த்தும் அந்த உரை நமக்குள் கண்ணீரைக் கோரவில்லை – பரிதாபத்தைக் கோருகிறது.
பண்டைய க்ளாடியேட்டர்கள் ஒருவகையில் இந்த முதலாளித்துவ க்ளாடியேட்டர்களினின்றும் உணர்வுத் தளத்தில் மேம்பட்டவர்களாயிருந்தார்கள். தாம் அடிமைகள் என்கிற குறைந்தபட்சப் புரிதல் அவர்களுக்கு இருந்ததாலேயே பின்னர் விடுதலை என்பதை நோக்கிய அவர்களின் முன்னேற்றம் சாத்தியமானது. ஆனால், இவர்களோ தங்களது எதிரி  யாரென்று கூடத் தெரியாமல் நிழலோடு சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் படத்தை வாசகர்கள் அனைவரும் பார்க்க வேண்டும். தொலைக்காட்சியில் அமெரிக்க மல்யுத்தப் போட்டிகளுக்கு அடிமையாகி இருக்கும் நமது சிறார்களை எப்படி மீட்க முடியும் என்பதைக் கற்பதற்காகவாவது அனைவரும் இந்தப் படத்தைக் காண வேண்டும். வீரனை மெல்லக் கொன்றும், ரசிகனை விரைவாக வெறியனாகவும் மாற்றும் இந்த கேளிக்கைத் தொழிலின் இருண்ட பக்கங்களை இந்தத் திரைப்படம் காட்டுகிறது. அது காட்டத் தவறிய அரசியலை நாம் கண்டுபிடிப்பதற்கும் அதுவே உதவி செய்கிறது.
__________________________________________________________
- தமிழரசன், புதிய கலாச்சாரம் – ஜூலை, 2011

7/20/11

“தொடைகளுக்கு நடுவே ஒளிந்திருக்கும் நரகம்” 3000 ஆண்டுகால கருப்பின அடிமை வரலாறு!

‘நான் கீழ குனிந்து என் கால்களுக்கு நடுவில் பார்த்தேன். மருத்துவச்சி உக்கார்ந்து கொண்டிருந்தாள். பிளேடின் ஓரங்கள் காய்ந்துபோய், ரத்தக்கறை படிந்திருந்தன.
‘த்துப்..’
பிளேடின் மீது எச்சில் துப்பினாள் மருத்துவச்சி.
அடுத்த நொடி, ‘சர்ர்க்’ என்று ஒரு சத்தம்.
படக்கூடாத இடத்துல பிளேடு பட்டு, என் பிறப்புறுப்பு கிழிவது நன்றாகத் தெரிந்தது. நரநரவென்று முன்னும் பின்னுமாக இழுத்தாள்.  அந்தக் கிழவியின் அருகில் அக்கேசியா மரத்தின் முட்கள், குவியல் குவியலாகக் கிடந்தன.  அவள் கைகள் முழுக்க ரத்தம்.
ஒரு கோழியை வெட்டி, மீதியை விட்டிருந்தால் எப்படி இருக்குமோ அப்படி ரத்தச் சகதியோடு இருந்தது பாறை. என் பிறப்புறுப்பின் உணர்ச்சிமிக்க பாகங்கள் வெயிலில் காய்ந்துகொண்டிருந்தன.’’
-வாரிஸ் இப்படிச் சொன்னபோது, லாராவால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தேம்பித், தேம்பி அழ ஆரம்பித்தார்.
வாரிஸின் நெருங்கிய நண்பர்கள்கூட அறிந்திராத அந்த உண்மையை, அன்றுதான் உலகம் தெரிந்து கொண்டது.
வாரிஸ் டைரி! உலகின் முன்னணி ஆஃப்ரிக்க மாடல் அழகி. லாரா ஸிவ், உலகின் முன்னணி ஃபேஷன் பத்திரிகையான ‘மேரி க்ளேய்ர்’ நிருபர்.
வாரிஸ், தன் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறார்.
‘‘சோமாலியாவில், கரடுமுரடான ஒரு பாலைவனக் கிராமத்தில்தான் நான் பிறந்தேன். எங்களது நாடோடிக் குடும்பம். இங்குள்ள பாத்ரூமைவிட மிகச் சிறியது எங்கள் குடிசை. பசுமையே பார்த்திராத கண்கள் என்றாலும், எல்லா குழந்தைகளையும்போல நானும் சந்தோஷமாகத்தான் இருந்தேன். ஆடு மாடுகளை மேய்ப்பேன். வரிக்குதிரைகளோடு ஓடுவேன். ஒட்டகச்சிவிங்கிகளை துரத்துவேன். பாட்டுப் பாடுவேன்.
ம்ஹ்ம்… இந்த சந்தோஷமெல்லாம் கொஞ்ச நாட்களுக்குத்தான். எனக்கு மட்டுமில்லை. சோமாலியாவில் பிறந்த எல்லா பெண்களுக்குமே இப்படித்தான்.
ஆஃப்ரிக்காவைப் பொறுத்தவரை பெண்கள்தான் எல்லாமே. ஆண்களைவிட அவகள் கடினமாக உழைக்கிறார்கள். வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொள்கிறார்கள். ஆனால், என்ன செய்து என்ன? எந்த உரிமையும் அவர்களுக்கு கிடைப்பதில்லை. காலம் முழுக்க ஆண்களுக்கு அடிமையாக இருந்தே சாகவேண்டும்.
என் வாழ்க்கை ஐந்தோடு முடிந்தது.
எங்களது நாடோடிக் குடும்பமில்லையா? அங்கே, ‘கல்யாணமாகாதவள்’ என்கிற பேச்சுக்கே இடமில்லை. பாடையோ, பரதேசியோ! எவன் கையிலாவது எங்களை பிடித்துக் கொடுத்துவிடவேண்டும். அதுவும் கன்னித் தன்மையோடு. அதுதான் அவர்களின் வாழ்க்கை லட்சியம்.
பெண்களைப் பொறுத்தவரை, சோமாலியர்களின் ஞானம் ரொம்பவே வித்தியாசமானது. எல்லா கெட்ட விஷயங்களும் பெண்களின் தொடைகளுக்கு நடுவில் ஒளிந்து கிடப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள்.
இதற்காக அவர்கள் செய்கிற அக்கிரமம் இருக்கிறதே…
அப்போது, எனக்கு ஐந்து வயது இருக்கும். ஒரு சாயங்கால நேரம்.
அம்மா என்னிடம் வந்து, ‘‘உங்கப்பா, மருத்துவச்சியை பாக்கப் போயிருக்கார். அந்தப் பொம்பள எப்ப வேணாலும் வீட்டுக்கு வரலாம்’’ என்றார்.
அன்றைக்கு, என்றும் இல்லாத கவனிப்பு எனக்கு. போதுமான அளவுக்கு சாப்பிடக் கொடுத்தார்கள்.
‘‘பாலையும் தண்ணியையும் அதிகம் குடிச்சிறாதடி’’ -அம்மா அறிவுரை சொன்னாள்.
சாப்பிட்டு முடித்து, போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு சந்தோஷமாக படுத்தேன். முழிப்பு வந்தப்போது, வானம் இருட்டாக இருந்தது. மீண்டும் படுத்துவிட்டேன்.
‘‘வாரிஸ்’’
அம்மா திடீரென்று எழுப்பினாள்.
நாங்கள், தூரத்துல் தெரிந்த குன்றை நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.
‘‘இப்படி உக்காருவோம். அவ வருவா.’’ என்றார் அம்மா.
வானம் நன்கு விடிந்திருந்தபோது, ‘சர்க், சர்க்’ என்று செருப்பு சத்தம் கேட்டது. மருத்துவச்சி வந்துவிட்டிருந்தாள்.
படுக்கை மாதிரி இருந்த ஒரு பாறையைக் காட்டி, ‘‘அங்க போய் உக்காரு’ என்றாள். அம்மாதான் என்னை பாறை மேல் படுக்க வைத்தார்கள். அங்கே, பேச்சுக்கே இடமில்லை. என்னை படுக்க வைத்துவிட்டு.. அம்மா, என் தலைக்குப் பின்னால் உக்கார்ந்துகொண்டாள். என் தலையை இழுத்து அவள் மடியில் வைத்துக்கொண்டு, தன் கால்களை எடுத்து என் கைகள் மீது போட்டாள். நான் அம்மாவின் தொடைகளை இறுக்கிப் பிடித்துக்கொண்டேன்.
பிறகு ஒரு மரத்துண்டை எடுத்து என் வாயில் வைத்தாள்.
‘‘இறுக்கமா கடிச்சுக்க. அம்மாவ பாரு. எவ்ளோ தைரியமா இருக்கேன். அதுபோல நீயும் இருந்தா, சட்டுனு முடிஞ்சிடும்.’’
நான் கீழ குனிந்து என் கால்களுக்கு நடுவில் பார்த்தேன். பழைய கைப்பை ஒன்றை வைத்துக்கொண்டு அந்த மருத்துவச்சி உட்கார்ந்து கொண்டிருந்தாள். அவள் கண்ணில் அப்படியொரு பேய்த்தனம்.
பைக்குள், தன் விரல்களைவிட்டு அரக்கப் பரக்க எதையோ தேடினாள். இறுதியாக ஒரு ரேசர் பிளேடு வந்தது. ஏதோ விபரீதம் நடக்கப்போகிறது என்பது மட்டும் புரிந்தது.
பிளேடின் ஓரங்கள் காய்ந்துபோய், ரத்தக்கறை படிந்திருந்தன.
‘த்துப்..’
பிளேடின் மீது எச்சில் துப்பினாள் மருத்துவச்சி. அதை, தன் துணியில் துடைத்தாள். அவள் துடைத்துக்கொண்டிருக்கும்போதே, அம்மா தன் கைகளை எடுத்து என் கண்களை மூடினாள்.
நான், உலகமே இருண்டதுபோல் உணர்ந்தேன்.
அடுத்த நொடி…
‘பர்ர்க்’ என்று ஒரு சத்தம்.
படக்கூடாத இடத்தில் பிளேடு பட்டு, என் சதை கிழிவது நன்றாகத் தெரிந்தது. எந்த காலத்து பிளேடோ? துருபிடித்து, பற்களோடு இருந்திருக்கவேண்டும். நரநரவென்று மேற்கொண்டு முன்னும் பின்னுமாக இழுத்தாள் அந்தக் கிழவி.
‘அய்யோ…!’ -நரக வேதனை.
அசையக்கூடாது. அசைந்தால், வலி இன்னும் கொடூரமாகும். பற்களைக் கடித்துக்கொண்டு படுத்துக்கிடந்தேன். என் தொடைகள் நடுங்கின.
‘கடவுளே! இந்த நரகத்திலிருந்து என்னைக் காப்பாற்ற மாட்டாயா?’
ஒரு வழியாக அம்மா என் கண்களை விடுவித்தாள். வெளிச்சத்துக்கு பழகியதும் பார்க்கிறேன். அந்த கிழவியின் அருகில் அக்கேசியா மரத்தின் முட்கள். குவியல் குவியலாகக் கிடந்தன. அவள் கைகள் முழுக்க ரத்தம். அக்கேசியா முட்களைத்தான் ஒவ்வொன்றாக என் பிறப்புறுப்பில் குத்தியிருக்கிறாள். பிறகு கடினமாக வெள்ளை நூல் கொண்டு உறுப்பை தைத்திருக்கிறாள்.
சிறுநீர் கழிக்க ஒரே ஒரு துவாரம் வைத்துவிட்டு மீதி உறுப்பு மூடப்பட்டுவிட்டது. என் கன்னித் தன்மையும், ஒரு இனத்தில் கவுரவமும் காப்பாற்றப்பட்டுவிட்டது. இதற்கு, நான் செத்துப்போய் இருக்கலாம்.
தையல் முடிந்ததும் கிழவி போய்விட்டாள். நான் எழுந்திருக்க முயன்றேன். என்னால் அசையக்கூட முடியவில்லை. என் இரண்டு கால்களும் துணிப்பட்டையால சுற்றப்பட்டிருந்தன. அம்மா என்னை நகர்த்தியதும் பாறையைத் திரும்பிப் பார்த்தேன்.
ஒரு கோழியை வெட்டி, மீதியை விட்டிருந்தால் எப்படி இருக்குமோ அப்படி ரத்தச் சகதியோடு இருந்தது பாறை. என் பிறப்புறுப்பின் உணர்ச்சிமிக்க பாகங்கள் வெயிலில் காய்ந்துகொண்டிருந்தன.
காற்று, நெருப்பு மாதிரி வீசிக்கொண்டிருந்தது. என்னால் சித்திரவதையைத் தாங்க முடியவில்லை. ஒருவழியாக அம்மாவும் அக்காவும் சேர்ந்து பக்கத்தில் இருந்த மர நிழலுக்கு என்னை இழுத்துக்கொண்டு போனார்கள். அங்கே, சிறிய குடிசை ஒன்று வேயப்பட்டிருந்தது. காயம் குணமாகிறவரை அங்கேதான் இருந்தாகவேண்டும்.
முதன் முதலாக எனக்கு சிறுநீர் வெளியேறியது நன்றாக நினைவிருக்கிறது. அந்த இடத்தில் அமிலத்தை ஊற்றினால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது. உயிரே போய்விடும்படி எரிச்சல்… திகுதிகுவென தீப்பற்றி எரிந்தது பிறப்புறுப்பு. தையல் போடப்பட்டிருந்த பொத்தல்களின் வழியே தீக்குச்சி இறைத்தார்போல் சிறுநீர் வெளியேறியது.
மரண வேதனை.
இதனால், சிறுநீர் வந்துவிடுமோ என்கிற பயத்தில், தண்ணீர் குடிக்கவே பயந்தேன். பல நாட்கள் இப்படித்தான் வாழ்ந்தேன். திடீரென்று ஒருநாள் கிருமித்தொற்று ஏற்பட்டு கடுமையான காய்ச்சல் அடிக்க ஆரம்பித்தது. அம்மாதான் பார்த்துக்கொண்டாள். அந்த வயதில், எனக்கு செக்ஸ் என்றால் என்னவென்றே தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் தெரியும். ஒவ்வொரு தாயின் ஆசீர்வாதத்தோடுதான் இந்த சடங்கு நடைபெறுகிறது.
என் பெண்மை சிதைக்கப்பட்டது கொடூரமான விஷயம்தான். ஆனால், மற்ற பெண்களைக் காட்டிலும் நான் அதிர்ஷ்டசாலி என்றே சொல்லவேண்டும். பல சிறுமிகள் அதிர்ச்சியினாலும், ரத்தப்போக்கு, நோய்த்தொற்று காரணமாவும் இறந்து போய்விட, நான் மட்டும் உயிரோடு பிழைத்துக்கொண்டேன்.
நாட்கள் ஓடின.
நான் பதிமூன்று வயதை நெருங்கிக்கொண்டிருந்தேன். ஒரு நாள், மாலை நேரம்… ஆடுகளை அதன் பட்டியில் அடைத்துவிட்டு, வீட்டிற்குள் நுழைந்தேன்.
‘‘வாரிஸ்! இங்க வாம்மா’’ -அப்பா அன்போடு அழைத்தார்.
தன் மடிமேல் என்னை உட்காரவைத்துக்கொண்டார். வழக்கமாக அவர் குரலில் கடுமை இருக்கும்.
‘‘ஒண்ணு தெரியுமா? நீ ரொம்ப நல்ல பொண்ணு. ஆம்பளைங்களைவிட அதிகமா உழைக்கிற. மந்தையை ஒழுங்கா கவனிச்சுக்கிற. ஆனா… உன்னை பிரியப்போறதை நெனச்சா எனக்கு வருத்தமா இருக்கு’’
அப்பா, சம்பந்தமே இல்லாத வார்த்தைகளைப் பேசினார்.
‘அடடா! அக்கா மாதிரி நானும் ஒடிடப்போறேன்னு பயப்படுறாரோ!’
நான் அவரை கட்டிப்பிடித்துக்கொண்டு,
‘‘அப்பா. நீங்க நினைக்கிற மாதிரி நான் எங்கேயும் ஓடிப்போக மாட்டேன்’’ என்றேன்.
அவர் என் முகத்தை திருப்பி,
‘‘எனக்கு தெரியும். நீ என் பொண்ணு. அப்பா உனக்கு ஒரு மாப்பிள்ளை பாத்திருக்கேன்!’’ என்றார்.
எனக்கு தூக்கிவாரிப் போட்டது.
‘‘அப்பா. எனக்கு கல்யாணத்துல விருப்பமில்லை.’’
நான் கொஞ்சம் தைரியமாக வளர்ந்தவள். இப்போது பலவீனமாக உனர்ந்தேன்.
அடுத்த நாள் காலை. நான், பால் கறந்துகொண்டிருந்தேன்.
‘‘வாரிஸ்.. இங்க வா. இது நான் நீ…’’ அப்பா அழைத்தார்.
அவரோடு அவரைவிட மூத்த ஒருவன் உட்கார்ந்துகொண்டிருந்தான்.
அப்பா சொன்னதை நான் காதிலேயே வாங்கவில்லை. அவனும் அவன் மூஞ்சியும்! ஆட்டுக்கெடா மாதிரி தாடியை தொங்கப் போட்டுக்கொண்டு… 60 வயதிருக்கும் அவனுக்கு.
‘‘வாரிஸ்! வந்திருக்கிறவங்களுக்கு முதல்ல வணக்கம் சொல்லு.’’
‘‘வணக்கம்.’’
நான் எவ்வளோ முடியுமோ அவ்வளவு குழைந்து சொன்னேன். அந்தக் கிழட்டு ஓநாய், என்னைப் பார்த்து பல் இளித்துக்கொண்டே உட்கார்ந்திருந்தது. அவனை கொலைவெறியோடு முறைத்துவிட்டு, என் ஆப்பாவைப் பார்த்தேன். அப்பாவுக்கு புரிந்துவிட்டது.
சிரித்தவாறே… ‘‘சரி, சரி, போய் வேலையைப் பாரு’’ என்று சமாளித்தார்.
நான் மீண்டும் பால் கறக்க போய்விட்டேன்.
மறுநாள் காலையில் அப்பா கூப்பிட்டார்.
‘‘வாரிஸ். அவர்தான் நீ கட்டிக்கப்போற புருஷன்.’’
‘‘அப்பா! அந்தாள் ரொம்பக் கிழவனா இருக்கான்’’
‘‘அதுதாம்மா உனக்கு நல்லது. வயசான மனுஷன் இல்லையா! உன்னை விட்டு எங்கேயும் போகமாட்டார். உன்னை நல்லா பாத்துக்குவார். ஒண்ணு தெரியுமா? மாப்ள நமக்கு… அஞ்சு ஒட்டகம் குடுத்திருக்காரு’’ அப்பா, வாயை பிளந்துகொண்டு பெருமை பேசினார்.
அன்று முழுக்க நான் ஆட்டு மந்தையையே வெறித்துக்கொண்டிருந்தேன். மனதில் ஆயிரம் சிந்தனைகள். பாழும் பாலைவனத்தில் ஒரு கிழவனிடம் வாழ்க்கைப்படுவதை நினைத்துப் பார்த்தேன்.
‘த்தூ..
இந்த வாழ்க்கைக்கு, நாண்டுகிட்டு சாகலாம்.’ -ஒரு முடிவுக்கு வந்தேன்.
அன்று இரவு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது வீடு.
நான் அம்மாவை நெருங்கி,
‘‘எனக்கு இங்கிருக்கப் பிடிக்கல. நான் ஓடப்போறேன்.’’ என்றேன்.
‘‘அடிப்பாவி. எங்க ஓடுவ?’’
‘‘மொகாதிஷு. அக்கா வீட்டுக்கு.’’
‘‘முதல்ல போய் படு’’ -பல்லைக் கடித்தவாறு அம்மா சொன்னாள்.
நான் கையை தலைக்கு வைத்துக்கொண்டு தூங்கப் போய்விட்டேன். திடீரென்று கை முட்டியில் யாரோ தட்டினார்கள்.
அம்மாதான்.
‘‘அந்தாள் முழிச்சிக்கிறதுக்குள்ள எழுந்து ஓடு’’ -கிசுகிசுத்தாள்.
நான் சுற்றி முற்றி பார்க்கிறேன். எடுத்துச் செல்ல உணவோ, தண்ணீரோ, ஒட்டகப் பாலோ எதுவுமே இல்லை. நான் எழுந்து அவளை அணைத்துக்கொண்டேன். அந்த இருட்டிலும், அவள் முகத்தைப் பார்க்க முயற்சித்தேன். முடியவில்லை. தாரை தாரையாக கண்ணீர் மட்டுமே வழிந்தது.
‘‘எதுக்கும் கவலைப்படாத. நீ எங்க இருந்தாலும் நல்லா இருப்பே. அம்மாவை மட்டும் மறந்துடாதே’’ என்றாள்.
‘‘சத்தியமா’’
சொல்லிவிட்டு ஓட ஆரம்பித்தேன்.
பாலைவனம் முழுக்க ஒரே கும்மிருட்டு.
எவ்வளவு தூரம் ஓடினேன் என்பது தெரியவில்லை. ஆனால், கொஞ்சமும் ஈவிரக்கமில்லாத கரடு முரடான பாலைவனம் அது.
அந்தப் பயணம், முடிவில்லாத ஒன்றாக எல்லையற்று நீண்டிருந்தது. பசியும் தாகமும் என்னை சோர்வடையச் செய்தன. பொழுது விடிந்தபோது, என்னுடைய ஓட்டம் முற்றிலும் தளர்ந்துபோய் இருந்தது.
‘’வாரிஸ், வாரிஸ்’’
திடீரென்று என் தந்தையின் குரல் கேட்பதை உணர்ந்தேன். பயத்தில் என் உடல் நடுங்க ஆரம்பித்துவிட்டது. என்னை அவர் பிடித்துவிட்டால்?
இப்போது மீண்டும் ஆரம்பத்திலிருந்தே தொடங்கவேண்டும்.
நான் ஓடத் துவங்கினேன். பயம், என் ஓட்டத்தை வேகப்படுத்தியது. அதி பயங்கரமாக ஒரு துரத்தல் காட்சி அது. பல மணி நேரங்களுக்கு இது தொடர்ந்தது. சூரியன் மறையும்வரை நான் ஓடிக்கொண்டிருந்தேன். என் அட்ரினல் சுரப்பிகள் ஒழுங்காக வேலை செய்திருக்கவேண்டும்.
அப்பா தோற்றுவிட்டார்.
சூரியன் வேகமாக மறையத் தொடங்கியது.
ஆனால், இது நேற்றைய இரவைப்போல் இல்லை. பசி, வயிற்றை எரிக்க ஆரம்பித்தது. சோர்வும் மயக்கமும் ஒருசேர, அங்கிருந்த மரத்தடி ஒன்றில் அமர்ந்தேன். மெல்ல என் கால்களை எடுத்துப் பார்க்கிறேன்…
‘உஃஃப், உஃஃப்…’
வெப்பத்தில் கொப்பளித்து, பாறைகளில் மோதி, ரத்தச் சகதியாய் காட்சியளித்துக் கொண்டிருந்தது கால்கள்.
அப்படியே தூங்கிவிட்டேன்.
சூரியன் கண் திறந்திருக்கவேண்டும். என் கண்கள் கூச ஆரம்பித்தன. சுற்றி முற்றிப் பார்க்கிறேன். யாரும் இல்லை. இந்த இடம் பாதுகாப்பானதல்ல.
நடக்க ஆரம்பித்தேன். எத்தனை நாட்கள் நடந்தேன், எவ்வளவு தூரம் நடந்தேன் என்பதெல்லாம் தெரியாது. பசி, தாகம், பயம், வலி எல்லாம் சேர்ந்து என்னை வாட்டியது. எப்போதெல்லாம் இருள் சூழ்கிறதோ, அப்போதெல்லாம் பயணத்தை நிறுத்திவிடுவேன். வெயில் கடுமையாக இருந்தால், மரத்தின் கீழ் ஓய்வெடுப்பேன்.
அப்படித்தான் ஒருநாள் மரத்தடியில் படுத்துக்கிடந்தேன். அருகில் யாரோ குரட்டைவிடுவதுபோல் இருந்தது.
‘அப்பாவாக இருக்குமோ?!’
பதறியடித்து எழும்பினால், ‘கடவுளே..! அது ஒரு சிங்கம்.’
என்னை முறைத்தபடி இருந்தது. நான் எழுந்து ஓட முயற்சித்தேன். ஆனால், கொலை பட்டினி  என் கால்களை பலவீனமாக்கி இருந்தது. கொடூரமான ஆஃப்பிரிக்கச் சூரியனிடமிருந்ந்து எந்த மரம் எனக்கு அடைக்கலம் கொடுத்ததோ, அதன் கீழ் தலைக்குப்புற விழுந்தேன்.
நீண்ட நெடிய என் பாலைவனப் பயணம் முடிவுக்கு வரப்போகிறது.
இப்போது எனக்கு துளிகூட பயமில்லை. நான் சாகத் தயாராக இருக்கிறேன்.
‘‘வா! வந்து என்னைச் சாப்பிடு.’’ -சுரத்தில்லாத குரலில், நான் சிங்கத்தை அழைத்தேன்.
எச்சி ஊறும் நாக்கால் தன் உதடுகளை தடவியபடி, என்னை முன்னும் பின்னும் அது சுற்றி வந்தது. இதோ! ஒரே நொடியில் என்னைக் கவ்விக் கடித்து விழுங்கப்போகிறது. நான் கண்களை மூடிக் காத்திருந்தேன்.
‘ஹ.. ஹ…’ என்ன நினைத்ததோ, சிங்கம் பின்வாங்கிவிட்டது.
சந்தேகமே இல்லை. என்னிடம் சாப்பிடத் தகுந்த அளவுக்கு சதை இல்லை. நான் எதற்கும் பயனில்லாதவள்.
அப்படியானால்?
கடவுளின் திட்டம் வேறாக இருந்திருக்கவேண்டும். எதற்காகவோ என்னை விட்டு வைத்திருக்கிறார்.
‘அது என்னவாக இருக்கும்?’
நம்பிக்கையுடன் மீண்டும் நடக்க ஆரம்பித்தேன்.
வீட்டை விட்டு ஓடி வரும் முன்பு, குடும்பம் ஒன்றுதான் எனக்கு வாழ்க்கை. எங்கள் தினசரி வாழ்க்கை, ஒட்டகத்தின் கையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அங்கே தண்ணீர் கிடையாது. காலை எழுந்தாலும் சரி, இரவு படுத்தாலும் சரி, ஒட்டகப்பால்தான் நாங்கள் உயிரோடு இருக்கக் காரணம். நான் தூங்கி எழுந்ததும் சுமார் 60, 70 செம்மறி ஆடுகளை ஓட்டிக்கொண்டு பாலைவனத்தை நோக்கிக் கிளம்பிவிடுவேன். வழி நெடுக பாடிக்கொண்டே செல்வேன். ஆடுகளை வழிநடத்த ஒரே ஒரு குச்சி வைத்திருப்பேன். ஆடுகள் மேய்ச்சலில் இருக்கும்போது ஏராளமான வேட்டை விலங்குகளைப் பார்த்திருக்கிறேன். வழி தெரியாமல் சிதறும் ஆட்டுக்குட்டிகள் மீது ஹெய்னாக்கள் பதுங்கிச் சென்று பாயும். சிங்கங்கள் வந்து போகும்.
வீடு வந்ததும், இரவில் நட்சத்திரங்களுக்கு கீழ் குழந்தைகளெல்லாம் ஒன்றாகப் படுப்போம். எங்களுக்கு பாதுகாப்பாக அப்பா இருப்பார்.
அப்பா, ஆறடி உயரத்தில் அம்மாவைவிட கொஞ்சம் வெள்ளையாக, ரொம்பவும் அழகாக இருப்பார். அம்மாவும் அழகில் குறைந்தவள் இல்லை. கருப்பாக இருந்தாலும் கரும் பளிங்கு சிற்பம்போல் இருப்பார். தோல் மிருதுவாகவும் மினுமினுப்பாகவும் இருக்கும். ஆனால், ரொம்ப அமைதி. பேச ஆரம்பித்தால், குலுங்கக் குலுங்க சிரிக்க வைத்துவிடுவாள்.
மொகாதிஷுவில் செல்வாக்குமிக்க வசதியான குடும்பத்தில் பிறந்தவள் அம்மா. மாறாக, எப்போதும் பாலைவனத்தில் அலைந்து திரியக்கூடிய நாடோடி, என் அப்பா. அம்மாவை கல்யாணம் செய்துகொள்ள அவர் விருப்பம் தெரிவித்தபோது, ‘வாய்ப்பே இல்லை’ என்று என் பாட்டி விரட்டிவிட்டாராம். எப்படி இருந்தால் என்ன? அம்மாவுக்கு 16 வயதாகும்போது, அவரும் வீட்டைவிட்டு ஓடி வந்துதான் அப்பாவை கல்யாணம் செய்திருக்கிறார்.
அம்மா எப்போதும் என்னை ‘அவ்டஹொல்’ என்றுதான் கூப்பிடுவார். அவ்டஹொல் என்றால், ‘சின்ன வாய்’ என்று அர்த்தம். ஆனால், ‘வாரிஸ்’ என்பதுதான் என் உண்மையான பெயர். வாரிஸ் என்றால் ‘பாலைவனப் பூ’ என்று அர்த்தம்.
நான் ஓடி வந்த கதையை விட்டுவிட்டேனே! சுமார் 300 மைகள் கடந்து, புண்ணாகிப்போன கால்களுடன் ஒரு வழியாக நான் மொகாதிஷுவுக்கு வந்து சேர்ந்திருந்தேன். அது, இந்தியப் பெருங்கடலில் ஒரு அழகான நகரம். அந்த நகரத்தை சுற்றி நிறைய பனைமரங்களும் கலர் கலரான பூச்செடிகளும் இருந்தன. அங்கிருந்த வீடுகளும் கொள்ளை அழகு. அவற்றில் பெரும்பாலானவை இத்தாலியர்களால் கட்டப்பட்டிருந்தன. மொகாதிஷு ஒரு காலத்தில் இத்தாலியர்களின் தலைநகரமாக இருந்ததே இதற்குக் காரணம். ஒரு கொக்கு மாதிரி கட்டடங்களை எட்டி, எட்டி பார்த்துக்கொண்டு நடந்தேன்.
ஒரு மார்கெட் வந்தது. அங்கிருந்த பெண்களிடன் ‘எங்க அக்கா அமென் தெரியுமா?’ என்று விசாரித்தேன்.
‘‘உன்னை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே!’’ -யோசித்த ஒரு பெண்மணி, தன் மகனை அழைத்து,
‘‘இவளைக் கொண்டுபோய் அமென் வீட்டில் விடு’’ என்றாள்.
நான் அக்கா வீட்டுக்குள் நுழைந்தபோது, அவள் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தாள்.
நல்லவேளையாக அவளுக்கு நல்லதொரு கணவன் கிடைத்திருந்தான். அவர்கள் தமது முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருந்தார்கள். நான் வீட்டு வேலைகள் முழுவதையும் பார்த்துக்கொண்டேன். கொஞ்ச நாள் கழித்து அக்காவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. நான்தான் அவளையும் பார்த்துக்கொண்டேன். அதன் பிறகு அக்காவுக்கும் எனக்கும் ஒத்துப்போகவில்லை. ஒரு முதலாளிபோல் என்னிடம் நடந்துகொண்டாள்.
மொகாதிஷுவில் எனக்கு வேறு சில சொந்தங்களும் இருந்தன.
நான் என் சித்தி வீட்டுக்குப் போய், ‘‘கொஞ்ச நாள் இங்கேயே தங்கிக்கவா?’’ என்றேன்.
எதிர்பார்த்ததைவிட அவர்கள் அன்பானவர்களாக இருந்தார்கள்.
‘தாராளமா தங்கிக்கோ. உனக்கு இங்க ஒரு பிரண்டுகூட இருக்கா.’ என்றார்கள்.
வழக்கம்போல், அங்கேயும் நான்தான் வீட்டு வேலைகளை கவனித்துக்கொண்டேன்.
அம்மாவை தனியாக விட்டுவிட்டு வந்தது எனக்கு வருத்தமாக இருந்தது. பாவம்! எல்லா வேலைகளையும் அவள் ஒருத்திதான் செய்தாக வேண்டும்.
‘நான் ஏதாவது செய்தாகவேண்டும். பணம் சம்பாதித்து அவளுக்கு அனுப்பவேண்டும்.’ என்று தீர்மானித்தேன்.
பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால், வேலைக்குப் போகவேண்டுமே. தேடினேன். ஒரு இடத்தில் சித்தாள் வேலை கிடைத்தது. ரொம்பவும் கடினமான வேலை.  எல்லோரும் நான், ஓடிப்போய்விடுவேன் என்றுதான் நினைத்தார்கள். ஆனால், கடுமையாக உழைத்தேன். 60 டாலர்கள் கிடைத்தது.
நாட்கள் ஓடியது…
ஒரு நாள் சித்தி வீட்டில், வீட்டு வேலைகளை செய்துகொண்டிருந்தேன். ஊரிலிருந்து முகம்மது சித்தப்பா வந்திருந்தார். என் இன்னொரு சித்தியின் வீட்டுக்காரர்.
‘‘அடுத்த நாலு வருஷமும் லண்டன்லதான் இருக்கப்போறேன். வீட்டு வேலைக்கு ஆள் வேணும். யாராவது நல்ல பொண்ணா இருந்தா சொல்லு’’ -முகம்மது சித்தப்பா, சித்தியிடம் பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது. அவர், லண்டனில் சோமாலியத் தூதரகத்தில் வேலை பார்ப்பவர்.
நான், மெல்ல என் சித்தியை கூப்பிட்டு,
‘‘நான் வேணும்னா, அவர் வீட்டுக்கு போறேனே.. ப்ளீஸ்’’ என்று கெஞ்சினேன்.
சித்தி, ஒரு நிமிஷம் யோசித்துவிட்டு, ‘‘ஏன் நீங்க வாரிஸை கூட்டிட்டுப் போகக்கூடாது. இவ ரொம்ப சுத்தமா வேலை செய்வா.’’ என்றார்.
சித்தப்பா என்னை உற்றுப் பார்த்தார்.
‘‘ஓகே. நாளைக்கு மதியம் ரெடியா இரு. நாம லண்டன் கிளம்பறோம்.’’
மறுநாள், என்னுடைய பாஸ்போர்ட் வந்தது. எனக்கு பயங்கர ஆச்சர்யம்! முதன் முதலாக என்னுடைய பெயர் அச்சில் வார்க்கப்பட்டிருந்தது.
ஒரு வழியாக லண்டன் வந்தாகிவிட்டது. ஆடம்பரமான மாளிகைகள், வெள்ளை வெளேர் மனிதர்கள், விழுகின்ற வென் பனி என முற்றிலும் புதிதாக, முழுவதும் அந்நியமாக இருந்தது லண்டன். சித்தப்பாவுக்கும் அழகான ஒரு மாளிகை ஒதுக்கப்பட்டிருந்தது.
மரியம் சித்தி, என்னை முகம் மலர வரவேற்றார். அவரை ஓடிச் சென்று கட்டிப்பிடிக்க எண்ணினேன். ஆனால், அவரது நவநாகரீக உடை என்னை அச்சம் கொள்ளச் செய்தது. சித்தி எனக்கு பெட்ரூமை திறந்து காட்டினாள். ‘அம்மாடி!’ அவ்வளவு பெரிய படுக்கை அறையை நான் கனவிலும் கண்டதில்லை. என் வீட்டைவிட பெரியதாக இருந்தது. சொகுசான மெத்தை. அப்படியொரு சொகுசை என் வாழ்நாளில் அனுபவித்ததே இல்லை. அன்றிரவு சொர்க்கத்தில் உறங்கினேன்.
அடுத்த நாள்…
பெருக்குவது, துடைப்பது, துவைப்பது, கழுவுவது என்று வழக்கம்போல் என் வேலைகள் தொடர்ந்தன. எப்படி சமைக்கவேண்டும் என்பதை சித்தி எனக்கு கற்றுக்கொடுத்தாள்.
எனக்கு 16 வயது இருக்கும்போது, முகம்மது சித்தப்பாவின் சகோதரி இறந்துபோய்விட, அவளது மகள் எங்களோடு வந்துவிட்டாள். நான்தான் அவளை கான்வென்ட்டுக்கு அழைத்துச் செல்வேன். ஒருநாள் ஸ்கூல் வாசலில் வைத்து ஒரு ஆள், என்னை முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கு சுமார் 40 வயசு இருக்கும். இப்படி முறைத்துப் பார்ப்பது குறித்து அவர் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளவில்லை.
நான், குழந்தையை ஸ்கூலில் விட்டுட்டு திரும்புகிறேன், திடீரென்று அந்த ஆள் என் பக்கத்தில் நிற்கிறார். எனக்கோ ஆங்கிலம் தெரியாது. அவர் என்ன பேசுகிறார் என்பதும் புரியவில்லை. நான் பயந்துகொண்டு வீட்டுக்கு வந்துட்டேன். அந்த ஆளின் மகளும் அதே ஸ்கூலில்தான் படித்தாள்.
பிறகு, எப்போதெல்லாம் என்னை பார்க்கிறாரோ, அப்போதெல்லாம் சிரித்து வைப்பார். ஒரு நாள், தன் விசிட்டிங் கார்டை என்னிடம் நீட்டினார். நான் வேண்டா வெறுப்பாக வாங்கிக்கொண்டேன்.
வீட்டுக்கு வந்ததும், என் சித்திப் பெண்ணிடம் காட்டி, ‘‘என்னதிது?’’ என்றேன்.
‘‘இதுவா? இந்த ஆள் ஒரு போட்டோகிராபராம்’’
‘போட்டோகிராபருக்கு நம்மகிட்ட என்ன வேலை?’
ம்ம்… நான் அதை மறந்துவிட்டேன்.
இதற்கிடையே சோமாலியாவில் உள்நாட்டுக் கலவரம் தீவிரமடைந்திருந்தது. பலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சோமாலிய அரசாங்கம் சொல்லிவிட்டது. சித்தப்பா, குடும்பத்துடன் மறுநாளே ஊருக்குத் திரும்பியாகவேண்டும். இதை நினைக்கும்போதே, எனக்கு அடி வயிறு கலங்கியது.
‘‘சித்தப்பா! என் பாஸ்போர்ட்டை எங்கேயோ தொலைச்சிட்டேன்’’ -நான் வேண்டுமென்றே பொய் சொன்னேன்.
பயணத்துக்கான எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு. திடீர்னு இப்படிச் சொன்னா என்ன அர்த்தம்?’’ சித்தப்பா கோபப்பட்டார்.
‘‘பரவாயில்லை சித்தப்பா. நீங்க கிளம்புங்க. நான் எப்படியாவது சமாளிச்சுக்கிறேன்’’
என்னால் நம்ப முடியவில்லை. அதிர்ஷ்டவசமாக சித்தப்பா என்னை விட்டுவிட்டுக் கிளம்பினார்.
‘யாருமற்ற அநாதையாய், லண்டனை எதிர்கொள்ளவேண்டும்’
எனக்குள் பயம் பரவத் தொடங்கியது.
அடுத்த நாள் கடை வீதி ஒன்றில் ‘ஹல்வு’வைச் சந்தித்தேன். உயரமாக, கவர்ச்சியாக இருந்தாள்.
‘‘என்ன பண்ற வாரிஸ். எப்படி இருக்கே?’’ என்றாள் சோமாலியில்.
நாங்கள் முன்பின் அறிமுகமானவர்கள் இல்லை.
‘‘என்னத்தைச் சொல்ல! என் சித்தப்பா தூதரக அதிகாரியா வேலை பார்த்தார். இத்தனை நாள் அவரோடுதான் இருந்தேன். இப்போ அவர் வேலை முடிஞ்சு சோமாலியா போய்ட்டார். எங்க தங்கறது, எப்படி சாப்பிடுறதுன்னு இப்பவரை தெரியலை’’
ஹல்வு, என்னை அமைதியாகப் பார்த்தாள்.
‘‘ஒய்.எம்.சி.ஏ-ல எனக்கு ஒரு ரூம் இருக்கு. இன்னிக்கு ராத்திரி அங்கேயே தங்கிக்கோ’’
இப்போது, நானும் ஹல்வுவும் நெருங்கிய நண்பர்கள் ஆகியிருந்தோம்.
‘‘மெக் டொனால்டில் வேலைக்குப் போறியா?’’ -ஹல்வு கேட்டாள்.
‘‘சான்ஸே இல்லை. எனக்கு இங்கிலிஷ் தெரியாது. என்கிட்ட வொர்க் பெர்மிட்டும் இல்லை’’
ஹல்வு என்னை விடவில்லை. என்னை மெக்டொனால்டில் வேலைக்குச் சேர்த்துவிட்டாள். பாத்திரங்களைக் கழுவுவது, தரையைத் துடைப்பது, குப்பைகளை அள்ளுவதுதான் என் வேலை.
வார இறுதியில், ஹல்வு என்னை டிஸ்கொதேவுக்கு அழைத்துச் சென்றாள். அதுதான், கட்டுப்பட்டியான ஆஃப்ரிக்க வளர்ப்பிலிருந்து நான் வெளியேற உதவியது. கருப்பு, வெள்ளை, ஆண், பெண் எல்லோரிடமும் பேசினேன். ஜஸ்ட் பேசினேன். அவ்வளவுதான். இந்தப் புதிய உலகில் எப்படி வாழ்வது என்பதை ஹல்வு மூலமாக கற்றுக்கொண்டேன்.
இனிதான், என் வாழ்க்கையின் இரண்டாவது அத்தியாயம் ஆரம்பம்.
‘‘இந்த ஆளுக்கு என்னதான் வேணுமாம்?’’ ஓய்வு நேரம் ஒன்றில், போட்டோகிராபரின் விசிட்டிங் கார்டை காட்டி ஹல்வுவிடம் கேட்டேன்.
‘‘அதை அவர்கிட்டயே கேளு. போனைப் போடு’’
‘‘நான் பேசுறது மொக்க இங்கிலீஷ். நீயே பேசு’’
‘‘‘மைக் கோஸ்.’ அவர்தான் அந்த அன்புக்குரிய போட்டோகிராபர். அன்று, மைக்கின் ஸ்டுடியோவுக்குள் நுழைந்தபோது, நான் வேறொரு உலகத்தில் விழுந்ததுபோல் உணர்ந்தேன். சுவர் முழுக்க அழகழகான பெண்கள் தொங்கிக்கொண்டிருந்தார்கள்.
மைக் என்னிடம், ‘‘யூ ஹேவ் தெ மோஸ்ட் பியூட்டிஃபுல் ப்ரொஃபைல். நான் உன்னை போட்டோ எடுக்க விரும்புகிறேன்’’ என்றார்.
‘‘இதைப் போலவா? இந்த பொண்களைப் போலவா?’’
‘‘ஆமாம்’’
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
‘‘எவ்ளோ பணம் தருவீங்க?’’
‘‘ஹ.. ஹ..! வா, இப்படி வந்து நில்லு’’ மைக், தன் காமிராவை கையில் எடுத்தார்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு… ஸ்பான்ச், பிரஷ், க்ரீம், பெயின்ட், பவுடர். எல்லாம் என் முகத்தில் விளையாட ஆரம்பித்தன. எனக்கு மேக்கப் போட்ட பெண், சற்று பின் நகர்ந்து சென்று என்னை பார்த்தாள்.
‘‘ஒகே. போய் கண்ணாடியைப் பார்’’
‘‘வாவ்…! நானா இது?’’ பட்டுப்போன்ற மேனி, பளபளக்கும் கன்னம்… அங்கிருந்த வெளிச்சத்தில் நான் தங்கம்போல மின்னினேன்.
‘‘ஓகே வாரிஸ். லிப்ஸை இப்படி வச்சிக்கோ, இங்க பார்… க்ளிக், க்ளீக், க்ளிக்…’’ -மைக்கின் விரல்கள் க்ளிக்கொண்டே இருந்தன.
வேலைக்கார வாரிஸ், இப்படியாகத்தான் ஒரு மாடல் அழகியாக மாறினாள்.
சில நாட்களுக்குப் பிறகு… ஒரு மாடலிங் ஏஜென்சி என்னை அழைத்திருந்தது. அழகழகான பெண்கள் அங்கே கூடியிருந்தனர்.
‘‘இங்கே என்ன நடக்குது?’’
‘‘பைரேலி காலண்டர்’’
‘‘ஓ… சூப்பர். அப்டினா, என்ன?’’
போட்டோகிராபர் ‘டெரன்ஸ் டொனோவன்’தான் கடந்த ஆண்டுக்கான பைரேலி காலண்டரை என் முன் எடுத்துப் போட்டார்.
‘ஸ்டன்னிங் பியூட்டிஃபுல்.’
ஒவ்வொரு பக்கத்திலும், துக்கிச் சாப்பிடக்கூடிய அழகிகள் ஆக்கிரமித்திருந்தார்கள்.
‘‘இந்த வருடம், வித்தியாசமா ஒரு ஆஃப்ரிக்கன் மாடலை வைத்துச் செய்யப்போகிறோம். நீதான் அந்த மாடல்’’ –டெரன்ஸ், ஒவ்வொன்றாக என்னிடம் விளக்க ஆரம்பித்தார்.
ஷூட்டிங் முடிந்தபோது என் படம் ‘அட்டை’க்குத் தேர்வாகி இருந்தது.
ஒரு மாடலாக, நான் வேகவேகமாக வளர்ந்தேன். பாரிஸ், மிலன், நியூயார்க் என்று பறந்தேன். பணம், மழைபோல் கொட்ட ஆரம்பித்தது. மிகப்பெரிய கமர்ஷியல் விளம்பரங்கள் தேடி வந்தன. ‘ரெவ்லான்’ விளம்பரத்தில் சின்டி கிராவ்ஃபோர்டு, கிளாடியா ஸ்கிஃபர், லாரன் ஹுட்டன் ஆகியோருடன் காட்சியளித்தேன். எல்லீ, கிளாமர், இத்தாலியன் வாக்ய் மற்றும் பிரிட்டிஷ், அமெரிக்கன் வாக்ய் போன்ற உலகின் முன்னணி ஃபேஷன் பத்திரிகைகளில் இடம் பிடித்தேன். ஜேம்ஸ்பான்ட் படத்தில்கூட நடித்தேன்.
ஆனால், வெற்றிகரமான இந்த வாழ்க்கைப் பயணத்தில், என் பழைய தழும்புகள் எதுவும் மறையவில்லை. எல்லாம் அப்படியே இருந்தன. அந்த சின்னஞ்சிறிய துவாரம் வழியே ஒரு சொட்டு யூரின் மட்டுமே வெளியேறியது. ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும்போதும் எனக்கு பத்துப் பதினைத்து நிமிடங்கள் தேவைப்பட்டது. மாதவிடாய் நேரம் என்றால், இந்தக் கொடுமை பலமடங்கு வீரியத்தோடு இருக்கும். படுக்கைக்குச் செல்லும் ஒவ்வொரு இரவும், ‘தூக்கத்தின்போதே செத்துவிட்டால் தேவலாம்’ என்று நினைப்பேன்.
முன்பு ஒருநாள் சித்தப்பா வீட்டில் இருந்தபோதே, மாதவிடாய் நேரத்தில் மயங்கி விழுந்துவிட்டேன். சித்திதான் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள். ஆனால், உண்மைக் காரணம் என்னவென்பதை நான் டாக்டரிடம் சொல்லவில்லை.
‘‘உதிரப்போக்கை நிறுத்தணும்னா, கர்ப்பத்தடை மாத்திரை ஒண்ணுதான் தீர்வு. வேற வழியில்லை’’ என்றார் டாக்டர்.
எல்லா டாக்டர்களும் இதையேதான் சொன்னார்கள்.
இந்த மாத்திரைகள் எனக்குள் வேறு மாதிரியான விளைவுகளை உண்டு பண்ணியது. என் மார்பகங்கள் பெரிதாகத் தொடங்கின. உடல் எடை கூடியது.
‘இந்த வேதனைக்கு, உதிரப்போக்கையே தாங்கிக்கலாம்’ என்று தோன்றியதால், மாத்திரைகளை நிறுத்தினேன்.
மீண்டும் வலி.
‘‘சித்தி! ஸ்பெஷல் டாக்டரைப் பார்த்தா நல்லா இருக்கும்’’
‘‘பார்த்து? என்னன்னு அவர்கிட்ட சொல்வே?’’
சித்தியின் கேள்விக்கு என்ன அர்த்தம் என்பது தெரியும்.
‘ஆஃப்ரிக்க பழங்குடிப் பெண், தன் அந்தரங்கத்தைப் வெள்ளைக்காரனிடம் காட்டுவதா? எவ்வளவு பெரிய குற்றம்!’
காலங்கள் உருண்டோடின. இப்போது நான் சொந்தக் காலில் நிற்கிறேன். ஒய்.எம்.சி.ஏ தோழியை அழைத்துக்கொண்டு டாக்டர் ‘மேக்ரே’வை சந்தித்தேன்.
‘‘டாக்டர். நான் சோமாலியாவில் இருந்து வர்றேன். எனக்கு…’’ அடுத்த வாக்கியத்தை முடிக்கவில்லை.
‘‘இட்ஸ் ஓகே. சரி பண்ணிடலாம். போய் ட்ரெஸ்ஸை மாத்திட்டு வா’’ என்றார்.
நர்ஸை கூப்பிட்டு, ‘‘இங்க, சோமாலி தெரிஞ்ச லேடி இருக்காங்கல்ல. அவங்களையும் கூட்டிட்டு வாங்க.’’ என்றார்.
ஆனால், வந்தது லேடி இல்லை ஆம்பிளை.
அவன் முகத்தில் மகிழ்ச்சியே இல்லை.
‘‘உண்மையிலேயே உனக்கு விருப்பம்னா, இவங்க திறந்து விடுவாங்க. ஆனா, இது நம்ம பன்பாட்டுக்கே விரோதம். இது உங்க வீட்டுக்கு தெரியுமா?’’ என்றான்.
‘‘தெரியாது’’
‘‘முதல்ல அவங்ககிட்ட பேசு.’’ -அவன் ஒரு அக்மார்க் சோமாலியன். போய்விட்டான்.
கடந்த வருடமே நான் இந்த அறுவை சிகிச்சையை செய்திருக்கவேண்டும். ஆனால், அப்போது சில நடைமுறை சிக்கல்கள் இருந்தன. டாக்டர். மேக்ரே மிகவும் நல்லவர். அவருக்கு நான் எப்போதுமே கடமைப்பட்டிருக்கிறேன்.
‘‘நீ மட்டும் இல்லை வாரிஸ். குடும்பத்துக்குத் தெரியாமல் எகிப்திலிருந்தும், சூடானிலிருந்தும், சோமாலியாவிலிருந்து ஏராளமான பெண்கள் இங்கு வருகிறார்கள். பாவம், சில பெண்கள் கற்பமாகக்கூட இருப்பார்கள். என்னால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு சிறப்பாக செய்கிறேன். நீ கவலைப்பட வேண்டாம்’’ என்றார்.
சிகிச்சை முடிந்து மூன்று வாரங்கள் ஆகியிருக்கும்.
ஒருநாள், டாய்லெட்டில் உட்கார்ந்து நான் சிறுநீர் கழித்தபோது…
‘உஷ்ஷ்ஷ்ஷ்…’
ஆஹா! என்ன ஒரு அற்புதம். நான் அடைந்த மகிழ்ச்சியை, அந்த சுதந்திரத்தை… வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இந்த உலகில் இதைவிட மகிழ்ச்சியான ஒரு அனுபவம் இருக்கவே முடியாது.
1995-ம் ஆண்டு. என்னுடைய வாழ்க்கையை ஆவணமாக்குவதென்று பி.பி.சி தீர்மானித்தது.
‘‘நல்லது. ஆனால், சோமாலியாவுக்குச் சென்றதும் என் அம்மாவைக் கண்டுபிடிக்க நீங்கள் உதவவேண்டும்’’ -டைரக்டர் கெரி பொமிராயிடம் கோரிக்கை வைத்தேன். அவர் ஒப்புக்கொண்டார்.
என் குடும்பம் நகர்ந்ததாக சந்தேகிக்கப்படும் பல்வேறு இடங்களில் பி.பி.சி குழுவினர் தேடத் துவங்கினர்.
சிலர், ‘நான்தான் உன் அம்மா’ என்று வந்தனர்.
‘‘உனக்கும் உன் குடும்பத்துக்கும் மட்டுமே தெரிந்த ரகசியங்கள்னு சிலது இருக்கும். அது என்னன்னு யோசி’’ என்றார் கெரி.
‘‘ஓ… ஆமால்ல! என்னை ‘அவ்டஹொல்’னு எங்க அம்மா கூப்பிடுவாங்க’’
‘‘இந்தப் பேரை அவங்களுக்கு ஞாபகம் இருக்குமா?’’
‘‘நிச்சயமா’’
இப்போது அவ்டஹொல் என்கிற வார்த்தை சீக்ரட் பாஸ்வேர்டாக கொண்டு செல்லப்பட்டது. ஒருநாள் பி.பி.சி ஊழியர்கள் என்னை அழைத்து, ‘‘அநேகமா உங்க அம்மாவை கண்டுபிடிச்சிட்டோம்னு நினைக்கிறோம். அந்தம்மாவுக்கு அவ்டஹோல் என்கிற வார்த்தை மறந்துபோச்சு. ஆனா, தனக்கு வாரிஸ்னு ஒரு பொண்ணு இருந்ததாகவும், அவ லண்டன் தூதரகத்துல வேலை பார்த்தாகவும் சொல்றாங்க’’ என்றனர்.
நாங்கள் உடனடியாக எத்தியோப்பியா பறந்தோம். அங்கிருந்து சிறியரக விமானம் ஒன்றில், ‘கலாடி’க்கு பயணம். எத்தியோப்பிய&சோமாலிய எல்லை கிராமமான அங்குதான், உள்நாட்டுப் போரிலிருந்து உயிர்காத்துக்கொள்ள அகதிகள் முகாம் அமைத்து இருந்தனர்.
கடைசியில் அது என் அம்மாவே இல்லை.
ஆனால், நாங்கள் முயற்சியை கைவிடவில்லை. அந்த கிராமத்தை அங்குலம் அங்குலமாக அலசினோம்.  அப்போதுதான் அந்த வயதான மனிதர் வந்தார்.
‘‘என்னை தெரியுதா? நான்தான் இஸ்மாயில். உங்க அப்பாவோட நெருங்கிய நண்பர். எனக்கு காஸ் வாங்க பணம் தந்தா, நான் உங்கம்மாவை கண்டுபிடிச்சித் தர்றேன்’’ என்றார்.
பி.பி.சி குழு ஒப்புக்கொண்டது.
மூன்று நாட்கள் ஆகிவிட்டது. என் அம்மா வருவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
அடுத்த நாள் காலை, ஜெரி என்னிடம் வந்து,
‘‘நீ நம்பப்போறதில்லை. அந்த ஆள் வந்துட்டார். அது உங்க அம்மாதான்’’ என்றார்.  நான் அவள் முகத்தைக்கூட பார்க்கவில்லை. முக்காடு அணிந்தபடி ட்ரக்கில் இருந்து இறங்கும்போதே தெரிந்துவிட்டது.
‘‘அம்மா…’’
ஓடிச் சென்று அவளை அணைத்துக் கொண்டேன்.
ட்ரக் வந்தபோது அப்பா தண்ணீர் தேடச் சென்றுவிட்டாராம். ஆனால், என் சின்னத் தம்பி அலி வந்திருந்தான். நானும் அம்மாவும் பல விஷயங்களைப் பேசினோம்.
‘‘அப்பாவுக்கு ரொம்ப வயசாயிடுச்சி. கண் பார்வையும் சரியா தெரியல. அவருக்கு ஒரு கண்ணாடி வாங்கித் தந்தா நல்லா இருக்கும்’’ என்றார் அம்மா.
திடீரென்று, அலி என்னைப் பிடித்துக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டான்.
‘‘டேய்! நான் சின்னக் குழந்தை இல்லை. எனக்கு கல்யாணம் ஆகப்போவுது. விட்றா!’’ என்றேன்.
‘‘என்னது கல்யாணமா? உனக்கு என்ன வயசு?’’
‘‘அதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா, கல்யாணம் பண்ற வயசு’’
ஒரு வழியாக அலி, சமாதானம் ஆனான்.
‘‘எனக்கும் பேரப் பிள்ளையை பார்க்கனும்னு ஆசையா இருக்கு’’ என்றார் அம்மா.
அன்றிரவு நானும் அலியும் நட்சத்திரங்களைப் பார்த்தபடி குடிசைக்கு வெளியே தூங்கினோம். அவன் என்னிடம் நிறைய கேள்விகள் கேட்டான். எனக்கு பழைய ஞாபகங்கள் ஒவ்வொன்றாகத் திரும்பின. நான், மிகுந்த சந்தோஷமாகவும் மிக அமைதியாகவும் உணர்ந்தேன்.
மறுநாள் காலை… விமானம் புறப்படத் தயாராக இருந்தது.
‘‘அம்மா! போதுமான அளவுக்கு நீ உழைச்சிட்டே. இனிமே நீ ஓய்வெடுத்தாகணும். கிளம்பு என்கூட.’’ என்றேன்.
‘‘இல்லை. உங்க அப்பா இங்கதான் இருக்கார். அவரை நான்தான் பாத்துக்கணும். அவர் இருக்கிற இடம்தான் எனக்கு வீடு, நாடு எல்லாமே. முடிஞ்சா ஒண்ணு செய். சோமாலியாவுல எங்களுக்கு ஒரு வீடு வாங்கிக்கொடு. அது போதும்.’’
நான் அவளை இறுக அணைத்துக்கொண்டேன்.
‘‘அம்மா! நான் உன்னை உயிருக்கு உயிராக நேசிக்கிறேன். உன்னைப் பார்க்கத்தான் இங்கு வந்தேன். இதை மறந்துடாதே.’’
இப்போது நான் லண்டன் திரும்பிவிட்டேன். ஆனால், வாழ்க்கையில் நான் பட்ட துன்பங்கள் யாருக்கும் தெரியாமல் மறைந்தே இருந்தது. உலகத்தைப் பொறுத்த அளவில் நான், பிரபலமான ஒரு மாடல்.
மாதங்கள் உருண்டன. ஆண்டு, 1997. உலகின் முன்னணி ஃபேஷன் பத்திரிகையான ‘மேரி க்ளேய்ர்’ உலகின் முன்னணி மாடல் அழகியான வாரிஸை பேட்டி காண வந்தது.
‘‘சொல்லுங்கள். எப்போது உங்கள் போட்டோகிராபரை சந்தித்தீர்கள்? அதுதான் உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனை இல்லையா?’’
‘‘இல்லை’’
‘‘என்ன?’’
‘‘ஆமாம். நீங்கள் நினைப்பதல்ல என் வாழ்க்கை. என்னிடம் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று தெரியவில்லை லாரா. ஆனால், மாடலிங் பற்றி ஏற்கெனவே நீங்கள் எழுதியிருப்பீர்கள். நான் சொல்ல நினைப்பது அதுவல்ல. எனக்கு சத்தியம் செய்து கொடுத்தால், நான் உங்களுக்கு உண்மைக் கதையைச் சொல்கிறேன்.’’
ரிப்போர்ட்டர் ‘லாரா ஸிவ்’வின் கண்கள் அகல விரிந்தன.
‘‘ஐ டூ மை பெஸ்ட்’’ சொல்லிக்கொண்டே டேப் ரெக்கார்டரை ஆன் செய்தார்.
நான் என் கதையைச் சொல்ல ஆரம்பித்தேன்.
லாராவால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இப்படி ஒரு கதையை கனவிலும் அவர் நினைத்திருக்க மாட்டார். தேம்பித், தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார். என் நெருங்கிய நண்பர்கள்கூட அறிந்திராத உண்மையை, இப்போது உலகமே தெரிந்துகொண்டுவிட்டது.
‘‘ஆனால், செக்ஸ் என்றால் என்ன? இன்றுவரை எனக்குத் தெரியாது. என் வாழ்நாளில் ஒருபோதும் நான் செக்ஸ் இன்பத்தை அனுபவித்ததில்லை. அனுபவிக்கவும் முடியாது. நாங்கள் ஆண்களுக்காக, அவர்களின் தேவைக்காக மட்டுமே படைக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு கன்னிப் பெண் வேண்டும் என்பதற்காக ஐந்து வயதுக்குள்ளாகவே எங்கள் உறுப்பை அறுத்து, க்ளிட்டோரியஸை வெட்டி எறிந்துவிடுகிறார்கள். மீண்டும் எப்போது அவர்களுக்குத் தேவையோ, அதாவது முதலிரவுக்கு முன்பு வெட்டித் திறந்துவிடுகிறார்கள்.
3,000 ஆண்டுகளாக வெட்டவெளியில், எந்தவித மருத்தவ உபகரணங்களும் இன்றி, மயக்கமருந்துகூட இல்லாமல் இந்த அறுவை நடக்கிறது. சிலருக்கு கத்தி, கத்தரிக்கோல்கூட கிடைக்காது. கூமையான பாறைக் கற்கள்தான்.
நான் பிழைத்துவிட்டேன். ஆனால், லட்சக் கணக்கான என் சகோதரிகள்? அறுவையின்போது சிலர், அறுவைக்குப் பின் நோய்த் தொற்று ஏற்பட்டு சிலர், அப்படியே உயிர் பிழைத்தாலும் குழந்தைப் பேற்றின்போது சிலர் என அடுக்கடுக்காய் செத்துப் போகிறார்களே! அவர்களை யார் காப்பாற்றுவது?
மத அடிப்படைவாதிகளால், என் உயிருக்கு ஆபத்து என்று நண்பர்கள் அஞ்சுகிறார்கள். இருக்கட்டும் அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. பெண்களின் பிறப்றுப்பை சிதைக்கவேண்டும் என்று குரானில் எங்காவது கூறப்பட்டிருக்கிறதா? சொல்லுங்கள்!’’
-பேட்டி வெளியான பிறகு வந்த அழைப்புகளை அடுத்து, ஐ.நா. அரங்கில் இப்படித்தான் பேசினேன்.  இப்போது, பெண் உறுப்பு சிதைத்தலுக்கு எதிரான இயக்கத்தின் சிறப்புத் தூதுவராக ஐ.நா என்னை நியமித்திருக்கிறது.
அடிப்படைவாதிகளால், என் உயிருக்கு ஆபத்து இருப்பதும் தெரியும். முதலில், அந்தக் கிழவனிடமிருந்து கடவுள் என்னைக் காப்பாற்றினார். பிறகு சிங்கத்திடமிருந்து. அவர் என்னை உயிரோடு வைத்திருப்பதற்கான காரணம் இதுதான். ஒரு நாள், இந்தக் கொடுமையிலிருந்து அணைத்துப் பெண்களும் வெளியேறி சுதந்திரம் பெறுவார்கள்.
வாரிஸ், அதற்காகத்தான் உழைத்துக்கொண்டிருக்கிறாள்.
________________________________________________________
-ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிகையில் வெளியான கட்டுரையின் அடிப்படையில் மொழிபெயர்க்கப்பட்டது.
குறிப்பு -1:
இந்தக் கட்டுரைக்குப் பிறகு, ‘டெஸர்ட் ஃப்ளவர்’ என்கிற வாரிஸ் டேரியின் டாகுமென்ட்டரி படத்தைப் பார்த்தேன். அதில் மூன்று வயதில் தனக்கு கந்து அகற்றம் செய்யப்பட்டதாக வாரிஸ் கூறுகிறார். வாரிஸ் டேரியின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் ஐந்து வயது என்றுதான் உள்ளது. அதேபோல், ஒய்.எம்.சி.ஏ.வில் சோமாலியப் பெண்ணுடன் தங்கியதாக ரீடர்ஸ் டைஜஸ்ட் குறிப்பிடுகிறது. ஆனால், படத்தில் வெள்ளைக்காரப் பெண் வருகிறார்.
ரீடர்ஸ் டைஜஸ்ட், பள்ளிக்கூட வாசலில் போட்டோகிராபர் Mike Goss-ஐ வாரிஸ் சந்தித்ததாக எழுதியிருக்கிறது. ஆனால், படத்தில் மெக்டொனால்டில் சந்திப்பதாக வருகிறது. வாரிஸின் அதிகாரப்பூர்வ இணையதளம் உள்ளிட்டவை போட்டோகிராபர் டெரன்ஸ்’தான் வாரிஸை கண்டெடுத்ததாக சொல்கின்றன. மைக் பற்றிய குறிப்புகள் காணப்படவில்லை.
படத்தில், மொகாதிஷுவுக்கு தப்பியோடும் வாரிஸ், வழியில் ஒரு நள்ளிரவில் லாரியில் பயணம் மேற்கொள்கிறார். அப்போது ஒருவன் அவளை கற்பழிக்க முயற்சிக்கிறான். இது ரீடர்ஸ் டைஜஸ்ட் கட்டுரையில் இடம்பெறவில்லை. அதேபோல, பாஸ்போர்ட் வேலிடிடிக்காக அங்கிருக்கும் வெள்ளைக்காரர் ஒருவருடன் கல்யாணம் ஆனதுபோல் நடித்து அதிகாரிகளை நம்ப வைக்கிறார் வாரிஸ்.
கணவனாக நடிப்பவர் வாரிஸை சின்ஸியராக காதலிக்கிறார். ஆனால், வாரிஸால் அதை ஏற்கமுடியவில்லை. இதனிடையே டிஸ்கொதேவில் சந்தித்த தனா என்கிற கருப்பு இளைஞனுடன் வாரிஸுக்கு காதல் பிறக்கிறது. அவள் கர்ப்பமாகிறாள். பிறகு முறைப்படி டைவர்ஸ் பெற்று தனாவுடன் இணைகிறாள். இதுவும் ரீடர்ஸ் டைஜஸ்ட்டில் இல்லை.
குறிப்பு -2
பெண் உறுப்பு சிதைப்பு என்பது பெண்ணின் நரம்புகள் குவிந்த கந்து முனையை வெட்டி அகற்றுவதாகும். இது சோமாலியா உள்ளிட்ட ஆப்பிரிக்கப் பழங்குடி மக்களிடையே சிறுமிகளுக்கு நடைபெறும் ஒரு சடங்கு. கந்து அகற்றம் நடத்தப்பட்ட ஒரு பெண், வாழ்வில் ஒருபோதும் கலவி இன்பத்தை அனுபவிக்க முடியாது. அவள் கலவிக்குத் தகுதியானவளாக இருந்தாலும் அப்பெண்ணால் கலவி உச்சநிலையை அடைய முடியாது.
ஆப்பிரிக்காவில் 28 நாடுகளில் இந்த வழக்கம் தற்போதும் பின்பற்றப்படுகிறது. 1999-&ம் ஆண்டின் கணக்குப்படி, 13 கோடி பெண்களுக்குக் கந்து அகற்றம் நடத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. மேலும், நாளொன்றுக்கு 6,000 பெண்கள் இதற்கு ஆட்படுவதாகவும் சொல்கிறது. பிளேடு, கத்தி, உடைந்த கண்ணாடிச் சில்லுகள் மூலம்தான் கந்து அகற்றப்படுகிறது.
இதில் மூன்று வகையான முறை கடைபிடிக்கப்படுகிறது.
1. பெண்ணின் கந்து முனையை மட்டும் வெட்டி விடுதல்.
2. கந்து முனை மற்றும் புழையின் இரு பக்கத்திலும் உள்ள இதழ்களை வெட்டு விடுதல்.
3. கந்து முனையை அறுத்து, இதழை அறுத்து, புழையின் மேல்பகுதியை நூலால் தைத்துவிடுதல்.